
வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
நல்லதோர் வீணையை...
##~## |
ஏப்ரல் மாதம் இருபத்தெட்டாம் தேதி, இரவு பத்தரை மணியளவில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
''அண்ணா! நாளைக்குக் காலேல, ஒன்பது மணிக்கு - ஏவி.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில்ல - 'ராணா’ பட பூஜை; நீங்க அவசியம் வரணும்!''
- ரஜினிதான் பேசியது.

'அவ்ளோ சீக்கிரம் காலேல - என்னால ரெடியாக முடியாதே... மருந்து மாத்திரைஎல்லாம் சாப்டணும்... நான் வரணும்னு - நீர் ஆசைப்படறீரா?’
- இப்படி நான் கேட்டவுடன், ''நீங்க வராம எப்படி? நியாயமா, நான் நேர்ல வந்துதான் கூப்டிருக்கணும்; அதுதான் மரியாதே! BUT உடம்பு கொஞ்சம் சரி யில்லேண்ணா எனக்கு... அதான்!''
- என்று ரஜினி சொல்லும்போதே, வழக்கமாக அவர் குரலில் உள்ள குதூகலம் - MISSING!
விழாவிற்கு, மறுநாள் சென்றேன்; என்னை ஆரத்தழுவி வரவேற்றார்.
அப்பொழுதும் கவனித்தேன் - ரஜினி, ரஜினியாக இல்லை; ஏதோ ஓர் உபாதை, பாதாதிகேசம் படர்ந்து அவரது இயல்பு நிலையைப் பாதித்திருப்பதாக என் உள் மனம் உணர்த்தியது.
'ஹஹ்ஹஹ்ஹா’ என்று - 'மாயா பஜார்’ எஸ்.வி.ரங்கராவைப்போல் ஓர் அவுட்டுச் சிரிப்பும் -
'அண்ணா! அண்ணா!’ என்று என்னை அடிக்கொருதரம் அழைத்து அளவளாவுகையில், துரிதகதியில் உதடுகள் துப்பும் தமிழ்ச் சொற்கள் தலைபோகிற அவசரத்தில் வந்து விழுகின்ற அழகும் -
சற்றே புருவங்களைச் சுருக்கி, நம் கருத்துகளுக்குச் செவிசாய்க்கும் சிரத்தையும் -
இரு இமைகளுக்கிடையே, இரண்டு தணற் துண்டுகளைப் பொருத்தினாற்போல் - சதா கனன்றுகொண்டிருக்கும் கருவிழிகளின் தகிப்பும் -
காஞ்சி மஹாப் பெரியவாளை நமக்கு நினைவூட்டுகிறாற்போல், ஓர் ஆன்மிக வெளிச்சத்தைப் பிலிற்றும், அருளார்ந்த அறிவுசார்ந்த கூர்த்த நோக்கும் -

இத்யாதி; இத்யாதி... அன்றைய ரஜினியிடம் - அவர் ஒப்பனையில் வந்தபோதும், காணக் கிடைக்காதுபோய் - அவரைப் புகைபடிந்த ஓவியமாய்க் காண நேர்ந்தது!
எனது எண்ண ஓட்டம் - அநேகமாக அந்த விழாவிற்கு வந்திருந்த எல்லோரது எண்ண ஓட்டமாகவும் இருந்திருக்கக்கூடும்; ஆதலால்தான் - களிப்பும் கலகலப்புமாக இருக்க வேண்டிய நேரத்தில், ஓர் இறுக்கம் -
நாம் வாயால் ஊதினால், நிலைக் கண்ணாடியின் மேல் ஒரு MIST படர்ந்திருக்குமே - அப்படிப் படர்ந்திருந்தது பலர் பார்வையில்!
இவ் விழாவிற்கு ஓரிரு மாதங்கள் முன்புதான் -
ரஜினி வீட்டிலிருந்து எனக்கோர் அழைப்பு வந்தது; திருமதி லதா ரஜினிகாந்த்தான் பேசினார் தொலைபேசியில்.
''வாலி சார்! நம்ம சாருக்கு - பாலசந்தர் சார் 'ரஜினிகாந்த்’னு பேர் வெச்சு, இன்றோடு முப்பத்தஞ்சு வருஷமாகிறது... இன்று அந்தப் பேருக்கான BIRTH DAY. நீங்க அவசியம் சாப்பிட வரணும்... வந்தா - I WILL FEEL AS IF I HAVE BEEN HIGHLY BLESSED!'
நான் அவ் விருந்துக்குப் போனேன். அற்புதமான சாப்பாடு; ஆத்மார்த்தமான விருந்தோம்பல்!
நூறு விழுக்காடு - ரஜினி ரஜினியாக இருந்தார் அன்று - SO CUTE; SO CHEERFUL; WITH ECSTASY AND ENERGY!
