குழந்தை நட்சத்திரமாக திரையில் நம்மிடையே அறிமுகமானவர் பரத் ஜெயந்த். சினிமா, சீரியல் என குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர் பிறகு திரைத்துறையில் முகம் காட்டாமல் இருந்தார்.
தற்போது பெசன்ட் நகர் கடற்கரை அருகில் ஐஸ் கிரீம் டிரக் ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றோம். `ப்ரெண்ட்ஸ்' படத்தில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சற்றும் மாறாத அதே முக ஜாடை! அவரிடம் பேசினோம்.
"எனக்கு எல்லாமே என் அம்மாதான். சினிமாவுக்கு வந்ததுக்கு அம்மாதான் முக்கியமான காரணம். நான்காவது படிக்கும்போது திரைத்துறைக்குள் குழந்தை நட்சத்திரமா என்ட்ரியானேன். கடைசியா பிளஸ் டூ படிக்கும்போது சரத்குமார் சாருடன் `இங்கிலீஷ்காரன்' திரைப்படத்தில் நடிச்சேன். அதுக்குப்பிறகு `சொர்க்கம்' சீரியலில் நடிச்சேன். அவ்வளவுதான்!
ஸ்கூல் முடிச்சிட்டு லயோலா கல்லூரியில் விஸ்காம் படிச்சேன். படிக்கும்போதே அடுத்ததாக பிசினஸ் தான் என்கிற முடிவில் உறுதியா இருந்தேன். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எப்ப உயரத்துக்குப் போவோம்.. எப்போ கீழே போவோம்னே சொல்ல முடியாது. சான்ஸ் கிடைக்கலாம்... கிடைக்காமப் போகலாம்! பிசினஸூக்குத் தேவையான படிப்பையும் படிக்கணும்னு விஸ்காம் முடிச்சிட்டு எம்பிஏ படிச்சேன். பிறகு, விளம்பரத் துறையில் ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணினேன். அப்புறமாகத்தான் பிசினஸ் தொடங்கினேன்.
என்ன பிசினஸ் பண்ணலாம்னு யோசிச்சப்ப எனக்கு ஐஸ்கிரீம் ரொம்பப் பிடிக்கும். நடிச்சிட்டு இருக்கும்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன். எனக்கு சாப்பாடே கொடுக்காம தினமும் ஐஸ்கிரீம் மட்டும் கொடுத்தாங்கன்னா போதும்னு வைங்களேன்! அப்படி எனக்குப் பிடிச்ச ஐஸ் வச்சு ஒரு தொழில் தொடங்கலாம்னு நினைச்சேன். எனக்குப் பிடிச்சதை தொழிலா பண்ணும்போது அது எனக்கு போர் அடிக்காது. கஷ்டமா தெரியாது. புதுசு, புதுசா எக்ஸ்ப்ளோர் பண்ணினேன். நம்ம ஊர்ல கூல் டிரிங்ஸ் ஆக நாம விரும்பி குடிக்கிறதை நாம ஏன் ஐஸ்கிரீமா மாத்தக்கூடாதுன்னு முடிவெடுத்து அதையே பிசினஸ் ஆக்கினேன். என் ஃப்ரெண்ட்கிட்ட இதைப் பற்றி ஷேர் பண்ணும்போது அவன் நானும் உன்னோட சேர்ந்துக்கிறேன்னு சொன்னான். ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிச்சோம்.
சென்னையில் ஃபுட் டிரக் பிரபலமான சமயம் அது. டிரக்ல ஐஸ்கிரீம் விற்கிற கான்செப்ட் சென்னையில் நான் ஸ்டார்ட் பண்ணப்ப அது புது ஐடியா. இந்தத் தொழில் தொடங்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. எல்லாத்தையும் தைரியமா எதிர்கொண்டதால மட்டும்தான் அதுல வெற்றிக்கனியை என்னால தொட முடிஞ்சது என்றவரிடம் சினிமா ரீ என்ட்ரி குறித்துக் கேட்டோம்.
