லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். மேலும் பஞ்சதந்திரம் பட பாணியில் இதைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பேசிப் பதிவிட்டுள்ளார்.
அதில் "தரமான திரைப்படத்தைத் தாங்கிப்பிடிக்கத் தமிழ் ரசிகர்கள் என்றுமே தவறியதில்லை. திறமையான தரமான நடிகர்களையும்தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் `விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். திரு. அனிருத், திரு. கிரீஷ், எடிட்டர் திரு. பிளோமின், திரு. அன்பறிவ், திரு சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம். தம்பிகள் திரு. விஜய் சேதுபதி திரு. ஃபகத் பாசில், திரு. நரேன், திரு. செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படை வெற்றியின் முக்கியக் காரணம். கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்கை அதிரவைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய்க் காட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இயக்குநர் திரு. லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும் என் மீதும் இருந்த அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிமின் ஊழியன் உங்கள் நான்" என்று கூறியுள்ளார்.