
தான் அஜித்குமார் என்பது தெரிகிற மாதிரியே நண்பர்களிடம் நடந்துகொள்ளமாட்டார். எல்லோருக்குமான தங்கும் இடம்தான்.
அஜித் நடிக்காத நேரங்களிலெல்லாம் பயணத்தில்தான் இருக்கிறார். 25 நாள் பயணமாக டேராடூன் வரைக்கும் போய்விட்டு, அடுத்த ஒன்பது நாள் பயணமாக கைலாஷ் போய் வந்திருக்கிறார். கைலாஷ் மலையை இந்தியாவிலிருந்து தரைவழியாகவே சென்று பார்ப்பது மிகக் கடினமான பயணம். இவ்வளவு பெரிய பயணத்தை அஜித் கைக்கொண்டது பற்றி அவரின் நண்பர் சுரேஷ் சந்திராவிடமும் அவரோடு பயணித்த பைக் நண்பர்களிடமும் பேசினோம். கிடைத்த தகவல்கள் ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுத்தின.


‘‘அஜித் சாருக்கு எப்பவும் பயணங்களின் மீது ஈடுபாடு உண்டு. ‘பயணங்களில் புது மனிதர்களைச் சந்திப்பதும், புது இடங்களைப் பார்ப்பதும், அவர்களது பண்பாட்டை அறிந்துகொள்வதும் நடக்கிறது. நமது ஈகோ குறைகிறது. நிறைய தெரிந்துகொள்கிறோம்’ என்று அடிக்கடி சொல்வார். அவர் பயணங்களைப் பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கவில்லை. சமூகத்தைத் தனது கண்ணாடி வழியாகப் பார்த்து நிஜத்தைக் கண் முன்னால் தரிசிப்பதையே விரும்புவார். அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்துவிட்டது.
தான் எங்கிருக்கிறோம் என்று எங்களுக்கு ஜி.பி.எஸ் மூலம் தெரிவித்துவிட்டு நண்பர்களோடு பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இவ்வளவு நேரத்திற்குள் இத்தனை தூரம் பயணிக்க வேண்டும் என்ற நிர்பந்தமெல்லாம் வைத்துக்கொள்ள மாட்டார். போகிற இடங்களும் வழியில் மாறி, நடுவில் வேறு இடம் புகுந்து பார்த்துவிட்டுச் செல்வார். நள்ளிரவில் குளிர் ஆறு டிகிரி வரைக்கும்கூடப் போகும். பகலில் வெயில் சுட்டெரிக்கும்.



தான் அஜித்குமார் என்பது தெரிகிற மாதிரியே நண்பர்களிடம் நடந்துகொள்ளமாட்டார். எல்லோருக்குமான தங்கும் இடம்தான். அது எவ்வளவு வசதி குறைவாக இருந்தாலும் புன்னகையோடு இருப்பார். குரூப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். சமைப்பது, சுத்தம் செய்வது, சமையலுக்கான ஏற்பாடுகள், பாத்திரங்களை சுத்தம் செய்வது என இருக்கும். அவருக்கும் அதே வேலைகள் அட்டவணையில் வரும். அதைச் செய்வதற்கு அவர் சலித்துக்கொண்டது கிடையாது. அஜித்குமார் என்பதற்காகக் கிடைக்கும் எந்தச் சலுகைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
எங்கே போனாலும் தமிழர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வார். சிறிய வியாபாரங்கள் செய்து பேராசை இல்லாத மனத்துடன் வாழும் அவர்களை ரொம்பவும் ரசிப்பார். இங்கே அவரை பார்க்கக் கிடைப்பாரா என ரசிகர்கள் நினைக்கும்போது, அவர்களோடு மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவார். ‘பயணங்களும் இடங்களும் புது மனிதர்களுமே எனக்கு என்னைக் காட்டித் தருகிறார்கள், பண்படுத்துகிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இந்தத் தடவை மாதிரி கடுமையான பயணத்தை அஜித் மேற்கொண்டதில்லை. மேடும் பள்ளமும் நிறைந்த பாதைகள், பனி நிறைந்த மலைகள், பாறைகள் மட்டுமே நிறைந்த பாதைகள் எனக் கடினமாக இந்தப் பயணம் இருந்தது.


