
என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு தோழிகளுக்கே அதிகம் இருக்கு. அவர்களைப் பிரிஞ்சு போகும்போதும் தொலைஞ்சு போகும்போதும் யாரும் யாரையும் திட்டிக்காம போயிருக்கோம்.
வாழ்க்கையில் எப்போதுமே ‘முதல்’ என்கிற விஷயம் ரொம்பவே ஸ்பெஷலானது; அதிலும், காதலில் நடந்த ‘முதல்’ விஷயங்கள் மறக்க முடியாத கல்வெட்டுகள். அப்படி சில பிரபலங்களிடம், அவர்களின் காதலில் நடந்த ‘முதல்’ விஷயங்களைப் பற்றிக் கேட்டோம்.

* “என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு தோழிகளுக்கே அதிகம் இருக்கு. அவர்களைப் பிரிஞ்சு போகும்போதும் தொலைஞ்சு போகும்போதும் யாரும் யாரையும் திட்டிக்காம போயிருக்கோம். அப்புறம்தான் இந்த திவ்யாவைப் பார்த்தேன். பிளாக்கில நான் எழுதும்போது அதைப்படிச்சுட்டு திவ்யா ஒரு வாசகியா வந்தாங்க. நாங்க ரெண்டுபேரும் எண்கள் பரிமாறி, பேசப்பேச எங்களுக்குள் நிறைய ரசனைகள், ஒற்றுமைகள் இருந்தன. இயக்குநர் ராமுடன் கோவை செல்ல, வழியில் சேலத்தில் இவளை வரச்சொல்லிப் பார்த்தேன். ஐந்து நிமிடத்தில் கைகொடுத்துட்டு அவங்க கொடுத்த தண்ணீர் பாட்டிலை வாங்கிட்டு அவசர அவசரமா ரயிலில் ஏறினேன். அந்தக் கொஞ்ச நிமிடங்கள் இருக்கே... அது பல கதைகள் பேசும். நாங்கள் ஏற்காடு போயிருந்ததுதான் முதல் அவுட்டிங். நான் திவ்யாவுக்குத் தந்த முதல் பரிசு, `நாடுவிட்டு நாடு', `நிலாக்கள் தூர தூரமாக' என்ற இரு புத்தகங்கள். அவள் தன் பங்குக்கு `கொற்கை'யைக் கொடுத்தாள்” என்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

* “என்னோட முதல் டேட்டிங் அனுபவம் நல்லா ஞாபகமிருக்கு. காலேஜ் படிச்சப்போ நடந்தது. அப்ப மஞ்சள் கலர் அப்பாச்சி பைக் ஃபேமஸ். அந்த பைக் வேணும்னு வீட்டுல அடம் பிடிச்சு வாங்கினேன். எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்தது. அவங்களை வெளியே கூப்பிட்டுப் போக பிளான் பண்ணினேன். பெசன்ட் நகர் பீச் போலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதுக்காக நல்லா ட்ரஸ் பண்ணிட்டு, பைக் எடுத்துட்டு பீச்சுக்குப் போனேன். ரெண்டு பேரும் பீச் காத்தை ரசிச்சுக்கிட்டு பேசிட்டு வந்தோம். என் மனசுக்குள்ள அவங்க கையைப் பிடிக்கலாமா வேண்டாமான்னு ஒரே தயக்கம். இப்போ நினைச்சாகூட அந்த அனுபவம் மனசுக்கு நல்லாருக்கு’’ என்கிறார் அசோக் செல்வன்.

* “என் வருங்காலக் கணவர் சஞ்சய்கூட டேட்டிங் போன அனுபவம் என்னால மறக்க முடியாது. அவரை நேர்ல பார்க்கும்வரைக்கும் போன்ல எப்போவும் போல சாட்டிங், மெசேஜ்னு ஓடிக்கிட்டிருந்தது. ரெண்டு பேரும் மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்த நேரத்துல ஹைதராபாத்தில் தெலுங்குப் பட ஷூட்டிங்ல இருந்தேன். சென்னை வந்தவுடனே சந்திக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். சென்னை வந்து சைனீஸ் ரெஸ்ட்டாரன்ட் போனோம். நல்லா பேசிட்டு இருந்தோம். ரெண்டு பேருமே foodies. அதனால நல்லா சாப்பிட்டோம். அங்கே இருந்து நேரா பீச் ட்ரைவ் போனோம். அவரைச் சந்திச்ச முதல் சந்திப்பிலேயே ரெண்டுபேருக்கும் பிடிச்சுப்போச்சு. அப்பறம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு இப்போ திருமணம் வரைக்கும் வந்துட்டோம். அவருடைய பிறந்தநாளுக்கு ஒரு வித்தியாசமான கிப்ட் கொடுத்திருந்தேன். நான் கொடுத்த கிப்டை ஓப்பன் பண்றதுக்குன்னே க்யூ ஆர் கோடு ரெடி பண்ணிக் கொடுத்தேன். அது சஞ்சய்க்கு ரொம்பப் பிடிச்சிருந்தது’’ என்கிறார் நடிகை வித்யூலேகா.

* “என் மனைவி ஸ்ருதிக்கு கங்காரு பொம்மை ஒண்ணு கொடுத்தேன். கங்காரு எப்படி தன்னுடைய குட்டியைத் தூக்கிட்டு எப்போவும் தன்னோடே வெச்சிருக்குமோ, அதே மாதிரி நானும் உன்கூடவே இருப்பேன்னு சொல்றதுக்காகத்தான் அந்தப் பொம்மை. இதுவரைக்கும் திட்டமிட்டு டேட்டிங் எங்கேயும் போகல. ஏன்னா, எப்போவும் கல்யாணத்துக்கு முன்னாடி எங்களோடு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்’’ என்றார் ரியோ ராஜ்.

* “ கிப்ட் வாங்கிட்டு சர்ப்ரைஸ்ஸா கொடுக்குற பழக்கம் எங்க ரெண்டு பேருக்குமே கிடையாது. எனக்கு செடி வளர்க்குறது ரொம்பப் பிடிக்கும். என் செடியில் வளர்ந்த முதல் ரோஜா பூவை அவருக்குக் கொடுத்தேன். என் கணவர் எனக்காக காஞ்சிபுரத்துல இருந்து ஸ்பெஷலா நெய்யச் சொல்லி பட்டுப் புடவை ஒண்ணை வாங்கிட்டு வந்து பொங்கலுக்காகக் கொடுத்தார். எங்களோட ஃபர்ஸ்ட் டேட்டிங் ரோட்லதான் நடந்தது. ஈசிஆர் ரோட்ல கையைப் பிடிச்சிட்டு நடந்தோம்.’’ என்கிறார் சின்னத்திரை நடிகை சரண்யா.

*‘`யாரோடும் பெருசா டேட்டிங்லாம் போனதில்ல. ஏன்னா, காலேஜ் படிச்சப்போ டேட்டிங் போற அளவுக்கு தைரியம் வந்ததில்ல. கிப்ட்னு பார்த்தா என்னோட க்ரஷூக்கு ஃப்ரெண்ட்டுனு போட்டு சில்வர் ரிங் கொடுத்தேன். எனக்கு நிறைய க்ரீட்டிங் கார்ட்ஸ் கிப்ட்டா வந்திருக்கு. சொல்லப்போனா நான் கொடுத்த கிப்ட்டைவிட எனக்கு வந்த கிப்ட்ஸ்தான் அதிகம்’’ என்று சிரிக்கிறார் நடிகை அபர்ணதி.