
பல பிரச்னைகளைக் கடந்து `மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் 19ம் தேதி ஆரம்பித்துவிட்டது.
வரலாறு காணாத பெரும் காட்டுத்தீப் பேரழிவுக்குப் பிறகு கடந்த வாரம் மெல்போர்னில் நடந்தது `காலநிலை அவசரத்திற்கான மாநாடு.’ இதில் பல முக்கிய எச்சரிக்கைகள் விடப்பட்டன. காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா, அன்டார்ட்டிகா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகள்தான் மிகவும் ஆபத்திலுள்ளன. புவி வெப்பமாகிவரும் வேகத்திற்குப் பல உயிரினங்களால் ஈடுகொடுக்க முடியாது. இந்த வெப்பமாதல் 1.5 டிகிரிக்கும் அதிகமாகச் சென்றால், உலகின் புகழ்பெற்ற இயற்கை ஸ்தாபனமான `கிரேட் பேரியர் ரீப்' மொத்தமாக அழியும், கடல்மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும். பூமியின் பெருமளவு கார்பன் டை ஆக்சைடைக் கிரகித்துக்கொள்ளும் அமேசான், கிரீன்லாந்து போன்ற பகுதிகள் அழியும். அப்படி நடந்தால் மொத்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும். நிலைமை கைமீறிச் செல்வதற்குள் நாம்தான் சுதாரித்துகொள்ள வேண்டும் என்று அந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கை முக்கியம் பிகிலு!
விஜய் வீட்டில் சமீபத்தில் நடந்த ஐ.டி ரெய்டிற்குப் பின்னர், விஜய்யின் சம்பளம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். விஜய் எத்தனை கோடி சம்பளத்தில் கமிட்டானாலும், முதலில் 5 கோடியை அட்வான்ஸாக வாங்கிக்கொள்வாராம்.

அதன்பின் மீதமிருக்கும் கோடிகளை, ஷூட்டிங் நடக்கும் மாதங்களுக்கு ஏற்றவாறு பிரித்துக்கொண்டு, மாதாமாதம் அதை வாங்கிக்கொள்வாராம். அதில் மீதமிருக்கும் பட்சத்தில், டப்பிங்கிற்குச் செல்வதற்கு முன்னர் மொத்தப் பணத்தையும் பெற்றுக்கொள்வாராம். இதுதான் விஜய் பல வருடங்களாகக் கடைப்பிடிக்கும் பழக்கம் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். பிளானிங் முக்கியம்!
ராஜமெளலி இயக்கத்தில் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தற்போது தங்களது அடுத்த படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தனது 30வது படத்தை கமிட் செய்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், மே மாதத்திற்குப் பிறகு இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான `டிரைவிங் லைசென்ஸ்’ படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியிருக்கும் ராம்சரண், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்குப் பிறகு இதில்தான் நடிக்கவிருக்கிறாராம். ரீமேக்குலு!
26/11 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாபை, இரண்டு முறை ‘பாரத் மாதா கீ ஜே’ என்று முழக்கமிட வைத்ததாகத் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ராகேஷ் மரியா. மேலும், மருத்துவமனையில் இருந்து அஜ்மல் கசாபை அழைத்துவந்தபோது, காரில் இருந்து கீழே இறக்கி, இந்திய மண்ணில் தலைபதித்து வணங்கச் செய்ததாகவும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகேஷ் மரியா. “Let me say it now” என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வெய்ட்டிங்
ஜப்பானில் மருத்துவமனை லாக்கர் ரூமில் இருந்த சுமார் 6,000 முகமூடிகள் திருட்டுப்போனது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவாகவே ஜப்பானியர்கள் மிகவும் சுகாதார விரும்பிகள். கொரோனா வைரஸ் தாக்கத்தால், வழக்கத்தைவிட அதிக அளவில் அவர்கள் முகமூடிகளைப் பயன்படுத்தத் தொடங்க, முகமூடித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்திய மதிப்பில் ஒரு முகமூடி சுமார் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 6,000 முகமூடிகள் திருட்டுப்போனது தலைப்புச்செய்தி ஆனதற்கு இதுவே காரணம். முகமூடித்திருடன்
நிறவெறியுடன் தன்னிடம் நடந்துகொண்ட காதலியைக் கடத்தி, நூதனமான தண்டனையை அவருக்கு அளித்துள்ளார் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர். ஆப்பிரிக்க அமெரிக்கரான ராபர்ட் நோயஸ் தன்னிடம் நிறவெறியுடன் நடந்துகொண்ட தனது வெள்ளையினக் காதலியைக் கடத்தி, கட்டிவைத்து ‘ரூட்ஸ்’ என்ற கறுப்பின மக்களின் அடிமை வாழ்க்கை பற்றிய சீரிஸை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்துள்ளார். அலெக்ஸ் ஹேலி எழுதிய புகழ்பெற்ற நாவலின் தொலைக்காட்சி வடிவம் தான் அந்த சீரிஸ். ‘பார்வையை அங்குமிங்கும் மாற்றினால் கொன்றுவிடுவேன்’ என்று அவர் மிரட்டியதால், சிகாகோ காவல்துறை அவர்மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி முதலான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டம் கடமையைச் செய்யும்!
