என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ரஜினிக்கு நான்தான் குரு!

யாகவா பேட்டி

ரஜினிக்கு நான்தான் குரு!
##~##

சென்னை மேடவாக்கத்தில் யாகவா முனிவருடைய வீடு மிகவும் பிரபலம்! 'பிரம்மஸ்தலம்’ என்று பெயர் சூட்டி, பிரமாண்டமாகக் கட்டிவைத்து இருக்கிறார். தன்னை பிரம்மாவின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் யாகவா முனிவரின் வீட்டு வாசலில் காவலுக்கு செக்யூரிட்டி கள். உள்ளே, யாகவா யாருடனோ போனில் உரக்கப் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்ததை அந்தப் பெரிய ஹால் எதிரொலித்துக்கொண்டு இருந்தது!

உள்ளே நுழைந்த நம்மைத் தோளில் கிடந்த துண்டை முறுக்கிவிட்டபடி வரவேற்றார்.

''துண்டை முறுக்கறதுதான் உங்க மேனரிசமா?'' என்றோம் லேசான பயத்துடன்.

''எது... இதைச் சொல்றியா? அந்த சிவசங்கர் பாபா எகத்தாளமா சிரிச்சா னேனு ரெண்டு போட்டேன். இன்னும் சொல்லப்போனா, என் சின்ன வயசுக் கோமணத்தை நினைவுபடுத்துறதுக்காகத் தான் இந்தத் துண்டைத் தோள்ல போட்டு இருக்கேன்!''

ரஜினிக்கு நான்தான் குரு!

''கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..?''

''நம்ம வாழ்க்கையில விளக்கறதுக்கு என்ன இருக்கு? திருச்செந்தூர் பக்கத்துல உள்ள அம்மன்புரம் கிராமத்துல பிறந்து, சோத்துக்கு வழி இல்லாமப் பிச்சை எடுத்தேன். பல நூறு கிராமத்து மக்கள் போட்ட பிச்சையில வளர்ந்த உடம்பு இது! எங்க அப்பாவுக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்ல நானும் ஒருத்தன். எங்களுக்குப் பூர்வீகப் பேரு ராம் - லெக்ஷ்மன். ஆச்சர்யமான ஒற்றுமை என்னன்னா, எங்க அப்பாகூட ரெட்டைப் பிறவி தான். அவர் பேரும் லெக்ஷ்மன்தான். எங்க அண்ணன் ராம். இப்ப பாம்பேல வணிகம் பண்றான்!''

''அந்தக் கோமணம் மேட்டர் பத்தி...''

''சொல்றேன்! என் வீட்டுல நான் தான் கடைசிப் பையன். நான் பிறந்தப்ப, குடும்பத்துல மோசமான வறுமை. என்னோட மூணு வயசில் அப்பா இறந்துட்டார். கொஞ்ச நாள் சோறு போட்டு, பல நாள் பட்டினி போட்டுனு எங்க அம்மா பயங்கரமா சிரமப்பட்டாங்க. ஒரு கட்டத்துல, தன் இடுப்புச் சேலையை ரெண்டா கிழிச்சி... ஒரு பாதியை என் இடுப்புல கட்டிவிட்டு, 'என்னால உனக்குக் கொடுக்க முடிஞ்சது இந்தக்கோமணம் தான்டா மகனே!’னு அனுப்பிவிட்டாங்க. அப்புறம், ஊரு ஊராப் பிச்சை எடுத்து, விறகொடிச்சு, சுடுகாட்லயும் மரத்தடியிலயும் தூங்கி வளர்ந்தேன். யாராவது கேட்டா, 'அநாதைப் பய’னு சொல்லிக்குவேன். பழசை மறக்கக் கூடாதுன்னுதான் இப்பவும் கோமணத் துண்டைத் தோள்ல போட்டு இருக்கேன்.

யார் என்ன செய்ய முடியும் மகனே..? அவதாரங்கள் அடிபட்டு வளரணும்கிறது விதி! தேவர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..? 'இரண்டும் இணையக் கண்டேன். துளி நீரைத் தூக்கி எறிந்தார் கருவறையில். பூட்டியேதான் சாவியை எடுத்தார் வெளியே! நாள் எண்ணிப் பிறந்தார் கண்டேன். நாள் எண்ணி இறந்தார் யாரேனும் உண்டோ..?''

''புரியலீங்களே...''

