ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!


ஸ்பெஷல் 1
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
 
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

விழுப்புரம் மாவட்டத்தின் வழுக்கும் சாலைகளில் இருந்து விலகி, சறுக்கும் சாலைகளில் அலுங்கிக் குலுங்கி நகர்கிறது வண்டி. ஆயுளுக்கும் தார் வாசனை முகர்ந்திராத மண் சாலையில், தொடர்ச்சியான மழைக்குத் தேய்ந்து கூர்மையான கற்கள்தான் பதம் பார்க்கக் காத்திருந்தன. ஒரு மாட்டு வண்டி மட்டுமே போகக்கூடிய வண்டிப் பாதையில், இருபுறமும் முள் செடிகள். வண்டிக்கு வழிவிட்டு ஒருவர் ஒதுங்கி நின்றாலும் காதுக்குள் முள் ரகசியம் பேசும் அல்லது ரத்தம் பார்க்கும். இரவுப் பயணமெல்லாம் சாத்தியமே இல்லை என்பதை உணர்த்தின... இல்லாத தெரு விளக்குகள். உருத் தெரியாத பெயர்ப் பலகையில் வெளாமை கிராமம் இனிதே வரவேற்றது!

மெதுவாக ஊருக்குள் நுழைந்த வாகனம் முதல் வீட்டு வாசலிலேயே நின்றது. அடுத்து டயர் பிடித்து அழைத்துச் செல்ல சாலை கிடையாது. வாசல் கதவு பாதி மறையும் அளவுக்குக் கூரை வேயப்பட்ட குடிசை வீட்டின் கதவு தட்டிய விஜயகாந்த்தை எதிர்கொண்ட அம்மணி முகத்தில் ஆச்சர்யத்தைவிட அதிர்ச்சியே அதிகபட்சம். ''வாங்க... வாங்க!'' என்று கையெடுத்துக் கும்பிட்டவருக்குப் பதில் வணக்கம் வைத்தவர் ஆடு, மாடு, கன்னுக்குட்டி, வெள்ளாமைகளின் நல விசாரிப்புகளை அடுக்கிக்கொண்டே போக, உறைந்தேவிட்டார் அந்த உள்ளூர்க்காரர்.

தந்தியில்லாத் தகவல் ஒளிபரப்பு மூலம் ஊருக்குள் தகவல் பரவ, எட்டுப்பட்டி பஞ்சாயத்துக்குச் சற்றும் குறைவில்லாத கூட்டம் கேப்டனைச் சுற்றி வளைத்தது. ''ஜீன்ஸ் பேன்ட் போட்ருக்காப்ல. காலை நீட்டி மடக்கி உக்காரச் சிரமமா இருக்கும். பிளாஸ்டிக் சேர் எடுத்துட்டு வாடா டோய்!'' என்று குரல் பறந்தது. விஜயகாந்த்துக்கு மட்டும் இடம் கொடுத்து, சுற்றி வளைத்து வெள்ளமாகப் பரவிவிட்டார்கள் வெளாமை மக்கள். அறிவிக்கப்படாத ஊர்ப் பஞ்சாயத்து, கேப்டன் தலைமையில் கூடியது.

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

''சும்மா உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். வரும்போதே ஊருக்கு ரோடே இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இந்த ரோட்டுக்கு பஸ்ஸூ... அட! மினி பஸ்கூட வராதுதானே?''

''ஆமாங்க! அஞ்சாறு கிலோ மீட்டர் நடந்து மெயின் ரோட்டுக்குப் போய்தான் பஸ் பிடிக்கணும். எப்பவாவது ஆட்டோக்காரங்க ஊருக்குள்ளாற வருவாங்க. அதுவும் இப்ப மழைக்கு ரோடு பேந்து கெடக்குறதுனால, அவங்களா மனசுவெச்சு இறங்குனாதான்...'' என்று சரளமாக நிலைமையை விவரித்த ஒரு பெண் சட்டென, ''நீங்கதான் எங்க ஊருக்குள்ள வந்த முதல் தலைவரு!'' என்றார். உடனே 'ஹோ!' என ஆர்ப்பரித்துக் கை தட்டத் தொடங்கிவிட்டனர் வெளாமை மக்கள்.

