
உலகப்போர் நிஜத்துல நடந்த ஒரு சம்பவம். அதை ஒவ்வொரு இயக்குநரும் வெவ்வேறு விதமா நமக்குக் கொடுத்திருக்காங்க. எ
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘மாஃபியா’ ஷூட் போய்க்கிட்டிருந்த சமயத்துல சத்யஜோதி நிறுவனத்துல கதை கேட்குறாங்கன்னு நண்பர் வாசு என்கிட்ட சொன்னார். அப்போ இந்தக் கதைக்கான ஐடியா என்கிட்ட இருந்தது. அதைப் போய்ச் சொன்னேன். அவங்களுக்கும் பிடிச்சுப்போய் தனுஷ் சாரை கனெக்ட் பண்ணினாங்க. அவருக்கும் பிடிச்சிருந்தது. அப்படித்தான் ஆரம்பமானது ‘மாறன்’. முதலில் இது ஐடியாவா மட்டும்தான் இருந்தது. தனுஷ் சார் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் அதுக்குத் தகுந்த மாதிரி சில விஷயங்களையெல்லாம் சேர்த்து ஷூட்டிங்கிற்கு ரெடியாகிட்டோம்’’ - உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
`` ‘மாறன்’ என்ன களம்? தனுஷின் பாத்திரம்...?’’
“ஜர்னலிசம்தான் படத்துடைய களம். ஆரம்பத்துல இருந்தே ஜர்னலிசம் மேல பர்சனலாவே ரொம்ப ஆர்வம் இருந்தது. காரணம், எந்த விஷயமா இருந்தாலும் எல்லா மக்கள்கிட்டேயும் கொண்டு போய்ச் சேர்க்கிற மிகப்பெரிய ஆயுதம் ஊடகம். இதை வெச்சு ஒரு படம் பண்ணணுங்கிற எண்ணம் எனக்குள்ள ரொம்ப நாளாகவே இருந்தது. இதுல தனுஷ் சார் ஒரு பத்திரிகையாளரா நடிச்சிருக்கார். எனக்குத் தெரிஞ்சு தனுஷ் சார் இந்தப் பின்னணியில நடிச்சதில்லை. அதனால, நிச்சயம் புதுசா இருக்கும். அதே சமயம் இதை எந்த ஜானருக்குள்ளேயும் அடக்கிட முடியாது. ஆக்ஷன், த்ரில், ஹியூமர், எமோஷன்னு எல்லா விஷயங்களும் உள்ளே இருக்கும்.’’

``சோஷியல் மீடியாவுடைய தாக்கம் அதிகமா இருக்கிற சூழல்ல, ஊடகத்துடைய உருவமே மாறிடுச்சு. நீங்க இதுல என்ன சொல்ல வர்றீங்க?’’
‘`ஒரு நாணயத்துக்கு ரெண்டு பக்கங்கள் இருக்குன்னு சொல்ற மாதிரி, எந்தவொரு டெக்னாலஜியுடைய அறிமுகம்னாலும் அதுக்கு பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டும்தான் இருக்கும். நீங்க சொல்ற மாதிரி சோஷியல் மீடியாவும் அப்படித்தான். அது ஒரு ஆயுதம் மாதிரி. நம்ம தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம். மத்தவங்களை அழிக்கவும் பயன்படுத்தலாம். ஊடகம்ங்கிற ஆயுதத்தை தனுஷ் சார் எதுக்குப் பயன்படுத்துறார், யாருக்காகப் பயன்படுத்துறார், யாரை எதிர்த்துப் பயன்படுத்துறார் அப்படிங்கிறதுதான் படம்.’’
``தனுஷை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?’’
‘`இந்தப் படத்துக்காகத்தான் முதன்முதல்ல தனுஷ் சாரை சந்திச்சேன். தனுஷ் சாருக்கு ஆக்ஷன், கட் சொல்லும்போது மானிட்டருக்குப் பின்னாடி, ஒரு இயக்குநரா மட்டுமல்லாமல் ஆடியன்ஸாவும் உட்கார்ந்திருப்பேன். அவர் பர்ஃபாம் பண்றதைப் பார்க்கும்போது ஒரு கட்டத்துல கட் சொல்ல மறந்து ஆடியன்ஸ் மனநிலைக்குப் போயிடுவேன். தனுஷ் சார் பாடல் பாடியிருக்கார். இன்ட்ரோ சாங்ல டான்ஸ் பின்னியிருக்கார். பிலிம் மேக்கிங்கைப் பொறுத்தவரை, தினம் தினம் ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும். ஒரு படம் முடியும்போது, இந்தப் படத்துல நாம இதைக் கத்துக்கிட்டோம்னு நினைப்போம். அடுத்த படம், வேற நபர்கள் கூட வொர்க் பண்ணும்போது இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு தோணும். அந்த மாதிரி ஒட்டுமொத்தப் படக்குழுவுடன் வேலை செஞ்சது ரொம்ப நல்லாருந்தது.’’


