
படத்தில் அவங்களுக்கான இடம் முக்கியமானது. ஆட்டிசம் குழந்தைகளை கவனித்து, பாடமும் சொல்லித் தரக்கூடிய ஸ்கூல் டீச்சரா வர்றாங்க
``போலீஸ் படம்னா சில விதிகள் வெச்சிருக்கோம். அதிலிருந்து மீண்டு வந்திருக்கேன். எதார்த்தமா க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஒண்ணு தோணுச்சு. எப்பவும் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு, சதா அட்டென்ஷனில் இருக்கிறவங்க மட்டுமே போலீஸ் இல்லை. நாம இதுவரை பார்க்காத சில விஷயங்களைச் சொல்லியிருக்கோம். என் முதல் படம் என்பதால் நிறைய உழைப்பைக் கொட்டி எடுத்திருக்கேன். படத்தின் பெயர் ‘தீயவர் குலைகள் நடுங்க.' இந்தத் தலைப்பே சில விஷயங்களைச் சொல்லும் என நம்புகிறேன்’’ - வார்த்தைகளைக் கோத்துப் பேசுகிறார், அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன்.
``எப்படி வந்தார் இதுக்குள்ளே அர்ஜுன்..?’’
‘‘தோளில் கை போட்டு சினேகத்தோடு வந்தார். அர்ஜுனின் ஹிட் லிஸ்டில் எவ்வளவோ போலீஸ் படங்கள் இருக்கு. இதில் ரொம்ப இயல்பா, ஆனால் கவனமாகத் துப்பறிகிற இன்ஸ்பெக்டர். கொலையாளிகள் அவரிடமிருந்து தப்பிக்க செய்கிற முயற்சிகளை லாகவமாகக் காய் நகர்த்தித் தடுத்து, அவங்களை சட்டத்தின் முன்னால கொண்டு வர்றதுனு பிரமாதமா செய்திருக்கார். அர்ஜுன் மாதிரி பெரிய நடிகர்கள் குழந்தை மாதிரி. நல்ல திரைக்கதையில் அவங்களைக் கொண்டு வந்து நிறுத்திட்டோம்னு மனசில் பட்டுட்டா அவங்க டோட்டல் சரண்டர்.
‘வேட்டையோடு விளையாடு' படத்தில் கமல் தான் ஹீரோ. அதில் ஜோதிகா, பிரகாஷ்ராஜ் மாதிரியானவர்களெல்லாம் இருந்து எவ்வளவு உயிரோட்டமாக இருந்தது. அப்படி இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, அனிகான்னு பலர் இணைஞ்சிருக்காங்க. சில சினிமாவில்தான் எல்லோர் நடிப்பும் பிரமாதமாக அமைஞ்சிடும். அதை இந்தப் படம் பண்ணும்போதே உணர முடிஞ்சது.''


``இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களோட பங்களிப்பு எப்படி..?’’
‘‘படத்தில் அவங்களுக்கான இடம் முக்கியமானது. ஆட்டிசம் குழந்தைகளை கவனித்து, பாடமும் சொல்லித் தரக்கூடிய ஸ்கூல் டீச்சரா வர்றாங்க. இங்கே குறிப்பாக பெண்களுக்கு இருக்கிற பிரச்னைகளே தீர்க்க முடியாததாக இருக்கு. அதோட ஆட்டிசம் பாதித்த பெண் குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கணும், அவர்களின் பிரச்னைகள் என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டிய இன்னொரு பக்கமும் இருக்கு. அதை அழகாக எடுத்திட்டுப் போறார் ஐஸ்வர்யா. உணர்வுகளை அப்படியே அள்ளித்தெளிச்சுக் காட்டுகிற முகம். அனிகான்னு ஒரு மும்பைப் பொண்ணு ஆட்டிசம் பாதித்த பெண்ணாக நடிச்சிருக்காங்க. இவங்க தவிர, சிவாஜி சாரின் மகன் ராம்குமார், விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி, நடிகர் கதிரின் அப்பா லோகு என்று அருமையான வேடங்களில் வர்றாங்க. வீரம், வன்மம், காதல், பழிவாங்கல்னு எல்லாமே காரண காரியத்தோடு இருக்கு. இருட்டான மனிதர்கள் மேலே வெளிச்சம் போட்டிருக்கேன்.''
``இதற்கு முன்னாடி வந்த போலீஸ் படங்கள்ல இருந்து இந்தப் படம் எப்படி வித்தியாசப்படுது..?’’
‘‘போலீஸும் மனிதர்கள்தான். அவங்க பணிபுரிகிற இடம், ஒரு குற்றம் நடந்ததைப் பார்க்கும்போது அவங்க மனநிலை என்ன, ப்ரஷர் வரும்போது என்ன செய்வாங்கன்னு நடைமுறையை இயல்பாகக் காட்டியிருக்கோம். ‘தீயவர் குலைகள் நடுங்க' த்ரில்லர் மட்டுமே இல்லை, எமோஷனும் இணைந்தது. பரத் ஆசிவகன்தான் மியூசிக். த்ரில்லரில் நேர்த்தியோடு பயமும் ஊட்டியிருக்கார். அதே மாதிரி கேமரா சரவணன் அபிமன்யு. அடுத்த கட்டத்தை எட்டுவார். தயாரிப்பாளர் அருள்குமார் அவர்களால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமானது. மக்கள் நல்ல த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராகலாம்.''