Published:Updated:

"மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!”

நந்தா, த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தா, த்ரிஷா

இதைச் சிலர் அரசியல் ஸ்டன்ட், பல்டி எனச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

‘மெளனம் பேசியதே’ நண்பன், ‘புன்னகைப் பூவே’ ஹீரோ, ‘ஈரம்’ வில்லன் என நடிகர் நந்தாவின் திரைப்பயணத்தில் பல பரிமாணங்கள். சமீபத்தில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் டபுள் ஆக்‌ஷனில் அசத்தியிருந்தார். நந்தா, நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பரும்கூட. மிஷ்கின் - விஷால் சர்ச்சை முதல் நடிகர் சங்கப் பஞ்சாயத்துகள் வரை நந்தாவிடம் பல விஷயங்கள் பேசினேன்.
நந்தா
நந்தா

‘`நீங்க சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘`ஹீரோவா நிறைய படம் பண்ணினேன். வில்லனா நடிச்சு நல்ல பேர் வாங்கினேன். நிறைய தோல்விகள். ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைக் கத்துக்கொடுத்திருக்கு. நிறைய வலிகள். அந்த வலிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கஷ்டப்படும்போதுதான் நாம சரியா போயிட்டிருக்கோம்னு அர்த்தம். நான் நினைக்கிற வெற்றியை அடைய 20 வருஷமா போராடிட்டிருக்கேன். கஷ்டமா, சவாலாதான் இருக்கு. அதேசமயம் இந்த சினிமா வாழ்க்கை ரொம்ப அழகாவும் இருக்கு.’’

நந்தா
நந்தா

‘`ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வாழ்க்கை வரலாற்றுல நடிச்சிட்டிருக்கீங்க. எதற்காக இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தீங்க?’’

‘`திலீபனோட வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கணும் என்பது என் சினிமாக் கனவோட உச்சம். அதை எல்லோர்கிட்டேயும் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு நினைக்கிறேன். அதற்காகத்தான் அந்தப் படத்தை எடுத்திருக்கேன். இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்கப்படணும். விரைவில் அதை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்துடுவேன்.’’

"மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!”

‘`நீங்கள் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் பேரன் என்பதால் இதைக் கேட்கிறேன். ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது, போர் நிறுத்தத்துக்காக கருணாநிதியும் அரைநாள் உண்ணாவிரதம் இருந்தாரே... அந்தச் சம்பவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

‘` ‘அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்’ என இந்திராகாந்தியாலேயே பாராட்டப்பட்டவர் கலைஞர். ஈழ விடுதலைக்காகவே தன்னுடைய ஆட்சியை இழந்தவர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் ஒருங்கிணைந்தது. இன விடுதலைக்காகப் போராடும் போராளிகளையும் பயங்கரவாத அமைப்புகளாகப் பார்த்தனர். அப்போது புலிகளை ஒடுக்க இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கையோடு ஒருங்கிணைந்தது.

"மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!”

பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, போரை நிறுத்த, கலைஞர் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்குத் தொடர்ந்து பல அழுத்தங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். பல நாடுகள் இணைந்து நடத்திய இந்தப்போரை, ஒரு மாநில முதல்வரால் தடுத்து நிறுத்தமுடியாது என்பது புலிகள் உட்பட அரசியல் அறிந்தோர் எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில்தான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது, தன் எதிர்ப்பைக்காட்ட உண்ணாவிரதம் இருந்தார் கலைஞர். அப்போதுதான் போராயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம் என இலங்கை அரசு இந்தியாவுக்கு உறுதிகொடுத்தது. அந்தத் தகவல் மத்திய அரசு மூலம் வந்தபிறகுதான் தன்னுடைய போராட்டத்தைக் கலைஞர் அவர்கள் நிறுத்திக்கொண்டார். இதைச் சிலர் அரசியல் ஸ்டன்ட், பல்டி எனச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.’’

‘`அடுத்து ‘பரமபத விளையாட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘துப்பறிவாளன் -2’ படத்தில் என்ன கேரக்டர் ?’’

‘` ‘பரமபத விளையாட்டு’ படத்துல த்ரிஷாதான் லீட். எனக்கும் ரொம்ப நல்ல கேரக்டர். ‘துப்பறிவாளன் -2’ படத்துல நான் நடிக்கல. விஷாலோட நண்பனா அவர்கூட இருந்து தயாரிப்புப் பணிகளைப் பார்த்துக்குறேன். அவ்ளோதான்.’’

நந்தா, த்ரிஷா
நந்தா, த்ரிஷா

‘` ‘துப்பறிவாளன் -2’ படத்தில் என்னதான் பிரச்னை?’’

