
உலகத்திற்கே அரசியலைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். பிரபஞ்சத்தோட மூத்தமொழியே தமிழ்தான்.
“தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ‘அடங்காதே’ ஓர் அரசியல் படம். இதற்கு அர்த்தம் யாருக்கும் அடங்காதே என்பதல்ல. நம்மைப் பற்றி கோழை, வீரன், நல்லவன், கெட்டவன்னு ஏதோ ஒரு பிம்பம் இருக்கும். அப்படி எதிலும் அடங்காமல் இருக்கிறவன்தான் என் ஹீரோ. ‘அவ்வளவு தான்... கடைசி வரைக்கும் கஷ்டப்படுவான்’னு நினைப்போம். அவன் வசதியா முன்னாடி வந்து நிற்பான். ஜெயிக்க மாட்டான்னு நினைச்சவன் வெற்றிகளைக் குவிப்பான். ‘மத்தவங்க எண்ணத்திற்குள் அடங்காதே. யார் வரையறைக்குள்ளும் அடங்காதே. நீ யாருங்கறதை நீயே முடிவு செய்’ - இதுதான் ‘அடங்காதே’ படம்...” தொகுத்துப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி. மணிவண்ணனிடம் பாடம் கற்ற சீடர்.
`` ‘அடங்காதே’ என்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?’’
“உலகத்திற்கே அரசியலைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். பிரபஞ்சத்தோட மூத்தமொழியே தமிழ்தான். ஷேக்ஸ்பியர் எழுதுவதற்கு முன்னாடியே தொல்காப்பியம் படைச்சவங்க நாம். அப்படிப்பட்ட மூத்தகுடிக்கு அரசியல்னா எப்போதும் பிடிக்கும். இன்றைய நிலையில் இந்தக் கதையை நிச்சயமாக சொல்லியாகணும். எங்க டைரக்டர் மணி வண்ணன் அரசியல் நையாண்டியை அவ்வளவு கவனமாகச் செய்வார். அந்தக் கிண்டலைக் கொஞ்சம் தள்ளிவைச்சிட்டு அரசியலைத் தீவிரமாக எழுதினால் எப்படி இருக்கும்னு யோசிச்சதோட விளைவுதான் ‘அடங்காதே.’ முழுக்க முழுக்க அரசியல்தான். இது சென்றடைய வேண்டிய அரசியல்; கேட்க வேண்டிய அரசியல். சொல்ல முடியுமான்னு தயங்குகிற அரசியலையும் பேசிட்டோம்.”
``அரசியல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்..?’’
“அவர் நடிச்ச ‘பென்சில்’ படத்திற்கு வசனம் எழுதினேன். முதல் நாள் ஜி.வி.பிரகாஷ் கேமராவுக்கு முன்னாடி நிக்கும்போது நான்தான் அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தேன்னு அதுல ஒரு தீராத பிரியம் அவருக்கு உண்டு. என் மேலே அவ்வளவு உரிமை எடுத்துக்குவார். இதுவரைக்கும் அவருக்கு காமெடி, டான்ஸ், மியூசிக் தெரியும்னு தெரிய வந்திருக்கு. இதுவரைக்கும் பார்த்த ஜி.வி இதில் இருக்கமாட்டார்னு உத்தரவாதம் தர்றேன். நான் வேற ஒரு கதை சொன்னபோது ‘உங்களுக்கு அரசியல் பிரமாதமா வருது. அதை வைச்சு கதை பண்ணினால் ரொம்ப அசலா இருக்கும்’னு சொன்னார்.”
``ஹீரோயின் சுரபிக்கு என்ன மாதிரியான பாத்திரம்?’’
“அவர்களுக்கான இடமும் கணிசமாக இருக்கு. இந்தப் படத்தில் வருகிற கேரக்டர்கள் ஒண்ணு அரசியலால் லாபம் அடைந்தவர்கள் அல்லது அரசியலில் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பாங்க. அரசியலில் பாதிப்பு அடைந்தவர்களை வைத்தும் கதை சுழலுது.”
``சரத்குமார், மந்த்ரா பேடி ரொம்ப நாளைக்குப் பிறகு நடித்திருக்கிறார்களே..?’’
“சரத்குமாரின் உயரம், கம்பீரத்திற்கு அந்த கேரக்டருக்கு அவரேதான் பொருத்தமாக இருந்தார். இன்னமும் சினிமாவில் ஈடுபாட்டோடு இருக்கிறார். மந்த்ரா பேடிக்கு முக்கியமான கேரக்டர். விஜயசாந்தி மாதிரி கம்பீரமா, மலர்ச்சியா போலீஸுக்குப் பொருந்தணும். நான் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் நிறைய சினிமாக்காரர்களை ஃபாலோ பண்றேன். அவர்களில் மந்த்ராவும் ஒருத்தர். சிக்ஸ்பேக் வச்சு ஒரு போஸ்ட் போட்டிருந்தாங்க. போலீஸ்னா எக்ஸ்ட்ரா ஒரு பிட் சதை உடம்பில் இருக்கவே கூடாதுன்னு நினைப்பேன். அப்படியிருந்தாங்க அவங்க. எக்கச்சக்க முயற்சியில் அவங்களைத் தொடர்புகொண்டு பேசி கன்வின்ஸ் பண்ணினேன். அவங்க வாங்கற தொகையைவிடப் பாதியை வாங்கிட்டு நடித்துக் கொடுத்தாங்க.”
``காசியில் போய் அத்தனை நாள் ஷுட் பண்ணியிருக்கீங்க...’’
“காசி ஒரு புனித நகரமும்கூட. இந்தப் படமே அங்கேதான் எடுக்கமுடியும். 24 நாள்கள் இரவு பகலா ஷூட் பண்ணினோம். காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் ஜி.வி ஒரு பெண்ணைத் துரத்தி ஓடுறமாதிரி எடுத்தோம். அதையெல்லாம் இப்ப நினைச்சா அவ்வளவு ஆச்சர்யமா இருக்கு. அங்கே முனிராஜ்னு நம்ம ஐ.பி.எஸ் அதிகாரி இருந்ததாலே எல்லாம் சுலபமாச்சு. அப்படியும் ஷூட்டிங்னு அறியாமல் ஜி.வியை போலீஸ் பிடிச்சுக்கிட்டாங்க. சினிமான்னு புரிய வச்சு மீட்டோம். அப்புறம் சந்தோஷமா டைம் கொடுத்து எடுக்கச் சொன்னாங்க. இந்த இடங்கள் எல்லாமே தமிழ் சினிமா பார்க்காத புதுசு. பி.கே.வர்மா காசியின் அழகை, பிரமாண்டத்தை அப்படியே கேமராவில் கொண்டு வந்திருக்கிறார். ஆக்ரோஷமான அரசியல் சினிமாவுக்கு உங்களை அழைக்கிறேன்.”