தமிழ் சினிமா ஹோம்லி ஹீரோயின்களின் வரிசையில் 90-களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தவர் கௌசல்யா. தற்போது பெங்களூரில் இருக்கும் அவரிடம் பேசினோம்.
நீங்க பேஸிக்கா ஒரு மாடல்.. அதுக்கப்புறம் எப்படி ஹீரோயின் ஆனீங்க..?
``எனக்கு சொந்த ஊர் பெங்களூரு. சின்ன வயசுல இருந்து எனக்கு மாடலிங் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ என் அம்மாவோட தோழி மூலமா, சொட்டு நீலம் விளம்பரம் ஒண்ணுல முதன்முறையா நடிச்சேன். அதைத்தொடர்ந்து நிறைய விளம்பரங்கள் வர ஆரம்பிச்சது. அப்போ மலையாள டைரக்டர் பாலச்சந்திர மேனன், அவரோட `ஏப்ரல் 19’ படத்துக்கு புதுமுகம் தேடிக்கிட்டிருந்தாரு. அந்த நேரத்துல அம்மாவோட தோழி மூலமா அவரைப் பார்த்து அந்த படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். அந்தப் படம் ஷூட் முடிஞ்சு, ரிலீஸுக்கு ரெடியாகிக்கிட்டிருந்தப்போ, அந்தப் படத்தோட விளம்பரங்களை ஏசியாநெட் சேனல்ல பார்த்துட்டு, தமிழ்ல `காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்துக்குக் கூப்பிட்டாங்க.’’
விஜய்கூடவும் பிரபுதேவாகூடவும் தொடர்ந்து படங்கள் பண்ணுனீங்க.. அந்த அனுபவங்கள் எப்படி இருந்தது..?

``விஜய் சார் பார்க்கத்தான் படு சைலண்ட்; நல்லா காமெடி பண்ணுவாரு. ஆனா அதை எல்லோர்கிட்டயும் பண்ணமாட்டாரு. அவரோட மனசுக்கு நெருக்கமானவங்கதான் அதை பார்க்கமுடியும். `ப்ரியமுடன்’ படம் பண்ணும்போது, `பூஜா வா’ பாட்டுக்காக ராஜஸ்தான் போயிருந்தோம். அந்த டைம்லலாம் விஜய் அடிச்ச காமெடி பஞ்சுகள் ஒவ்வொண்ணும் இன்னும் மனசுல இருக்கு. அந்த அளவுக்கு அவரோட பேச்சு காமெடியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அதேமாதிரி அவரோட டான்ஸ் பத்தி சொல்லவே வேணாம். `பூஜா வா’ பாட்டுல மூவ்மென்ட்ஸ் எல்லாமே ரொம்ப ஆக்ரோஷமா ஆடுற மாதிரி இருக்கும். விஜய் அந்த மூவ்மென்ட்ஸை எல்லாம் அசால்ட்டா ஆடிடுவாரு. நானோ டான்ஸ்ல ரொம்ப வீக். ரொம்ப கஷ்டப்பட்டேன். விஜய் அதைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு டிப்ஸ் தருவாரு. எத்தனை தடவை ஒன்மோர் போனாலும் பொறுத்துப்பாரு. பிரபுதேவா அப்படியே வேற மாதிரி, `வானத்தைப்போல’ படத்துல வர்ற `நதியே..’ பாட்டு மூவ்மென்ட்ஸ் ஒவ்வொண்ணும் ரொம்பக் கஷ்டம். ஆனா, அதை நான் கத்துக்கிறவரைக்கும் அவர் விடவே இல்லை. ரொம்ப ஈஸியா சொல்லிக்கொடுத்து ஆட வெச்சு எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தாரு.’’
உங்க கரியர்ல முக்கியமான படம் `பூவேலி’. அதைப் பத்தி சொல்லுங்க..?
`` `பூவேலி’ என் கரியர்ல மிக முக்கியமான படம். கே.பாலச்சந்தர் சாரோட `கவிதாலயா’வுல எனக்கு அது முதல் படம். அதுக்கப்பறம் நான் தொடர்ந்து அங்கே படங்கள் பண்ணேன். `பூவேலி’க்காக எனக்கு ஃபிலிம்பேர் விருது கிடைச்சது. அந்தப் படத்துல கார்த்திக் சார்கூட நடிச்சது மறக்கமுடியாதது. கார்த்திக் சாரைப் பத்தி பொதுவா எல்லாரும் தப்பா சொல்லுவாங்க, அவரு டைமுக்கு ஷூட் வரமாட்டாரு, அப்படி இப்படின்னு. அதெல்லாம் உண்மை இல்லை; நான் அவர்கூட தொடர்ந்து வொர்க் பண்ணியிருக்கிற அனுபவத்துல சொல்றேன். அவருக்கு ஒரு ப்ராஜெக்ட் செட் ஆச்சுன்னா ஷார்ப்பா ஷூட்டுக்கு வந்துடுவாரு. அவரால எந்தத் தொந்தரவும் வராது. ரொம்ப நல்ல மனிதர். மனசுல பட்டதை அப்படியே பேசக்கூடியவர். இதை அவரே, `நான் ரொம்ப நல்லவன், ஆனா அது யாருக்கும் புரியாது’னு அடிக்கடி சொல்லுவாரு. அது உண்மைதான்.’’
நீங்க மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்ட வாய்ப்புகள் எதுவும் இருக்கா..?

