95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியப் படைப்புகளான 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'The Elephant Whisperers' ஆவணக்குறும்படமும் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே ஆஸ்கர் விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் வயலின் இசை ஜாம்பவான், டாக்டர் எல்.சுப்ரமணியத்துடனான பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றியும், ஆஸ்கர் விருது பற்றியும் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “ திரையுலகில் நடந்துகொண்டிருந்த தொழில்நுட்ப மாற்றத்தின் இடைப்பட்ட காலத்தில் நான் திரையுலகுக்குள் வந்தேன். அதனால் எனக்குக் கற்றுக்கொள்ள நிறைய நேரம் கிடைத்தது. எனது வெற்றியை மட்டுமே பலர் பார்க்கின்றனர். ஆனால் நான் பல தோல்விகளைச் சந்திருக்கிறேன். எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனால் எனக்கு அதையும் தாண்டி கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. ஹாலிவுட் திரையுலகினரால் செய்யும் முடியும் ஒரு விஷயத்தை ஏன் நம்மால் முடியாது?
நாம் அவர்களின் இசையைக் கேட்கும்போது, ஏன் அவர்களை நம் இசையைக் கேட்க வைக்க முடியாது? என்பது போன்ற கேள்விகளை எனக்குள் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதேபோல் சில நேரங்களில் இந்தியத் திரைப்படங்கள் ஆஸ்கர் விருது வரை செல்கிறது ஆனால் விருது கிடைப்பது இல்லை. இதற்குக் காரணம் இந்தியா சார்பில் தவறான படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேற்கத்திய நாட்டவரைக் கவரும் வகையிலான படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.