
எஸ்.ஆர். பிரபு சாரும், அவரும் நல்ல நண்பர்கள். அவரைப் பயன்படுத்திக்கலாமான்னு கேட்டதும், எனக்கு ‘எங்கேயும் எப்போதும்' ஞாபகத்திற்கு வந்துடுச்சு
“ஆரம்பத்தில் டான்ஸராக இருந்தேன். 5,000 போட்டியாளர்கள் மத்தியில் ‘ஆட்டம் பாட்டம் டான்ஸ் ஷோ’வில் முதலிடம் கிடைத்தது. ‘ஜோடி நம்பர் 1’ அடுத்து போனபோது, என் நடனத்தில் கதை சொல்ற விதம் நல்லா இருப்பதா ராதிகா, கௌதமி மேடம் சொன்னபோது சின்னதா விதை விழுந்திருக்கும்போல. நண்பர்களோட சேர்ந்து ‘Happy to be Single'ன்னு ஒரு வெப் சீரிஸ் பண்ணினேன். அனேகமாக தென்னிந்தியாவில் வந்த முதல் வெப்சீரிஸ் அதுதான். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆச்சரியம் ஆகிவிட்டது. அப்புறம் ஒரு திரைக்கதை எழுத முடியும்ங்கிற தைரியம் வந்தது. சமீபத்தில் என் அம்மா மார்பகப் புற்றுநோயில் இறந்துட்டாங்க. ஆனால் எனக்கு அம்மாவைத் திரும்பக் கொண்டு வந்து பார்க்கணும்போல இருந்தது. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்னு நினைத்தபோது அதுவே ‘கணம்' படத்தின் ஆரம்பமா இருந்தது...” சரளமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக்!


``எப்படி இருக்கும் உங்கள் ‘கணம்'?’’
“ ‘கணம்’ என்னோட பர்சனல் எமோஷன், தாய் மகனுக்கான உறவு, சயின்ஸ் ஃபிக்ஷன் டிராமான்னு பல தளங்களில் பயணிக்கும் படம். இதை ஒரு சின்னப் படமாக எடுக்கலாம் என்ற நினைப்போடு தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகினேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபு சாரைக் கலங்கடித்துவிட்டது. அவர் இதில் உள்ள அமைப்பைப் புரிந்துகொண்டு பெரிய அளவிற்குக் கொண்டுப் போக முடிவு செய்தார். இந்தக் கதையின் தன்மையைப் பார்த்துட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் தயாரிக்கிற எண்ணமே தயாரிப்பாளருக்கு வந்திருச்சு.”


``சர்வானந்த் தெலுங்கில் பெரிய இடத்தில் இருக்கார். நீண்டநாள்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறாரே?’’
“எஸ்.ஆர். பிரபு சாரும், அவரும் நல்ல நண்பர்கள். அவரைப் பயன்படுத்திக்கலாமான்னு கேட்டதும், எனக்கு ‘எங்கேயும் எப்போதும்' ஞாபகத்திற்கு வந்துடுச்சு. ஒரே படத்தில் உள்ளத்தை அள்ளினார். அவர் இப்போ என்ன செய்றார்னு தேடிப் பார்த்தால் அங்கே மாஸ் ஹீரோவாக இருக்கார். அவருக்கு இந்தப் படம் பெரிய இளைப்பாறல். உட்கார வச்சு கதை சொன்னால் போகப்போக சரண்டர் ஆகிவிட்டார் சர்வானந்த். ஒரு முக்கியமான சீனில் சர்வானந்த் எனக்கே கண்ணீரை வரவழைத்தார். படம் முடியும்போது திரைக்கதை நான் நினைத்த வெற்றியை அடைந்துவிட்டதாக நினைத்தேன். சர்வானந்த் பத்து வருஷங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார். நியாயம் செய்திருக்கிறார்.”

``அமலா 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கிறாரே..?’’
“பேட்டிக்காகச் சொல்றேன்னு நீங்க நினைச்சாலும் சரி... இந்தத் திரைக்கதை எழுதும்போதே அமலா அம்மாவை மனதில் வைத்துதான் எழுதினேன். எழுதிட்டுப் பார்த்தால் அவங்க புளூ கிராஸ், வீட்டை நிர்வகித்துக் கொண்டு சினிமாவில் நடிப்பதைக் கிட்டத்தட்ட மறந்தி ருந்தார்கள். இருந்தும் அவர்கள் கதை கேட்க சம்மதித்தது என் நல்வினை. ‘40 நிமிடங்கள் போதுமி ல்லையா’ எனக் கேட்டபோது ‘இன்னும் வேண்டும்’ என்றேன். சிரிக்கத் தொடங்கியபோது நான் கதை சொல்லத் தொடங்கினேன். அவர்கள் நினைத்தபடி என் கதைக்குள் வந்து விட்டார்கள் என்பதை ஈர விழிகள் உணர்த்தின. அமலாவும் சர்வானந்தும் படத்தின் முதிர்ச்சிக்கு அவ்வளவு உதவி யிருக்கிறார்கள். கதைக்கு வேறொரு விதத்தில் ரமேஷ் திலக், சதீஷ் உதவியிருக்கிறார்கள். சதீஷ் வழக்கமான அவரது ஒன்லைனர்களை மறந்துவிட்டு நடித்திருக்கிறார். நாசரின் பெரும்பங்கு இதில் இருக்கிறது. இசையை ஜேக்ஸ் பிஜோய் கவனித்திருக்கிறார். ‘அய்யப்பனும் கோஷியும்’ இசை இவர் கைவண்ணத்தில் வந்தது. ஒளிப்பதிவில் நேர்த்தியைச் சுஜித் சாரங்கால் கொண்டுவர முடிந்தது. ஒரு நல்ல சினிமாவிற்கான உழைப்பில், நம்பிக்கையாக ‘கணம்’ படத்தைச் செய்திருக்கேன். கண்ணாடி முன்னாடி நின்னா நாம் தெரிகிற மாதிரி... ‘கண’த்தில் நீங்களும் இருப்பீங்க!”