``ராஜீவ் மேனன் சார் `சொல்லாமலே’ படம் பார்த்துட்டு என் நடிப்பு பிடிச்சுப்போய், அவரோட `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துல நடிக்கக் கேட்டாரு. அப்போ, அந்தக் கேரக்டரோடத் தன்மை எனக்கு சரியா பிடிபடலை, அதனால அந்த வாய்ப்பைத் தவிர்த்திட்டேன். அதுக்கப்பறம்தான் அந்த கேரக்டர்ல ஐஸ்வர்யா ராய் நடிச்சாங்க. படம் வந்ததும் பார்த்துட்டு, `அடடா இந்த கேரக்டரையா நாம மிஸ் பண்ணோம்’னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.’’
2000-க்குப் பிறகு கிளாமராகவும் நடிக்கப்போறேன்னு சொல்லி, கிளாமர் ஸ்டில்ஸ்லாம் ரிலீஸ் பண்ணி பரபரப்பைக் கிளப்புனீங்க.. அந்த மாற்றம் ஏன் உங்களுக்கு கை கொடுக்கலை..?
``எனக்கு கிளாமர் ரோல்ஸும் பண்ணணும்னு ஆசை வந்ததால் அந்த முடிவை எடுத்தேன். ஆனா அது ரொம்ப காலம் கடந்து எடுத்த முடிவு. கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும். அதேமாதிரி இந்த மாற்றத்துக்குப் பிறகு கார்த்திக் சாரோட நடிக்கக் கமிட் ஆன `மனதில்’ படமும் பாதியிலேயே டிராப் ஆச்சு. இப்படி அந்த நேரத்துல நான் கமிட் ஆன மூணு படங்களுமே வேற வேற காரணத்தால கிடப்புக்குப் போச்சு. இந்தக் காரணங்களாலதான் அந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகலை.’’
நீங்க நித்தியானந்தாவோட பக்தையாமே..?

``சில வருடங்களுக்கு முன்னாடி எனக்கு உடம்புல நிறைய பிரச்னைகள் இருந்தது. அந்த சமயத்துலதான் நான் ரொம்ப குண்டா இருந்தேன். அந்த நேரத்துல மன அமைதியைத் தேடி ஒரேயொரு தடவை அவரோட ஆசிரமத்துக்குப் போனேன். மத்தபடி நான் அவரோட பக்தையெல்லாம் இல்ல. இப்போ நான் வேற ஒரு குருவை பின்பற்றி யோகா, தியானம் பண்ணிக்கிட்டிருக்கேன். அந்த குரு வேற யாருமில்ல, நடிகை பூமிகாவோட கணவர் பரத் தாகூர்தான். அவர் ஒரு யோகா குரு. யோகாவும் தியானமும் ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். தினமும் பாத்ரூம் போற, அந்த அஞ்சு நிமிஷம் மட்டும் கண்ணை மூடி தியானம் பண்ணாலே மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதுவும் ஒரு சரியான குருவைத் கண்டடைஞ்சு பின்பற்றினா இன்னும் நிறைய மாற்றங்களை உணரலாம்.’’
ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..?
``கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள்னு ரொம்ப குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பமில்லை. பரந்த மனப்பான்மையோட எல்லோருக்காகவும் இயங்கணும்னு விரும்புறேன். அதுக்கான முயற்சிகள்லதான் இருக்கேன். அதுவுமில்லாம இப்படி சிங்கிளா இருக்குறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால இப்போதைக்கு கல்யாணம்ங்கிற பேச்சே இல்லை.'’
இப்போ என்ன படங்கள் போய்க்கிட்டிருக்கு..?

``கஞ்சா உடம்புக்கு கெடுதல்னு பரவலா சொல்லப்படுது. ஆனா அது உண்மை இல்லை. கஞ்சா எடுத்துக்கிட்டா கேன்சர் வராது. கஞ்சா பயன்படுத்துறதை சட்டபூர்வமா அனுமதிக்கணும்னு குரல் கொடுக்கப்போறேன். இந்தக் கருத்துகளையெல்லாம் வலியுறுத்தும் விதமா ஓர் ஆன்மிகப்படத்தை நானே தயாரிக்கப்போறேன். தமிழ், தெலுங்கு மொழிகள்ல பைலிங்குவலா உருவாகப்போற இந்தப் படம், கஞ்சாவோட நன்மைகள் என்னென்னங்கிறதைப் பத்தி பேசும். எப்படி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஒரு ஜானர் இருக்கோ அப்படி ஆன்மிகம் அப்படிங்கிற ஜானர்ல இந்தப் படத்தை உருவாக்கப்போறோம். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே இந்தப் படம் இருக்கும். இதுல ஹூமா குரேஷி அல்லது லெட்சுமிராயை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் போய்க்கிட்டிருக்கு. நானும் இதுல ஒரு முக்கியமான ரோல் பண்றேன். கூடிய சீக்கிரமே முறையான அறிவிப்புகள் வெளிவரும்.’’