''தேர்தல் சமயத்துல ஓட்டு கேக்குறப்ப மட்டும்தான் கிராமத்துப் பக்கம் எட்டிப் பாக்குறதுனு எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுவெச்சிருக்காங்களே! அதுவும் உங்க ஊரு மாதிரி ரோடே இல்லாம இருந்தா, தேர்தல் சமயத்திலும் உங்களுக்கு வணக்கம் வைக்க மாட்டாங்க. 'நாலு அல்லது அஞ்சு கிராமங்களை இணைச்சு, சிறு நகரங்களா மாற்ற வேண்டும்'னு பெரியார் சொன்னதா படிச்சிருக்கேன். அட, அது செய்யலைன்னாலும், இருக்கிற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளையாச்சும் சரிவர செஞ்சு கொடுக்கணும்ல.

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

நான் உங்ககிட்ட இப்ப ஓட்டு கேட்டு வரலை. உங்க பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான் வந்திருக்கேன். ஊர்ல ரேஷன் கடை இருக்கா?'' என்று கேட்டார்.

''பக்கத்து ஊர்லதான் கெடக்கு. அந்த ஊருக்கும் சரியான ரோடு வசதி இல்லை. குத்தங்குறைகளை அரசாங்கத்துக்கு மனுவா எழுதிக் குடுக்குற அளவுக்கு நாங்க ஏறி வந்துட்டோம். ஆனா, கோரிக்கைகளை நிறைவேத்துற அளவுக்கு அரசாங்கம்தான் இறங்கி வர மாட்டேங்குது!'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

''தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்கள்ல இதுதாங்க பிரச்னை. கிராமத்துல இருக்குற 65 சதவிகித மக்கள்தான் நகரத்தில் இருக்கும் 35 சதவிகித மக்களின் சாப்பாட்டுக்குப் படியளக்குற சாமிங்க. அதிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இருக்குற கோடிக்கணக்கான மக்கள் விவசாயக் கூலிகள்தான். விவசாயத் தொழில் நொடிச்சுப்போனா, வேற வழியே இல்லாம நீங்களும் டவுன் பக்கம்தான் ஓடியாரணும். ஒண்ட இடமில்லாம, ஒதுங்க நிலமில்லாம சொந்த நாட்டுலயே அகதி கணக்கா வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு. இதுல இருந்து உங்களைக் காப்பாத்த வேண்டிய கடமை ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத்தான். அந்தம்மாதான் டவுன் கான்வென்ட்ல படிச்சு வளர்ந்தவங்க... இந்த ஐயா, தஞ்சாவூர் பக்கத்துல இருந்து புறப்பட்டு வந்தவர்தானே. இவருக்குத் தெரியாதா உங்களுக்கு இருக்குற நோக்காடும் வேக்காடும். நாட்டுக்குள்ள ஆயிரம் பிரச்னை இருந்தாலும் உங்களைத்தானே முதல்ல கவனிக்கணும். சுதந்திரத்துக்குப் பிறகு உணவுப் பஞ்சத்துல தவிச்ச நாட்டுக்கு ராத்திரியும் பகலுமா நிலத்துல பாடுபட்டு தன்னிறைவைத் தேடிக் கொடுத்தவங்க நீங்க. உங்களை அலட்சியப்படுத்திட்டு எந்தக் கட்சியும் தங்கள் லட்சியத்தை அடைஞ்சிட முடியாது!''

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

''சபாஷ் தலைவா!'' என்று சலாம் போட்டார் குத்தவைத்திருந்த ஒரு முண்டாசுப் பெருசு.