''உங்க உலகமே கெட்ட வழியில, கழிவுல, இடுக்குல பிறந்தவங்கதானே! மரம் செத்தா வீட்டில் அடுக்கிவைக்கிறே! நீ செத்தா சுடுகாட்டுக்கில்ல போறே? இதை ஒப்புக்கிறியா இல்லையா?''

ரஜினிக்கு நான்தான் குரு!

''அது சரிங்க... அதென்ன ஊடால 'உங்க உலகம்’னு ஒரு வார்த்தை சொன்னீங்க?''

''எலேய்... நான் பிரம்மனோட அவதாரம்! இது எனக்கு 54-வது பிறவி. தேவர்களும் மேலோகத்து முனிவர்களும் சொல்றதை உங்க உலகுக்குக் கொடுக்க வந்த படைப்புக் கடவுள். என் நெத்தியைப் பார்த்தியா? கோடுகள். அதுதான் எனக்கு அடையாளம். பள்ளிக்கூட வாசலைத் தொடாத நான், உங்களுக்காக 'இனான்ய மொழி’யில் தேவர் வாக்கு களை எழுதிக்கிட்டு இருக்கேன். வெளியே தெரியாமஇருக்க ணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா, இப்ப கொஞ்ச காலமாதான் பிரபலமாக்கிட்டீங்க நம்மளை!''

''ஆன்மிக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தானுங்களே! சரிங்க, நீங்களும் சிவசங்கர் பாபாவும் மோதிக்கிட்டதே விளம்பரத்துக்காக நடந்த செட்டப் நாடகம்னு ஒரு பேச்சு இருக்குங்களே..?''

(555 சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டரால் பற்றவைக்கிறார்...) ''நீ வேற! அதெல்லாம் சும்மா. அந்த சிவசங்கரனை இங்கே என் இடத்துக்கே கூட்டிவந்து பேட்டி எடுத்தப்பவும் ரெண்டு போட்டு அனுப்பினேன். இப்பவும் துண்டாலயே வெச்சேன்... பாத்தீங் கள்ல!''

''உங்களுக்கு சினிமா பிடிக்காதுனு கேள்விப்பட்டு இருக்கோம். ஆனா, சினிமாக்காரங்களைப் பிடிக்கும் இல்லையா..?''

(ஊடுருவிப் பார்க்கிறார்.) ''பல பேரு வர்றாங்க. வாசல்ல நின்னபடி தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். போன மாசம் ரஜினிகூட வந்தாரு... நான் கோபமா பேசிட்டேன் அவர்கிட்ட!''

''அவர்கிட்ட உங்களுக்கு என்ன கோபம்..?''

''எழுதிவெச்சுக்கங்க... ரஜினிகாந்த் சாதாரண ஆளில்லே! அவர் ஒரு அவதாரம். ஆன்மிகத்துல வளர்ந்து, உலக லெவல்ல ஆன்மிகத்துக்கு அதிபதி ஆவார். எனக்கு இது தெரிஞ் சதும், நீர் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினேன்.

'எனக்குள்ள அடிக்கடி நான் அவதாரம்னு உணர்றேன். ஆனா, வெளியே சொன்னா நம்பமாட் டாங்க... அதான் சொல்லலை’னு என்கிட்டே சொன்னார் ரஜினி. எனக்குச் சட்டுனு கோபம் வந்துடுச்சு! 'வெளியே சொல்லிடு. நீதான் கல்கி. இந்த உலகை ஆன்மிகப் பாதையில அழைச்சுக்கிட்டுப் போக வந்த ஆன்மிகவாதி நீ!’னு அறிவுரை சொன்னேன். அதோட ரஜினியோட சட்டையைக் கழட்டிப் பார்த்தேன். அவரோட இடது தோள்ல சங்கும் வலது தோள்ல சக்கரமும் இருக்கறதப் பார்த்தப்ப, 'கல்கி நீதான்னு உறுதியாயிடுச்சு’ன்னேன். அதற்கு ரஜினி 'நான் குருவாலதான் வெளிப்பட ணும்னு இருக்கு’ன்னார்.''

''அவரோட குரு யாருங்க?''

''வேற யரு? நான்தான். 2005-ம் வருஷத்துக்குள்ளே ரஜினி கல்கியா வெளிப்படுவார் என் மூலமா!''

- எஸ்.பி.அண்ணாமலை