- இப்படி இருந்த ஒருவர், இத்துணை குறுகிய காலத்திற்குள், எப்படி இப்படிப் பொலிவிழந்து வலுவிழந்துபோனார் என்று எண்ணுங்கால் -
விந்தை ஒரு புறமும் விசனம் ஒரு புறமும் மேலிட்டு நின்றாலும் -
நான் என் நெஞ்ச அலமாரியில் அடுக்கிவைத்திருக்கும் நினைவு ஏடுகளை இப்போது, தூசி தட்டிப் பார்க்கத் தோன்றுகிறது!
80-ல் -
நானொரு நாடகம் போட்டேன்; திரு.பத்ரி என்பவரின் மூலக் கதையை விலை கொடுத்து வாங்கி -
நான் மேடை நாடகமாக்கினேன்.
கதை இதுதான்:
புதுச்சேரியில் பாரதியார் இருந்தபோது - கனகலிங்கம் எனும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்குப் பூணூல் அணிவித்தார்.
அந்தக் கனகலிங்கத்தின் பேத்திதான் கண்ணம்மா என்று கற்பனையாக ஒரு பாத்திரத்தைப் படைத்துக் கதை நகருகிறது.
திருவல்லிக்கேணியில் உள்ள 'குயில் குப்பம்’ என்னும் இடத்தில் இந்தக் கண்ணம்மா வாழ்கிறாள்.
புருஷன் - வழக்கம்போல் ஒரு குடிகாரனாக இருக்க -
தன் மகனைப் படிக்கவைக்கவும், பிழைப்பு நடத்தவும் வேண்டி -
கண்ணம்மா பூ வியாபாரம் செய்கிறாள். தினமும் மாலை - பூக் கூடையை எடுத்துக்கொண்டு திருவல்லிக் கேணியில் உள்ள வாடிக்கையாளர்கள் வீட்டுக்குப் போகு முன் -
கடற்கரைக்குச் சென்று -
பாரதியார் சிலைக்குப் பூப்போடுவது, கண்ணம்மா கடைப்பிடித்து வரும் நெடுநாள் பழக்கம்.
அவளுக்கு பாரதிதான் எல்லாம் - மாதா, பிதா, குரு, தெய்வம் என்று!
பாரதியார் சிலையோடு பேசுவாள். வீட்டு நடப்பு; நாட்டு நடப்பு; சுதந்திர வெளிச்சம் இன்னும் சேரிகளுக்குள் படாமல் அடித்தட்டு மக்கள் படுகின்ற அவஸ்தைகள், அவலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுப் பிரலாபித்து -
'நெஞ்சு பொறுக்குதிலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!’
- என்று பாடுவாள்!
ஒருநாள், இவளது பரிதவிப்பைப் பார்த்து -
சிலையாயிருந்த பாரதியார் உயிர்பெற்று கண்ணம்மாவோடு 'குயில் குப்ப’த்துக்கு வந்து தங்குகிறார்.
பத்திரிகை நிருபர்கள் படையெடுத்து வருகிறார்கள் பாரதியாரைப் பார்க்க!
ஒரு நிருபர் கறுப்புக் கண்ணாடி அணிந்துஇருப்பார். பாரதியார் அவரைப் பார்த்து -
'எதற்காகக் கறுப்புக் கண்ணாடி அணிந்துஇருக்கிறீர்?’ என்று கேட்பார்.
அதற்கு அந்த நிருபர் 'மெட்ராஸ் ஐ’ என்பார்.
உடனே பாரதியார் -
'காங்கிரஸ் ஐ என்கிறார்களே - அது என்ன?’ என்று வினவுவார்.
நிருபர் சொல்வார்: 'மெட்ராஸ் ஐ என்பது ஒரு நோய்; காங்கிரஸ் ஐ என்பது ஒரு கட்சி! மெட்ராஸ் ஐ - கண்ணை மட்டும் பாதிப்பது; காங்கிரஸ் ஐ மண்ணெலாம் பரவி நிற்பது!’
- இப்படி நாடகத்தின் உரையாடல்கள் நக்கலும் நையாண்டியுமாக இருக்கும்; சமூகம், என்னணம் சாதிகளை வளர்த்துச் சண்டையிட்டுக்கொண்டு குட்டிச்சுவராக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும்!
நாடகத்தில் கண்ணம்மாவாக - திருமதி. மனோரமா நடித்தார்கள்; அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார்கள் எனலாம்! பாரதியாராக திரு.'நாயர்’ ராமன் அவர்கள் அற்புதமாக நடித்து அசல் பாரதியாராகவே - AUDIENCE நெஞ்சில் போய் அப்பி நின்றார்!
சபாக்கள் நிரம்பி வழிய - மாதம் இருபது நாள்களுக்குக் குறையாமல் அந்த நாடகம் நடந்தது; நாடகத்தின் பெயர் 'INDIA TO DAY’!
ஒருநாள் இரவு பத்து மணிக்கு எனக்கொரு PHONE வந்தது.