அஜித்திடம் இருக்கும் ஆச்சரியமே அவர் எல்லோரும் போகும் ஸ்பாட்களுக்குச் செல்ல ஆர்வம் காட்ட மாட்டார் என்பதுதான். மனிதர்கள் தரிசிக்காத இடங்கள் பிடிக்கும். அவர் சொன்ன மாதிரி அவர் உடம்பு கேட்கும். பெருமலைகளுக்கு முன்னால் நின்று, வெறும் தூசு மாதிரி தன்னை உணர்ந்துகொண்டு ‘நான்' என்ற அகத்தையே மறந்து நிற்கிற பரவசத்தை ரசிப்பார். அஜித் பயணத்தை விரும்பும் காரணத்தை மூன்று விஷயங்களாகப் பிரித்துக் குறிப்பிடுவார். பயணிகள், பாதை மற்றும் எனக்குள் நான் செய்த பயணம்.
அவரோடு இப்போது படப்பிடிப்பில் இருந்த மஞ்சு வாரியரும் அஜித்தின் ஆர்வத்தில் ஆச்சரியப்பட்டுவிட்டார். நானும் என் நண்பர்களோடு இதில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டதும் சரி சொன்னார் அஜித். குழுவில் இருக்கிறவர்கள் பல்வேறு பின்னணி கொண்டவர்கள். பயண இலக்கைப் போல பயணத்தின் அழகும் முக்கியம். மிக உயரமான இடங்களில் ஆபத்து காத்திருக்கும். எச்சரிக்கையும் நிதானமும் பதற்றமின்மையும் தேவைப்படுகிற இடங்கள் அவை. அஜித்திடம் அது குறைவின்றி இருக்கும்.


இந்தத் தடவை பயணத்தின்போது அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குச் சென்றார். அவர் மக்கள் கூடும் இடங்களின் வைப்ரேஷனை விரும்புவார். அங்கு மக்களின் பிரார்த்தனைகள் நிறைந்து கிடப்பதாக நினைப்பார். அடுத்து இந்தியா - பாகிஸ்தான் பார்டர் வரைக்கும் போனார். அங்கே இருக்கிற மெட்ராஸ் ரெஜி்மென்்ட் படையினர் தாண்டி அத்தனை பேருக்கும் அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்களோடு தேநீர் குடித்து சிரித்துப் பேசி அனுபவம் பகிர்ந்து, தோள் தட்டி, குடும்பநலன் விசாரித்து, அவர்கள் அவரோடு இருந்ததை சந்தோஷ கணங்களாக மாற்றிவிட்டார்.
அவரது ஸ்பெஷல் ரேஸர் பைக்கைப் பற்றி எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள். நண்பர்கள் தயார் செய்து கொடுத்த பைக்கை பயணங்களில் அவரேதான் பார்த்துக்கொள்வார். பாங்காக்கில் ‘துணிவு’ ஷுட்டிங் முடிந்த பின்பும், அங்கும் அவர் பைக் பயணம் தொடர்கிறது.

அஜித் பல சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார். பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறார். தன் சோதனை முயற்சிகளில் எவ்வளவு தூரம் போக முடியும், போக வேண்டும் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. நடிகராக வெளிப்படையாக வரிந்துகட்டிக்கொண்டு தன்னை வெளிப்படுத்தியதில்லை. எல்லோர் படங்களும் ஓட வேண்டும் என்பார். தன் படம் அதைவிட ஒரு நாள் கூட ஓடினால் போதும் எனச் சொல்வார்’’ என்கிறார்கள் அவர் நண்பர்கள்.