உற்சாகமான விஜயகாந்த், அடுத்த அத்தியாயத்தைச் சின்ன செருமலுடன் தொடங்கினார். ''தர்மபுரி கதையைக் கேளுங்க. அங்க பெண்ணாகரம் வட்டத்துல மலையூர்னு ஒரு கிராமம். பேருக்கேத்த மாதிரி மலையில இருக்கிற ஊர்ல இருந்து சமவெளிக்கு வரணும்னா, பாப்பாரப்பட்டிக்கு வரணும். கவர்மென்ட் ஆபீஸ் எதுக்கும் வரணும்னா, பெண்ணாகரம்தான். மாவட்டத் தலைநகரம் அவங்களுக்கு தர்மபுரி. மலையூர்ல இருந்து 5 கிலோ மீட்டருக்கு ரோடு போட 8 வருஷத்துக்கு முந்தி 70 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கு அரசாங்கம். ஆனா, இதுவரை ஒரு கிலோ மீட்டருக்குத்தான் ரோடு போட்டிருக்காங்க. ஒதுக்கிய நிதி பத்திரமா இருக்கா என்னன்னுகூடத் தெரியலை. 'என்ன காரணம்?'னு கேட்டா, 'ரோடு போடுற இடம் வனத் துறைக்குச் சொந்தமானது. அவங்க கொடுக்க மாட்டேங்குறாங்க'ன்னு சொல்லுது பொதுப் பணித் துறை. வனத் துறையைக் கேட்டா, 'மாற்று இடமும் நிதியும் கொடுத்தா, அந்த நிலத்தைத் தரத் தயார். ஆனா, அதற்கான நடவடிக்கையில் அவங்க ஆர்வம் காட்டலை'ன்னு சொல்றாங்களாம். மொத்தத்துல மலையூர் மக்கள் தினமும் மலை ஏறி இறங்கிட்டே இருக்காங்க. ஏன்யா, அது என்ன பாகிஸ்தான் பார்டரா? ரெண்டு துறை அதிகாரிகளும் அரை மணி நேரம் உட்கார்ந்து பேசி உருப்படியா ஒரு நடவடிக்கை எடுத்தா, ஒரு கிராமமே சந்தோஷப்படுமேய்யா! அதிகாரம் பண்றவங்க ஒரு வாரம் அந்தக் கிராமத்துல தங்கிப் பார்த்தாதான் அந்த வலி தெரியும். சரி, அதை விடுங்க... 100 நாள் வேலை திட்டத்துல உங்களுக்கு சம்பளம்லாம் ஒழுங்கா வருதா?'' என்று கேட்டார். பலரும் அந்தக் கேள்வியே புரியாமல் மலங்க மலங்க விழித்தார்கள்.

''கிராமப்புற மக்களின் வசதிக்காக வருடத்தில் 100 நாள் சம்பளத்துடன் வேலை தரணும்னு மத்திய அரசாங்கம் ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்திட்டு வர்றாங்க. தமிழ்நாட்டுல ஆறு மாவட்டங்களில் மட்டும்தான் இந்தத் திட்டம் அமலில் இருக்கு. இந்திய தணிக்கைத் துறையின் சமீபத்திய அறிக்கையில் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசாங்கம் செலவழிக்கவே இல்லைன்னு தெரிவிச்சிருக்கு. 6 லட்சம் குடும்பங்களின் பெயர்களைப் பதிவு செய்து சுமார் 2,000 பேருக்குத்தான் 100 நாள் வேலை கொடுத்திருக்காங்களாம். இந்தத் திட்டத்தின் நோக்கத்தையே தமிழக அரசு சரியாப் புரிஞ்சுக்கலைன்னு அந்த ஆடிட்டிங் ரிப்போர்ட் சொல்லுது. கிராமப்புற மக்களுக்காகக் கொண்டுவர்ற இது போன்ற ஒண்ணு ரெண்டு நல்ல திட்டங்களையும் இப்படி வீணாக்கத்தான் இவங்களுக்கு ஓட்டு போட்டு உக்காரவெச்சிருக்கீங்களா?'' என்று விஜயகாந்த் திடீரென ஆவேசம் கூட்ட, அனல் ஏறத் தொடங்கியது!

வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!

''ஆமா தம்பி. இதே கதைதான் பஞ்சாயத்துக்கு ஒதுக்குற நிதியிலயும். ஊர்ல கக்கூஸ் வசதியில்லை, ஆஸ்பத்திரி இல்லை, நல்ல தண்ணி வசதி இல்லை. வந்து என்ன, ஏதுன்னு பாரு தம்பி!'' என்று அழைத்தார் ஒரு பெரியம்மா.

