
இது ஒரு டார்க் ஹ்யூமர் ஜானர் படம். பொதுவா, படிச்சவங்களுக்கு மட்டும்தான் புரியும்னு சொல்ற மாதிரி டார்க் ஹ்யூமர் படங்கள் சில வந்திருக்கு.
``இந்தப் படத்தோட டைட்டில் ‘சொப்பன சுந்தரி'ன்னு அறிவிச்சதும், நிறைய பேர் ஆச்சரியப்பட்டாங்க. ஏன்னா, அப்படி ஒரு டைட்டில் இது. இந்திரலோகத்து சுந்தரி மாதிரி சட்டுன்னு உருவகப்படுத்திட முடியாத ஒரு பெயர்தான் ‘சொப்பன சுந்தரி'. இன்னொன்னு, ‘கரகாட்டக்காரன்' படத்துல வர்ற கவுண்டமணி - செந்திலோட சொப்பன சுந்தரி காமெடி ஞாபகத்துக்கு வந்துடும். அந்தக் காலத்துல இருந்து இப்ப வரை டிரெண்ட் ஆகிட்டிருக்கும் ஒரு விஷயமா அந்த காமெடி இருந்திட்டிருக்கு. ‘கரகாட்டக்கார'னைக் கொடுத்த கங்கை அமரன் சாரோட வாரிசு வெங்கட்பிரபு சாரை இந்தப் பட டைட்டிலை வெளியிட வச்சிட்டோம்...'' எதிர்பார்ப்புடன் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். இதற்கு முன் வெங்கட்பிரபுவை வைத்து ‘லாக்கப்' படத்தை இயக்கியவர் இவர்.


``யார் இந்தச் சொப்பன சுந்தரி? அவங்க என்ன பண்றாங்க?’’
‘‘கதையோட ஒன்லைனே அதான். ‘நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்' என்ற திருக்குறளுக்கும், இந்தப் படத்தோட கதைக்கும் சம்பந்தம் இருக்கு. குற்றத்தையும் நன்னெறியையும் கனெக்ட் பண்ணுகிற அருமையான குறள். அப்படிப்பட்ட கதையில வர்ற ஒரு பொண்ணு... அவ எந்த நேரத்துல என்ன பண்ணுவா, எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவா, இப்படி எதுவும் அவளைக் கணிக்க முடியாது. அவளுக்கேகூடத் தெரியாது. அவளோட பெயர் கண்ணுக்குத் தெரியாத ஒரு கதாபாத்திரத்தின் பெயரா இருக்கணும்னு விரும்பினேன். அப்படி அமைஞ்சதுதான் ‘சொப்பன சுந்தரி.' இந்தக் கேரக்டர்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க. குடிசைப் பகுதி ஒன்றில் நடக்கிற கதை.
இது ஒரு டார்க் ஹ்யூமர் ஜானர் படம். பொதுவா, படிச்சவங்களுக்கு மட்டும்தான் புரியும்னு சொல்ற மாதிரி டார்க் ஹ்யூமர் படங்கள் சில வந்திருக்கு. ஆனா, இது அப்படியில்ல. ‘சூது கவ்வும்', ‘டாக்டர்' சாயல்ல இந்தப் படத்தின் காமெடி இருக்கும். ரொம்ப தத்துவார்த்தமாகவோ, புத்திசாலித்தனமாகவோ புரிய வைக்கற காமெடியா பண்ணாமல், கலகலன்னு சிரிக்கற கதையா கொண்டு போயிருக்கேன். ஒரு அம்மா, அவங்களுக்கு மூணு பொண்ணுங்க. ஹீரோயின், கல்யாணமாகாத படிச்ச பொண்ணு, அவளுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. இந்தக் குடும்பமே வித்தியாசமான ஒரு தன்மையில இருக்கும். அம்மாவா தீபா சங்கர், அப்புறம் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிப்ரியா, சுனில் ரெட்டி, கிங்ஸ்லி, கருணாகரன், மைம்கோபி, பிஜான், சாரான்னு நிறைய பேர் இருக்காங்க. டெக்னீஷியன் டீமும் அருமையான டீம். படத்துக்கு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன்னு ரெண்டு பேர் ஒளிப்பதிவு பண்ணியிருக்காங்க. அஜ்மல் தக்சீன் இதுல இசையமைப்பாளரா அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க சென்னையில எடுத்திருக்கோம். ஸ்லம் ஏரியா ஒரிஜினலாகவே இருக்கணும்னு நிஜ ஸ்லம் பகுதியிலேயே செட் போட்டு, மேட்ச் பண்ணியிருக்கோம்.''
``ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலேயே நடிக்கிறாங்க..?’’
‘‘ஆமா... நல்ல கதைகள் செலக்ட் பண்றாங்க. அவங்க கதைத் தேர்வும், அதுக்கான உழைப்பும் பிரமிப்பா இருக்கு. இந்தக் கதைக்காக அவங்க நிறைய ஹோம் ஒர்க் பண்ணினாங்க. இந்தக் கதை நடக்கற ஏரியா, அங்க உள்ள மக்கள் எப்படிப் பேசுவாங்க, அவங்க உடல்மொழி என்னன்னு எல்லாமே வீடியோவா ஷூட் செய்திருந்தோம். அந்த வீடியோவை ஐஸ்வர்யாகிட்ட கொடுத்தோம். அவங்க அந்த பாடிலாங்குவேஜைக் கத்துகிட்டு வந்து நடிச்சிருக்காங்க. ஸ்பாட்டுல அவங்க லட்சுமிப்ரியா, தீபாசங்கர்னு மூணு பேர் காம்பினேஷன் இருந்தாலே கலகலன்னு இருக்கும்.''
`` ‘லாக்கப்'ல ஹீரோன்னு யாரும் கிடையாது. இப்ப இயக்கியிருக்கறது ஹீரோயின் சென்ட்ரிக்... மினிமம் கேரண்டியாக ஓடுறீங்களே?’’
‘‘என் முதல் படம் ‘லாக்கப்' ஓ.டி.டி-யிலதான் வெளியாச்சு. போன லாக்டௌன் சமயத்துல வெளியானாலும் ஆனந்த விகடன்லேயும் 41 மார்க் கொடுத்து எங்க படத்தை பாஸ் பண்ண வச்சிருந்தீங்க. அதனால எல்லாருமே படத்தைப் பார்த்தாங்க. கவனம் ஈர்த்தது. ஹீரோவுக்காக என இல்லாமல் ஒரு நல்ல கதையை நேர்த்தியாக எழுதினதால, ஒரு ரைட்டரா எனக்கும் அங்கீகாரம் கிடைச்சது. ‘எங்களுக்கும் அப்படி ஒரு பட்ஜெட்ல நல்லதா ஒரு படம் பண்ணிக்குடுங்க'ன்னு பல தயாரிப்பாளர்கள் என்கிட்ட கேட்டாங்க. குறைந்த பட்ஜெட்ல படம் பண்ணி கவனம் பெறணும்னா, நல்ல லைன் தேவைப்படும். சினிமாத்தனமா, கமர்ஷியலா யோசிச்சா அது சின்ன பட்ஜெட்ல செட் ஆகாது. யதார்த்தமான ஒரு நல்ல கதை அமைஞ்சாதான், பட்ஜெட்ல கொடுக்க முடியும். ஒரு ரைட்டரா எனக்கும் அது நிறைவைத் தருது.’’