
ஜி.வி.பிரகாஷ் ரிகர்சலுக்கு வந்துடுவார். கஷ்டமான பர்ஃபாமென்ஸையும் எளிதா நடிச்சிடுறார். அவர்கிட்ட நான் ஆச்சரியப்பட்ட விஷயமும் அதான். கேரளாவுல இடுக்கியில படப்பிடிப்பு
``கடந்த லாக்டௌன்ல வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த சமயத்துல உருவான கதை இது. வீட்டுல எங்க அம்மா தூங்குறப்ப குறட்டை விடுவாங்க. பொதுவா குறட்டைச் சத்தம் கேட்டாலே, ஆம்பளைங்கதான் குறட்டைவிடுவாங்கன்னு நினைச்சிடுவோம். ஒரு பொண்ணு குறட்டைவிடுவாங்கறது நமக்குத் தோணவே தோணாது. அதிலும் ஒரு அழகான பொண்ணு குறட்டை விடுறான்னு நாம சொன்னால்கூட யாரும் நம்ப மாட்டாங்க. 'பொய் சொல்றியா’ன்னு கேட்பாங்க. ஆனா, பசங்க குறட்டை விட்டா, அதை வீடியோ எடுத்து செமயா கலாய்ச்சிட்டிருப்போம். மனைவியோ அல்லது நம் தோழிகளோ குறட்டை விட்டால்கூட அதைப் பத்தி வெளிப்படையா யார்கிட்டேயும் பேசிக்க மாட்டோம். இந்தச் சிந்தனையில் உருவான படம்தான் ‘டியர்.’ குறட்டையை வச்சு கிண்டல் பண்ணாமல், எமோஷனல் டிராமாவா பண்ணியிருக்கோம்’’ என்கிற ஆனந்த் ரவிச்சந்திரன், இதற்குமுன் ‘செத்தும் ஆயிரம் பொன்' படத்தை இயக்கியவர்.


``குறட்டையை வச்சு சமீபத்துலதான் ஒரு படம் வந்துச்சு?’’
‘‘'ஆமாங்க. ஆனா, இது 2020 லாக்டௌன்ல யோசிச்ச கதை. அப்ப குறட்டையை வச்சு எந்தப் படமும் வரல. கணவன்-மனைவிக்கிடையே குறட்டை ஒரு பிரச்னையா வருது. இது கொஞ்சம் காமெடியா இருந்தாலும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் உள்ள கதையா இருக்கும். குறட்டையை வச்சு அரசியலும் பேசலாம். ‘கல்யாணம்ங்கறது ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்தல்தான். அதுல விடாப்பிடியா பர்ஃபெக்ஷனை எதிர்பார்க்கக் கூடாது' என்ற அழகான மெசேஜையும் சொல்லியிருக்கேன். கணவன் - மனைவியா ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க. ரெண்டுபேருமே இமேஜ் பத்திக் கவலைப்படாமல், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கறவங்க. இந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷோட பெற்றோரா ரோகிணி, ‘தலைவாசல்' விஜய் நடிக்கறாங்க. ஜி.வி.யோட அண்ணனா காளிவெங்கட், அவர் மனைவியா பிளாக் ஷீப் நந்தினியும் நடிக்கறாங்க. ஐஸ்வர்யாவின் பெற்றோரா இளவரசும், கீதா கைலாசமும் நடிச்சிருக்காங்க. தொழில்நுட்ப டீமும் பக்காவா அமைஞ்சிடுச்சு. என் நண்பர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இதுல ஒளிப்பதிவாளரா அறிமுகமாகுறார். படத்துல டப்பிங் பண்ணுற வேலை இருக்காது. ஏன்னா, முழுக்கவே லைவ் சவுண்ட் முறையிலதான் படமாக்கியிருக்கோம். ‘கார்கி' படத்துக்கு லைவ் சவுண்ட் பண்ணின ராகவ் ரமேஷ், இதுலேயும் லைவ் சவுண்டைக் கையாண்டிருக்கார். எனக்குத் தோணுற கதைகளை எல்லாம் என் நண்பர் நரேந்திரபாபுகிட்ட பகிர்ந்துக்குவேன். அவர் மூலமாக தயாரிப்பாளர் வருண் சார் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட ‘டியர்' கதையைச் சொன்னதும், அவருக்குப் பிடிச்சிடுச்சு.''
``விளம்பரத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தது எப்படி?’’
‘‘எம்.பி.ஏ. முடிச்சிட்டு விளம்பரத்துறையில வேலை செய்திட்டிருந்தேன். அப்படியே குறும்படங்கள் இயக்கினேன். கதைகள் எழுத ஆரம்பிச்சேன். சினிமா சிந்தனைகளோடு ஆறு வருஷம் போச்சு. அப்புறம்தான் ‘செத்தும் ஆயிரம் பொன்' இயக்குறதுக்கான வாய்ப்பு அமைஞ்சது. லாக்டௌன் டைம்ல ஓ.டி.டி-யில தான் படம் வெளியானது. விகடன் உட்பட மீடியாக்கள்ல நல்ல விமர்சனங்கள் வந்த பிறகுதான் நிறைய பேர் பார்க்க ஆரம்பிச்சாங்க. இப்ப என் படம் தியேட்டர்ல வர்றதால, கூடுதல் சந்தோஷமா இருக்கேன்.''
``ஜி.வி.பிரகாஷ் ஸ்டைலிஷா இருக்கார்...’’
‘‘ஆமாங்க. அவரோட உழைப்பு ஆச்சரியப்படுத்துது. ஒரு பக்கம் நடிப்பில் பரபரக்கிறார். இன்னொரு பக்கம் இசையிலும் அசத்துறார். இந்தப் படம் லைவ் சவுண்ட் என்பதால, ரிகர்சல் வைத்த பிறகே ஷூட் போனோம். ஜி.வி.பிரகாஷ் ரிகர்சலுக்கு வந்துடுவார். கஷ்டமான பர்ஃபாமென்ஸையும் எளிதா நடிச்சிடுறார். அவர்கிட்ட நான் ஆச்சரியப்பட்ட விஷயமும் அதான். கேரளாவுல இடுக்கியில படப்பிடிப்பு. லொகேஷன் அவ்ளோ அழகா இருக்கும். விஷுவல் பிரமாதமா இருக்கும். ஆனா, அந்த இடத்துக்குப் போனால் தங்குறது உட்பட எந்த அடிப்படை வசதியும் இருக்காது. அப்படி ஒரு இடத்திலும் அவர் எளிமையா வந்து, சூழலைச் சமாளிச்சு நடிச்சுக் கொடுத்தது மறக்கமுடியாத தருணங்களாகும். படத்துக்கு இசையும் அவர்தான். மொத்தம் ஏழு பாடல்கள்ல, இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கு. அதையும் படமாக்கினால் முழுப்படமும் ரெடியாகிடும்.''