
சென்னை: பாண்டவர் அணியால் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்று எப்படி கருதுகிறீர்கள் என்று விஷால் அணி விளக்கம் அளித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் இறங்கி உள்ளன.
சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நளினி உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கோவை சரளா, பிரசன்னா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையே சமரசம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய சங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. வருகின்ற சனிக்கிழமை (10.10.2015) அன்று இரு அணியினரையும் அழைத்து பேசி ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட ஒரு கூட்டுக்குழு முயற்சி செய்கிறது.
இந்நிலையில், விஷால் அணி இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால், இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்தப் பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் (பாண்டவர் அணி) மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்தபோது, நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி, அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்! ஒற்றுமையாகவும் இருக்கிறீர்கள்! இப்படி, உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது?
நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில், பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்த கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்போம்.
இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.