
அருள்நிதிகிட்ட இந்தக் கதையைச் சொன்னதும் ‘மருத்துவமனையில் இப்படியெல்லாமா நடக்கும்'னு கேட்டதுடன், ‘கதை பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டார்.

``தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க அரசு மருத்துவமனையின் பின்னணியில் ஒரு படம் வந்ததில்லைன்னு தோணுச்சு. கிராமமோ, நகரமோ அரசு மருத்துவமனையில் கிடைக்கற அனுபவம் காலத்துக்கும் மறக்க முடியாததா இருக்கும். அப்படி ஒரு சூழலில் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கற உணர்வுபூர்வமான விஷயத்தைச் சொல்லலாம்னு ஒரு கதை தோணுச்சு. அப்பாவாக என் மனசுல வந்து நின்னவர் பாரதிராஜா சார்தான். இயல்பான நடிப்பில் அசரடிச்சிட்டிருக்கார். அதைப்போல, அருள்நிதி சார், அறிமுக இயக்குநர்களை அவ்ளோ மதிக்கறவர். நிறைய பேரை இயக்குநராக்கியவர். இப்படிப் புதுக்கூட்டணியோடு ‘திருவின் குரல்' உருவாகியிருக்கு'' - திருப்தியாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநரான ஹரிஷ் பிரபு.
``யார் அந்தத் திரு... யாருக்காகக் குரல் கொடுக்கிறார்?’’
‘‘அப்பா - அம்மா - பாட்டி - அக்கான்னு அழகான குடும்பத்தில் உள்ளவர் அருள்நிதி. அப்பா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யறவர். அவருக்கு ஒத்தாசையா மகன் அருள்நிதி இருப்பார். லேசாக காது கேட்காத, வாய் பேச முடியாத பையன். அவர்கள் வேலை செய்யுமிடத்தில் அப்பாவுக்கு விபத்து ஒன்று நேரிட, அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்பாவைக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் மகனுக்கும், மருத்துவமனையில் உள்ள சிலருக்கும் இடையே ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அது என்ன பிரச்னை, அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

அருள்நிதியின் அத்தை பெண்ணாக ஆத்மிகா நடிக்கிறார். ஏற்கெனவே அவர் ‘மீசையை முறுக்கு', உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே'ன்னு சில படங்கள்ல நடிச்சிருக்கார். அவங்க தவிர, அருள்நிதியின் அக்காவாக சுபத்ரா. ‘வடசென்னை', ‘ஜெய்பீம்'னு நிறைய படங்கள்ல அவங்க நடிச்சிருக்காங்க. ‘கைதி' மோனிகா தவிர புதுமுகங்கள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஒளிப்பதிவை என் நண்பர் சின்டோ பொடுதாஸ் பண்ணியிருக்கார். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' கவின் ராஜின் உதவியாளர் அவர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகுறார். சாம் சி.எஸ்., இசையமைச்சிருக்கார். ‘விலங்கு', ‘அயலி'ன்னு விறுவிறுப்பான படத் தொகுப்பைக் கொடுத்த கணேஷ் எடிட்டிங்கும் படத்துக்கு பலம் சேர்க்கும். காரைக்கால் உட்பட சில இடங்கள்ல படப்பிடிப்பை நடத்திட்டு வந்திருக்கோம்.''


``இப்படியொரு கதையில் லைகா வந்தது எப்படி?’’
‘‘என் சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்துல கீழ்வெண்பாக்கம். ‘பண்ணையாரும் பத்மினியும்' அருண்குமார், ‘மைக்கேல்' ரஞ்சித் ஜெயக்கொடி இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் வேலை செய்திருக்கேன். விஜய் சேதுபதியுடன் நல்ல நட்பு உண்டுங்கறதால அவருக்காக ஒரு கதை ரெடி பண்ணியிருந்தேன். கால்பந்து பத்தின கதை அது. லைகா தயாரிப்பில் அதில் அவர் நடிப்பதாக இருந்தது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம். அந்தச் சமயத்துல விஜய்சேதுபதி இந்திப் படங்கள்ல பிஸியாகிட்டார். இந்த இடைவெளியில் லைகாவே கூப்பிட்டு ‘சின்ன பட்ஜெட்ல ஒரு படம் ஆரம்பிச்சிடலாம்'னாங்க. அப்படித்தான் இந்தத் ‘திருவின் குரல்' உருவாச்சு.''


``பாரதிராஜா, அருள்நிதி ரெண்டு பேரையும் இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?’’
‘‘அருள்நிதிகிட்ட இந்தக் கதையைச் சொன்னதும் ‘மருத்துவமனையில் இப்படியெல்லாமா நடக்கும்'னு கேட்டதுடன், ‘கதை பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டார். அவர்கிட்ட பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணு, அவருக்கு ஒரு கதை பிடிச்சிருந்தால் வெயிட் பண்ண வைக்க மாட்டார். ‘உடனே பண்ணலாம்'னு கிளம்பி வந்து நிற்பார். ஸ்பாட்டுல அவரோட கேரக்டர் மூடிலேயே இருப்பார். ஆனா, பாரதிராஜா சார் அப்படியில்ல. படுக்கையில் படுத்தபடி நடிப்பார். அந்த சீன் முடித்தவுடன் செம குஷியாகி, சுத்தி இருக்கறவங்களை ஜாலியாக்கிடுவார். இந்தக் கதையில ரொம்பவே அவர் ஒன்றிட்டார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையிலேயே இருப்பார். இந்தப் படத்தை முடிச்ச சில வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு உடல்நலக்குறை ஆகிடுச்சு. அந்தச் சமயம் மருத்துவமனையில் இருந்த அவரைச் சந்திச்சேன். என்னைப் பார்த்ததும் எமோஷனலாகி, ‘உன்னோட கதை என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்குடா'ன்னு நெகிழ்ந்தார். அப்படி ஒரு நெகிழ்வு உங்களுக்கும் இருக்கும்.''