``தனுஷ் பிறந்த நாளுக்கு ‘உங்களுடன் வொர்க் பண்ணணும்’னு ட்வீட் பண்ணியிருந்தாங்க, மாளவிகா மோகனன். அடுத்த ஒரு வாரத்துல ‘மாறன்’ல ஹீரோயின் இவங்கதான்னு அறிவிப்பு வந்தது. அந்த ட்வீட்தான் காரணமா?’’
‘`ஹய்யய்யோ அப்படி இல்லைங்க. அதுக்கு முன்னாடியே அவங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தோம். ஆனா, அப்போ அதிகாரபூர்வமா இவங்கதான் ஹீரோயின்னு உறுதியாகலை. சரியா, அந்தச் சமயத்துல இவங்க தனுஷ் சார் பிறந்தநாள்ல ட்வீட் பண்ணுனதுக்கும் நாங்க அறிவிக்கிறதுக்கும் சரியா இருந்தது. மாளவிகாவுக்கு இதுல நிறைய ஸ்கோப் இருக்கு. இதுல அவங்க ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட். மொழி தெரிஞ்ச ஹீரோயினா இருந்தால், ஸ்பாட்ல டெலவப் பண்ற டயலாக்குகளை உள்வாங்கி உடனே ஈஸியா நடிச்சிடுவாங்க. ஆனா, மாளவிகாவுக்கு மொழி கொஞ்சம் தடையா இருந்தாலும் அதைக் காட்டிக்காமல் ‘எனக்கு ஒரு 10 நிமிஷம் கொடுங்க’ன்னு கேட்டுட்டுப் போய் அந்த டயலாக்கை ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்து நடிச்சு அசத்திடுவாங்க.’’
``படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?’’
“சமுத்திரக்கனி சார் இருக்கார். அவர்தான் வில்லன். ஏற்கெனவே, அவங்க தனுஷ் சாரும் அவரும் சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் இதுல கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அவங்க ரெண்டு பேருக்குமான காட்சிகள் ரொம்ப சூப்பரா வந்திருக்கு. ஸ்மிருதி வெங்கட் தனுஷ் சாருக்குத் தங்கச்சி. ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்காங்க. இவங்களுக்குள்ள இருக்கிற எமோஷன் விஷயங்கள் படத்தைத் தாங்கும். ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமார், ‘மாஸ்டர்’ மகேந்திரன், இளவரசு சார், ‘ஆடுகளம்’ நரேன் சார்னு நிறைய பேர் இருக்காங்க. நான் சொன்ன இந்தப் பெயர்கள்ல சிலருக்கு கிரே ஷேட் இருக்கும்.’’
``முதல்முறையா ஜி.வி.பிரகாஷ் குமார் கூட வொர்க் பண்ணின அனுபவம் எப்படியிருந்தது?’’
“அவர் செம ஜாலி. பேக் கிரவுண்ட் ஸ்கோர் வேலைகள் ஆரம்பிச்சுப் போய்க்கிட்டிருக்கு. எப்போவும் ஜி.வி ப்ரோ இசையமைக்கிற படங்களுக்கு தன்னுடைய ஸ்கோரிங்ல கலக்கிடுவார். அதுதான் படத்தை அடுத்தடுத்து எடுத்துட்டுப் போகும். அந்த மேஜிக்கைப் பார்க்க ஆவலா இருக்கேன். இவ்வளவு நாளா ஃப்ரெண்ட்ஸ் கூடவே ட்ராவல் பண்ணிட்டு, முதல்முறையா வெளியே வந்து இவர்கிட்ட வொர்க் பண்றேன். ஆனா, அவர் கொஞ்சம்கூட அந்த உணர்வைக் கொடுக்கலை. ரொம்ப நாள் பழகின மாதிரி கம்ஃபோர்ட்டை ஜி.வி.ப்ரோ எனக்குக் கொடுத்தார்.’’