‘`விஷால் ஏற்கெனவே பதில் கொடுத்துட்டார். 40 நாள் லண்டன்ல ஷூட் நடித்தி முடிச்சபிறகு இப்படி ஒரு பிரச்னை. நிதிப் பற்றாக் குறையால தயாரிப்புல பிரச்னைகள் வரலாம், நடிகர்கள் கால்ஷீட் பிரச்னை வரலாம், ஒரு ஸ்ட்ரைக்கால் படம் தள்ளிப் போகலாம்னு ஒரு படத்துக்கு பல பிரச்னைகள் வர்றது சகஜம். ஆனால், இந்தப் படத்துக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை.ஒரே ஒரு பிரச்னை; அது படத்தின் இயக்குநர்.அவர் கேட்ட அனைத்தையுமே விஷால் கொடுத்தார். நான் கூட இருந்து பார்த்ததால் எனக்குத் தெரியும். இயக்குநர் கேட்ட நடிகர்கள், கேட்ட சம்பளம், கேட்ட லொக் கேஷன், கேட்ட நாடுன்னு அனைத்தையும் நாம கொடுத்திருக்கோம். இருந்தும் ‘துப்பறிவாளன்-2’ படம் பாதிக்கப்பட்டுச் சுன்னா அதுக்கு மிஷ்கின் மட்டும்தான் காரணம்!”

‘`நடிகர் சங்கக் கட்டடம் பாதியில் நிற்குது... தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்னு விஷால் சொல்றார். ஒரு நண்பரா விஷாலின் இந்தச் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘`நடிகர் சங்கக் கட்டடம் பாதியில் நிற்கக் காரணம் சில பேரோட சுயநலம்தான். குறிப்பா ஐசரி கணேஷ் சார்.

விஷால்
விஷால்

ஒரு தனிப்பட்ட மனிதரால இந்தக் கட்டடம் கட்டமுடியாது. இந்தக் கட்டடத்துக்கு அவரோட பெயர் மட்டும் வரணும்னா அதை எப்படிப் பண்ணமுடியும். இது ஒரு கூட்டு உழைப்பு. இந்த இடத்துக்கு எம்ஜிஆர் சார், சிவாஜி சார் காலத்துல இருந்து பெரிய வரலாறு இருக்கு. பல கலைநிகழ்சிகள் நடத்தி நிதி திரட்டி 80 சதவிகிதம் கட்டடத்தைக் கட்டி முடிச்ச பிறகு நிறுத்தியிருக்காங்க. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் போன வருஷம் தேர்தல் நடந்தது. கிட்டத்தட்ட தமிழக அரசோடு போராடித்தான் இந்தத் தேர்தலே நடந்தது. அப்போ பதியப்பட்ட வாக்குகளை எண்ணினா யார் ஜெயிச்சிருக்காங்கன்னு தெரியும். ஆனா, எண்ண மாட்டேங்கிறாங்க. அதற்காகத்தான் நாங்க நீதிமன்றத்துக்குப் போயிருக்கோம். தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவரா விஷால் எதுவும் செய்யலைன்னு சிலர் சொல்றாங்க. செயல்படவிடவில்லை என்பதுதான் உண்மை. அதற்கும் நேரடியா தேர்தல் நடத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் அரசு அதிகாரிகள் போட்டு இப்போ இயக்கிட்டு இருக்காங்க.’’

‘`நடிகர் சங்கத்துக்குத் தேர்தலே நடத்தாமல் பிரச்னைகளை சுமூகமாகப் பேசித் தீர்க்க முடியாதா?’’

‘`தேர்தல் இல்லாமல் செயல்படமுடியுமான்னு ஐசரி கணேசன் சாரும், கார்த்தி சாரும் நேர்ல சந்திச்சுப் பேசினாங்க. தேர்தல் இல்லாம சுமுகமாப் போறதுக்கு ஐசரி சார் சொன்ன கண்டிஷன் விஷால் சங்கத்துக்குள்ள வரக்கூடாதுங்கிறது. இதை எப்படி ஏத்துக்க முடியும்?

விஷால்
விஷால்

சரத்குமார், ராதாரவி இருக்கும்போது சங்கத்தில் நடந்த பிரச்னைகளை எல்லாம் வெளியே கொண்டுவந்து அத்தனை விஷயங்களையும் சரி பண்ணுனவர் விஷால்தான். ஆனால், அவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அப்புறம், ‘அமைச்சர்கள் எனக்குப் பின்னாடி இருக்காங்க. நான் பின்வாங்கமுடியாது’ன்னு அவர் சொன்னது எங்களுக்கு பயங்கர ஷாக். நீதிமன்றம் சரியான தீர்ப்பைச் சொல்லும்னு நாங்க காத்திருக்கோம்.’’