''அண்ணா! MUSIC ACADEMY ல உங்க நாடகம் பாத்தேன்; ப்ரமாதம்; என்னெ என்னவோ பண்ணிருச்சு உங்க DIALOGUE எல்லாம்! இந்த நாடகத்துல நான் பாரதியாரா நடிக்கணும்... என்ன சொல்றீங்க?''
- இப்படி ரஜினி கேட்டதும் - நான் திகைத்துப்போனேன்.

அப்போதே அவர் சூப்பர் ஸ்டார். 'அன்னை ஓர் ஆலய’த்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டுக்கு என்னை வரவழைத்து - ''நாடகத்துக்குத் தகுந்த மாதிரி - என் பட வேலைகளை நான் தள்ளிவெச்சுக்கறேன்; நான் பாரதியாரா நடிக்கணும்; தமிழை - தினம் பிழையில்லாம உங்ககிட்ட பேசிக்காட்டறேன்!'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
தொடர்ந்து என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார். 'நாயர் ராமனை’ - எப்படி நான் காரண காரியமின்றி நிறுத்த முடியும்?
'இளையராஜாவின் மோதிரம்’ என்றொரு கதை எழுதி - ராஜாவே ஒருசில காட்சிகளில் அதில் வருவதாகவும் முடிவாகிஇருந்தது.
திரு.விவேக் சுந்தரம்தான் தயாரிப்பாளர்; திரு.எஸ்.பி.முத்துராமன்தான் இயக்குநர். என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்!
ஆரம்பித்து சில நாள்களில் - 'இளைய ராஜாவின் மோதிரம்’ பூஜையும், 'தினத் தந்தி’யில் முழுப் பக்க விளம்பரமும் வந்த பிறகு அதைச் சற்றுத் தள்ளிப்போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்தப் படத்தின் கதாநாயகன் திரு.வடிவேல் அவர்கள். இளையராஜாவும் படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக - GRAPHICS-ல் வருவார். படம் முழுக்க இன்னொரு முக்கியப் பாத்திரமாக வருவது -
திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி!
ஒருநாள் என் அருமை நண்பரும், நல்ல தமிழ் வசனங்களுக்காகத் தன் நெஞ்சையே தருபவருமான - பிரபல பட அதிபர் திரு. கே.ஆர்.ஜி. அவர்கள் -
என் வீட்டிற்கு வந்து ''ரஜினி இந்தக் கதையில் நடிக்க விரும்புகிறார். நான்தான் தயாரிக்கிறேன்; வாருங்கள், ரஜினி வீட்டுக்குப் போகலாம்!'' என்று என்னை அழைத்துப் போனார்.
வடிவேல்தான் ஹீரோ; ஆனால், இளையராஜாவிற்குப் பதிலாக ரஜினி படம் முழுதும் வருவார் ரஜினிகாந்த்தாகவே!
''அண்ணா! 'பாட்ஷா’ படத்தைக்கூடக் கொஞ்சம் தள்ளிவெச்சு - இந்தப் படத்தை முன்னாடிவிடலாம்னு பாக்குறேன்!
இதோ - இங்க உட்கார்ந்துக்கிட்டிருக்காரே - இவர்தான் டைரக்டர்! உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணையுண்டா?'' - என்று என்னை ரஜினி கேட்டார். அவர் சுட்டிக் காட்டிய டைரக்டர் திரு.கே.எஸ்.ரவிக்குமார்.
பிறகு - சில காரணங்களால் அந்தக் கதையை நான் கொடுக்கப் பிரியப்படவில்லை.
ரஜினி எனக்குப் பெரும் தொகை திரு. கே.ஆர்.ஜி-யிடமிருந்து உடனே பெற்றுத் தருவ தாகச் சொல்லியும் -
நான் ஏற்க மறுத்ததை அவர் வியப்போடு பாராட்டி -
''அண்ணா! நீங்கதான், சினிமாவ்ல சிங்கமான ஆளு! நான் நடிக்கத் தயாராயிருந்தும், உங்க கொள்கையில நீங்க உறுதியா நின்னுட்டீங்க; எனக்கு இதுல கொஞ்சம்கூட வருத்தமில்லே!'' - என்று கார் வரை வந்து வழியனுப்பினார்!
அடுத்தவர்; உணர்வுகளை அணுவளவும் ஊனப்படுத்தாத உத்தமர் திரு.ரஜினிகாந்த்!
அவர் படத்தைப் பார்க்க -
ஜப்பானிலும்; கொரியாவிலும்; தைவானிலும் 'க்யூ’ நிற்கிறது; இனியும் அதுபோல் நிற்கும்; விரைவில் நலம்பெற்று வந்து, அவர் வெள்ளித்திரையை ஆளுவார்!
ஏனெனில் -
'நல்லதோர் வீணையை - இறைவன்
நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை!’
- சுழலும்...