``ஏற்கெனவே ‘மாறன்’னு ஒரு படம் இருக்கு. தவிர, விஜய், சூர்யா, மாதவன்னு நிறைய ஹீரோக்கள் இந்தப் பெயர்ல நடிச்சிருக்காங்க. உங்களுடைய ‘மாறன்’ல என்ன இருக்கும்?’’
‘`இந்தப் படத்துக்கான டைட்டில், ஹீரோவுடைய கேரக்டர் பெயர்தான் இருக்கணும்னு நினைச்சோம். அதுக்காக யோசிக்கும்போது, கிடைச்ச பெயர்தான் மதிமாறன். ‘மதி’ன்னா அறிவுன்னு ஒரு பொருள் இருக்குல்ல. இவர் ஒரு பத்திரிகையாளர். இவருடைய சாதுரியமும் புத்திசாலித்தனமும்தான் ஹைலைட்டா இருக்கும். அதனால அந்தப் பெயர் சரியா பொருந்துச்சு. அதையே டைட்டிலா வெச்சிட்டோம்.’’
`` ‘ஊமை விழிகள்’, ‘கோ’, ‘கவண்’னு நிறைய படங்கள் ஊடகத்தை மையமா வெச்சு வந்திருக்கு. அதிலிருந்து ‘மாறன்’ எந்த விதத்துல வித்தியாசப்படுது?’’
“ஒரு கான்செப்டை ஒவ்வொரு படைப்பாளியும் எப்படிஅணுகுறாங்கன்னு இருக்கு. உலகப்போர் நிஜத்துல நடந்த ஒரு சம்பவம். அதை ஒவ்வொரு இயக்குநரும் வெவ்வேறு விதமா நமக்குக் கொடுத்திருக்காங்க. எனக்கு கே.வி.ஆனந்த் சாருடைய ‘கோ’ ரொம்பப் பிடிக்கும். அதுல முழுக்க மீடியா, அரசியல்னு இருக்கும். என்னுடைய ‘மாறன்’ல ஒரு பத்திரிகையாளரின் பர்சனல் பக்கங்கள் இருக்கும். அவங்க துறை அவங்களுக்குத் தனிப்பட்ட முறையில எப்படி தாக்கத்தைக் கொடுக்குதுன்னு எமோஷன் கலந்து சொல்லியிருக்கேன்.’’
``மலையாள எழுத்தாளர்கள் சர்ஃபூ, சுஹாஸ், பாடலாசிரியர் விவேக் மூணு பேரும் திரைக்கதை எழுதியிருக்காங்கன்னு கேள்விப்பட்டோம்?’’
“ஆமா. ‘வரதன்’, ‘வைரஸ்’ படங்கள்ல சர்ஃபூ - சுஹாஸுடைய ரைட்டிங் ரொம்பப் பிடிக்கும். சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம் மூலமா அவங்க அறிமுகம் கிடைச்சது. பழகின கொஞ்ச நாள்கள்லேயே நல்லா செட்டாகிட்டோம். கேரளா போய் அவங்ககூட வொர்க் பண்ணுனது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. விவேக் அண்ணாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். இவங்க மூணு பேரும் கூடுதல் திரைக்கதை எழுதியிருக்காங்க.’’
``அடுத்து அதர்வாவை வெச்சுப் படம் பண்றீங்களாமே?’’
‘`ஆமா. அதுக்கான வேலைகள்தான் போய்க்கிட்டிருக்கு. அடுத்த மாதம் ஷூட்டிங். ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதை. அதர்வா ப்ரதர் லீடு கேரக்டர்ல நடிக்கிறார். சரத்குமார் சார், ரஹ்மான் சார் இவங்க எல்லோரும் இருக்காங்க.’’
``வழக்கம்போல அதே கேள்விதான். ‘நரகாசூரன்’ எப்போதான் ரிலீஸ்?’’
‘`என் இன்டர்வியூனாலே இது டெம்ப்ளேட் கேள்வியாகிடுச்சே! வழக்கம்போல நீங்க கேட்ட மாதிரி, நானும் வழக்கம்போல பதில் சொல்றேன். சோனி லைவ்ல ரிலீஸ் பண்றதுக்கான பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. சீக்கிரம் அது உங்களை வந்து சேர்ந்திடும்.’’