''அம்மா! இப்ப நான் செய்யுற இடத்துல இல்லை. கேட்குற இடத்துலதான் இருக்கேன். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிச்சயமா இருக்கணும்னு சொல்றாங்க. ஆனா, எல்லா இடத்திலயும் அது இல்லை. இருக்குற ஒரு சில இடங்களிலும் மருத்துவ வசதியும் மருத்துவர்களும் முழுசா இல்லை. வெறும் நர்ஸூகளை வெச்சு என்ன பண்ணச் சொல்றீங்க? சமீபத்துல ஒரு மருத்துவர்கள் சங்கம், 'எங்களைப் பிரசவம் பார்க்கக் கட்டாயப்படுத்தக் கூடாது'ன்னு வித்தியாசமா ஒரு கோரிக்கை வெச்சிருக்காங்க. 'ஏன் இப்படிச் சொல்றாங்க'ன்னு விசாரிச்சா, பிரசவம் பார்க்கிறதுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாம, பல இடங்களில் பிரசவம் பார்க்கக் கட்டாயப்படுத்துறாங்களாம். பிரசவத்துல ஏதாவது சிக்கல் வந்தா, 'நாங்கதானே பலிகடா ஆகுறோம்'னு சொல்றாங்க. ஒரு போன் போட்டா, அந்த வசதி, 'அம்மா ஐயா'ன்னு ஓடி வந்துரும். ஆனா, அந்த ஒரு நிமிஷம் செலவழிக்க ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு நேரம் இல்லாததால, பிரசவம் சிக்கலாகி, ஏகப்பட்ட இறப்புகள். ஏழைகளின் உயிரோடு விளையாடுற இந்த ஆட்டத்தை உடனே நிறுத்தணும்!'' என்று சீரியஸாக முடிப்பவர், கொஞ்சம் ரிலாக்ஸாக கிராமத்தை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்.

அவர் பின்னால் மொத்த கிராமமும் அணிவகுத்துச் செல்கிறது. சுற்றுலாத் தல விசிட் கணக்காக ஒவ்வோர் இடத்துக்கும் பல குற்றங்குறைகளை அடுக்குகிறார்கள் பாவப்பட்ட பப்ளிக்.

''தினமும் பேப்பரை விரிச்சா, 'அங்கே ஆர்ப்பாட்டம்... இங்க போராட்டம்... சாலை மறியல்!'னுதான் செய்தி வருது. எங்களைப் போல கட்சிக்காரங்க நடத்துற போராட்டங்களைச் சொல்லலை. கட்சி சார்பில்லாத பொதுமக்களே, சாலை, மின்சாரம், ரேஷன் கடை, பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி, சாக்கடை வசதிகள் கோரி நித்தமும் போராடுறாங்களே... அந்த மன்றாட்டங்களைச் சொல்றேன். வீட்டுக்குள்ளே அமைதியா இருக்க வேண்டிய அப்பாவி ஜனம், ஏன் ரோட்டுக்கு வரணும்?

பாலம் திறக்கிறதுக்கும் பஸ் விடுறதுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வசதியான நாள் பார்க்க வேண்டியதில்லை. அரசியல் பார்க்காம, ஆள் பார்க்காம, நமக்கு இந்த ஊர்க்காரன் ஓட்டுப் போட்டானான்கிற கணக்கு பார்க்காம நல்லது பண்ணணும். இது என்னோட ஆசை. மத்த கட்சிகளுக்கு மட்டும் நான் சொல்லலை, எனக்கும் சேர்த்துத்தான் சொல்லிக்கிறேன்!'' என்று விஜயகாந்த் சொல்லிக் கை கூப்ப, ''நூத்துல ஒரு வார்த்தை கண்ணு. 'நான் செய்யிற இடத்துல இல்லை. கேக்குற இடத்துல இருக்கேன்'ன்னு சொன்னியே. சீக்கிரமே செய்ற இடத்துக்கு வா!'' என்று கண் கலங்க ஆசீர்வதிக்கிறார் அந்தக் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

பரவசமாகத் தாழ் பணிந்து அவர் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள்கிறார் தே.மு.தி.க தலைவர்!

 
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!
வாராவாரம் ஊர்வலம்... களத்தில் கேப்டன்!