
நாங்கள் எதையும் மறக்கவில்லை. ஊர் மக்களுக்காக, இலவச ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
எப்போதுமே கலகலப்பான பேச்சால் தான் இருக்கும் இடத்தையே மகிழ்ச்சிமயம் ஆக்கிவிடுபவர் கங்கை அமரன். ஆனால் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய அணிந்துரை குறித்து ஒரு யூடியூப் சேனலில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அவர் ஆத்திரத்தின் உச்சியில் வசைபாடியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ஆத்திரமெல்லாம் வடிந்து, பழைய கலகல கங்கை அமரனாகவே அவர் பதில் அளித்த நேர்காணல் இது.
“அந்தப் பேட்டிக்கு முன்பாக அவர்கள் சொன்னது ஒன்று, செய்தது வேறாக இருந்ததால் அப்படி நடந்துவிட்டது. அந்தமாதிரியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னுதான் இப்போ பொறுமையா உட்கார்ந்திருக்கேன். ‘ஏன் எல்லார்கிட்டயும் கத்திட்டிருக்க. உன்னையே நீ அடக்கிக்க மாட்டியா’ன்னு இளையராஜா அண்ணன் திட்டினார். ‘நான் இப்படித்தாண்ணே. இனிமே அடக்கிக்க ட்ரை பண்ணுறேன்’னு சொன்னேன். இப்போல்லாம், அமைதியாதான் இருக்கேன்” என்கிறார்.
``பண்ணைபுரத்தின் எளிய பின்னணியில் இருந்து வந்து உயரங்களைத் தொட்ட குடும்பம் உங்களுடையது. ஆனால், கடந்துவந்த பாதையை மறந்துவிட்டீர்கள் என்று உங்கள் அண்ணன்மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படுகிறதே?’’
“நாங்கள் எதையும் மறக்கவில்லை. ஊர் மக்களுக்காக, இலவச ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டிக்கொண்டிருக்கிறோம். வருடம்தோறும் அம்மாவின் நினைவு நாளுக்கும் தீபாவளிக்கும் ஊருக்குச் சென்று மக்களோடு இருப்பது வழக்கம். அப்போல்லாம் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவதோடு இல்லாதவர்களுக்குத் துணிகளும் எடுத்துக்கொடுக்கிறோம். திருவிழா வந்தால் உதவி செய்வோம். ஊரார் சந்தோஷமாக இருக்க நல்ல பாடல்களைப் போட்டுக் கொடுத்திருக்கோம். இதைத் தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்? நாங்கள் பெரிய அளவுக்குப் பணம் வைத்திருக்கக்கூடிய ஆட்கள் இல்லை. நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 20-ல் 1 பங்குதான் அண்ணன் சம்பாதிக்கிறார்.”
``விஜய் - அஜித் இணையும் பேன் இந்தியா படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என்று சொல்லியிருக்கிறீர்களே?’’
“உண்மைதான். அதுக்கான முயற்சி நடந்துட்டிருக்கு. ‘மங்காத்தா’ பார்த்துட்டு ‘ஏம்ப்பா, இந்த மாதிரி ஒரு கேரக்டரை நான் பண்ணியிருப்பேனே?’ என்றார் விஜய். அதனால்தான், விஜய் - அஜித் ரெண்டுபேரும் நடிக்கிற மாதிரி அட்டகாசமான கதையை எழுதிட்டிருக்கான் பிரபு. அந்தக் கதை ரெண்டு பேருக்கும் பிடிச்சு ஓகே ஆன அடுத்த நிமிடமே அறிவிப்பு பிரமாண்டமா வரும், விஜய்யும் அஜித்தும் வெளியில்தான் பிரிந்திருக்கிறார்கள். உண்மையில், ரொம்ப ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு ஃபேமிலியும் யாருக்கும் தெரியாமல் துபாயில் சந்திப்பார்கள். எங்க குடும்பத்தோடு துபாய் போயிருந்தப்போ பார்த்திருக்கேன். நாங்கள் இந்திரா நகரில் இருக்கும்போது, முகத்தை நல்லா கவர் பண்ணிட்டு பைக்கிலேயே அஜித் வீட்டுக்கு வந்து ‘அம்மா, எனக்கு நல்ல காபி கொடுங்க’ என்பார். நல்ல மனசுள்ள பிள்ளை அஜித்.”
``விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் குதித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“மக்களுக்கு நல்லது பண்ணணும்னு வர்றாங்க. நல்லபடியா எல்லோரும் வரட்டும். ஆனால், கமல், விஜய், அஜித் மூவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் சந்தோஷம். கமல் முதல்வர், அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் நிதியமைச்சர் பதவி கொடுக்கலாம். அரசு பணம் கொடுக்கலைன்னாலும் இவங்க சொந்தக் காசுல நல்லது பண்ணுவாங்க. இவர்களுடன் சூர்யாவையும் சேர்த்துக்கலாம். ஆனால், எனக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி கொடுத்துவிட வேண்டும்.”
``உங்கள் திரை அனுபவத்தில் ரஜினி - கமல்ஹாசன் என உச்ச நடிகர்களை இயக்காமல்போனதற்கு என்ன காரணம்?’’
‘‘எனக்கு ‘சிங்காரவேலன்’ படத்தை இயக்க ஒரு வாய்ப்பு இருந்தது. அதேபோல, எனக்கு காமெடி நல்லா வரும்னு ‘ராஜாதி ராஜா’ படத்தை இயக்க ரஜினி சொன்னார். எனக்கும் ஆசை இருந்தது. அப்போது, ரஜினியும் கமலும் என்னிடமிருந்து தப்பித்துவிட்டார்கள். ஆனால், தப்பிக்கவே முடியாத நண்பர்களாக இப்போதும் இருக்கிறார்கள். வாரத்துக்கு ஒருமுறையாவது நானும் ரஜினியும் நாட்டு நடப்பு குறித்துப் பேசிக்கொள்வோம். ‘ஜெயிலர்’ டைட்டில் அறிவித்தவுடன் போன் செய்து ‘சாமி... சூப்பர் டைட்டில்’ என்றேன். ரொம்ப சந்தோஷப்பட்டார்.”
``உங்கள் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இடதுசாரி மேடைகளில் பாடியவர் நீங்கள். அப்படியொரு பின்புலத்திலிருந்து வலதுசாரி அரசியலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?’’
“நான் கடவுளை முழுமையாக நம்புகிறவன். கடவுளின் ஆசீர்வாதத்தால்தான் நாங்கள் மேலே வந்தோம். இந்துக் கடவுள்களைப் பாசமாக நேசிக்கிறது பா.ஜ.க. எனக்கு பா.ஜ.க பிடித்த காரணமும் இதுதான்.”
``ஆனால், இந்துக்களிலேயே பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லையே?’’
“ஒரு சில இடங்களில்தான் அப்படி உள்ளது. எங்கள் ஊர் வீரபாண்டிய மாரியம்மன் கோயிலுக்குள் எல்லோருமே போவோம். மீனாட்சியம்மன் கோயில் போன்ற பெரிய கோயில்களில் அனைவரும் வழிபடலாம். சாதிகளை ஒழிப்பது ரொம்பக் கஷ்டம். அதெல்லாம் மாறுவதற்குக் கொஞ்சம் லேட்டாகும். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க ஒரு கமிட்டி போட்டு எல்லா சாதியையும் கூப்பிட்டு மொத்தமாக ஒரு திருவிழா நடத்தலாம். என்னை அறநிலையத்துறை அமைச்சராக்கினால், நாம எல்லோரும் மனுச இனம்னு சொல்லி ஒவ்வொரு ஊரிலும் எல்லா சாதியினரையும் சமாதானப்படுத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்று கடவுளை தரிசிக்க வைப்பேன்.”
``இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என மிகப்பெரிய திறமையாளர் நீங்கள். ஆனால், திரைத்துறையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா?’’
“இப்போ கங்கை அமரனை யாராவது மறந்துட்டாங்களா? ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’, ‘சிறு பொன்மணி’, ‘தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரொன்று வந்ததே’ எவ்ளோ அர்த்தமான பாட்டு சார்னு சொல்லி, ரசிகர்கள் இப்போதும் நெகிழ்கிறார்கள். எனது ‘காதல் வைபோகமே’ பாடலை ரீமிக்ஸ் செய்தார்கள். எனக்குக் கிடைத்த பட்ஜெட்ல படங்கள் இயக்கிவந்தேன். எனக்கு இசையமைப்பாளர் ஆகும் எண்ணமே கிடையாது. அண்ணன் தேதி கிடைக்காமல் போனவர்கள் ‘அவரோட ட்யூன் எல்லாம் இவர்கிட்டதான் இருக்கும்’னு நம்பி வந்தாங்க. அப்படியே இசையமைப்பாளர் ஆகிட்டேன். பாடல்கள் எழுதவும் ஆரம்பிச்சிட்டேன். 18 படங்கள் இயக்கியுள்ளேன். 160 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். நினைச்சா நிறைவாகத்தான் இருக்கு.”