"குழந்தை நட்சத்திரமா மீடியாத்துறையில கடந்த பத்து வருஷமா இருந்துட்டேன். நான் சினிமாவுக்காக முயற்சி பண்ணினா நிச்சயம் எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கும். ஆனா, அதுக்காக நான் முயற்சி எடுக்கலைங்கிறதுதான் உண்மை. இப்ப எனக்கு வாய்ப்பு வந்தாலும் நான் அது வேண்டாம் என்கிற மைண்ட் செட்ல தான் இருக்கேன். ஒரு ஐந்து வருஷம் பிசினஸ்ல கவனம் செலுத்தலாம். நாம இல்லைன்னாலும் இந்த பிசினஸ் சிறப்பா நடக்கும் என்கிற நிலையில் சினிமாவில் நடிக்க முயற்சி பண்ணலாம் என்கிற ஐடியாவில் இருக்கேன். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் வயது மிகப்பெரிய தடையா நிச்சயம் இருக்காது. நம்ம நடிப்பும், கதாபாத்திரமும் தான் முக்கியம். அப்படியொரு சிறப்பான கதாபாத்திரம் எனக்கு அமைஞ்சா ஐந்து ஆண்டுகள் கழிச்சு நிச்சயம் நானும் நடிப்பேன்" என்றவரிடம் வாடிக்கையாளர்கள் கமெண்ட்ஸ் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.
"நான் பெசன்ட் நகரில் ஐஸ் டிரக் வச்சிருக்கேன். ஐஸ் கிரீம் சாப்பிட வர்றவங்க என்னைப் பார்த்துட்டு, `உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு'ன்னு சொல்லுவாங்க. பிறகு, அவங்களே வந்து, `நீங்க இந்தப் படத்துல நடிச்சவர் தானேன்னு ஏதாவது படம் பெயர் சொல்லி கேட்பாங்க!'.. ஆமாங்க, கண்டுபிடிச்சிட்டீங்க போலேயேன்னு சொல்லுவேன். ஏன் நடிக்கலைன்னு கேட்கிறவங்ககிட்ட உங்ககிட்ட சொன்ன அதே பதிலைத்தான் சொல்லுவேன்.
சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் எனக்கு வரல. ஷார்ட் பிலிம்ஸ்ல நடிக்க கேட்டாங்க. 5,6 நாள் ஆகும்னு அதுவும் என்னால பண்ண முடியல. எனக்கு எப்பவும் ஒரு வேலை பண்ணினா அதுல முழுசா இறங்கி பண்ணிடணும். அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு பண்ண எனக்கு எப்பவும் பிடிக்காது. இப்ப பிசினஸ்ல மட்டும்தான் என் முழு கவனமும் இருக்கு. பேட்டி எடுக்கிற சில சேனல்களில் இவரோட நிலைமையைப் பார்த்தீங்களான்னு டைட்டில் வர்றதைப் பார்க்கும்போது நான் பிசினஸ் தானேடா பண்றேன். ஏதோ பிச்சை எடுக்கிற மாதிரி போடுறீங்களே? பிசினஸில் சாதிக்கும் நடிகர்னு போடலாமேன்னு தோணும். ஆனா, அவங்களை சொல்லி என்ன பண்றது. அவங்க வியூஸூக்காக பண்றாங்க. அது அவங்களுடைய சாய்ஸ்! அதை நாம எதுவும் சொல்ல முடியாது" என்றவரிடம் அவருடைய அம்மா குறித்துக் கேட்டோம்.
"எனக்கு எல்லாமே என் அம்மா தான். அவங்க என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாம செய்வேன். அப்படி அம்மா பிள்ளையாகத்தான் வளர்ந்தேன். திடீர்னு என் அம்மா தவறிட்டாங்க. அவங்களோட இழப்பிலிருந்து என்னால மீண்டு வரவே முடியல. 2,3 மாசம் என் கூட எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருந்தாங்க. என்னை நானே பார்த்துக்கிற அளவுக்கு என் மைண்ட் செட் மாறின பிறகு தான் அவங்க எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு போனாங்க. அது மிகப்பெரிய இழப்புதான்! அவங்க நினைப்பிலிருந்து மீண்டு வர்றதுக்கு பிசினஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.
நிறைய தப்பு பண்ணி அதிலிருந்து கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் பிசினஸில் என்னோட நிறைய முடிவுகள் உருப்படாம போயிருக்கு. நல்லவர்னு நான் நினைச்ச ஒருத்தரை என்னோட பிசினஸில் சேர்த்தேன். ஒருகட்டத்தில் அவரைப் பற்றித் தெரிஞ்சதும் அவர்கிட்ட இருந்து விலகிட்டேன். கொஞ்சம் கவனிக்காம விட்டிருந்தா அவர்கிட்ட மொத்த பிசினஸையும் இழந்துட்டு நின்னுட்டு இருந்திருப்பேன்!" என்றார்.