தெலங்கானாவில் புஸ்ஸா கிருஷ்ணா என்பவர் டிரம்ப்பிற்குச் சிலை வைத்து பூஜை செய்து தினம் கடவுளாக வணங்கிவருகிறார். டிரம்ப் அந்த அளவுக்கு அதீத விசிறிகளை இந்தியாவில் பெற்றிருக்கிறார். இந்நிலையில், இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிறார் என்றதும் அவரின் தீவிர விசிறிகள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள். தில்லியில் ஹிந்து சேனா அமைப்பினர் அவருக்கு வரவேற்புப் பாடல் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களே இப்படியிருக்க அரசு சுவர் மட்டும்தான் கட்டுகிறது என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். நாட்ல....
பல பிரச்னைகளைக் கடந்து `மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் 19ம் தேதி ஆரம்பித்துவிட்டது. முதல் வாரம் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. இந்தப் படமும், சிம்பு கேமியோ ரோலில் நடிக்கும் `மகா’ படமும் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், சிம்புவின் அடுத்த படத்திற்கான வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. சிம்புக்காக சேரன் ஒரு கதையைத் தயார் செய்து சொல்லியிருக்கிறார். கதையும் சிம்புக்குப் பிடித்திருப்பதால், தயாரிப்பாளரை உறுதி செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார் சேரன். ரைட்டு!
செலிபிரிட்டி புகைப்படக் கலைஞரான ‘டபூ ரத்னானி’யின் 2020-ம் ஆண்டுக்கான காலண்டர் புகைப்படங்கள்தான் சமீபத்திய பாலிவுட் வைரல். இந்த காலண்டரில் ஷாருக்கான், சன்னி லியோன், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஷர்மா, ஹ்ரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம், க்யாரா அத்வானி, சயிஃப் அலிகான், வித்யா பாலன் வரை பெரும்பான்மையான நட்சத்திரங்கள் ‘ஸ்கின் ஷோ’ போஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படங்களை நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர். அமீர்கானின் சிக்ஸ் பேக் படம், இந்திய கிரிக்கெட் அணியினர் டாப் லெஸ்ஸாக நீச்சல் குளத்தில் குளிக்கும் படங்கள் ‘டபூ ரத்னானி’ எடுத்த புகைப்படம் என கேப்ஷன் வைத்து, டபூவின் போட்டோ ஷூட்டுக்கு உடை அவசியமே இல்லை என மீம்ஸ் போட்டு வைரலாக்கிவருகின்றனர். எல்லாம் மீம்ஸ் மயம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் சாஹித் அஃப்ரிடிக்கு ஏற்கெனவே நான்கு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐந்தாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை தனது இன்ஸ்டாவில் மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார் அஃப்ரிடி. தன் மகள்கள் அக்ஷா, அன்ஷா, அஜ்வா, அஸ்மரா மற்றும் குட்டிப்பாப்பாவோடு அஃப்ரிடி இருக்கும் அந்தப் புகைப்படம், ஸோ க்யூட். ‘இறையின் கருணையாலும் ஆசீர்வாதத்தாலும் ஐந்தாவது பெண் குழந்தை. என் நலவிரும்பிகளுக்கு இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்’ என்று இன்ஸ்டாவில் ஆனந்தச் சிரிப்போடு உருகியிருக்கிறார் அப்பா அஃப்ரிடி. தேவதைகளின் தகப்பன்சாமி!
சமீபத்தில்தான் களமிறங்கினாலும் அமெரிக்க ஸ்ட்ரீமிங் சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது டிஸ்னி+ சேவை. பாதி ஹாலிவுட்டை வாடகைக்கு எடுத்துவைத்திருக்கும் டிஸ்னியின் சேவை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதற்கு ஏராளமான கன்டென்ட் டிஸ்னி+ சேவையில் இருக்கின்றன. இதுபோக மார்வெல் சூப்பர்ஹீரோக்களின் தொடர்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதனால் ஏற்கெனவே உலகம் முழுவதும் 26.5 மில்லியனுக்கும் மேலான சந்தாதாரர்களைப் பெற்றுவிட்டது டிஸ்னி+. இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட முன்னதாக, ஹாட்ஸ்டாரின் உதவியுடன் மார்ச் 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது டிஸ்னி+. இதே தேதியில்தான் ஐபிஎல் தொடங்குகிறது என்பதால் ஹாட்ஸ்டார் பக்கம் அதிக அளவில் வருவார்கள், அதைப் பயன்படுத்தி மைலேஜ் பெற்றுவிடலாம் என்பதுதான் டிஸ்னியின் பிளான்! ஆட்டத்துக்கு ரெடி!
கிரிக்கெட் களத்தைத் தொடர்ந்து, வெப்சீரிஸ் களத்திலும் ஆல்ரவுண்டராகக் களமிறங்கத் தயாராகிவிட்டார், யுவராஜ் சிங்! யுவராஜின் அந்த வெப்சீரிஸில், அவரோடு அவரின் அம்மா ஷப்னம் சிங், மனைவியும் நடிகையுமான ஹசேல் கீச், சகோதரர் சோராவர் என மொத்தக் குடும்பமும் நடிக்கப் போகிறதாம். இந்த வெப்சீரிஸைத் தயாரிக்கவிருப்பது டி-சீரிஸ் தயாரிப்பு நிறுவனம். ``யுவராஜ் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” எனச் சிலாகித்துள்ளார் அந்நிறுவனத்தின் புரொடக்ஷன் பேனர் நிதா ஷர்மா. இனி யுவராஜ் வீட்டில், நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கப்போகுது! கலைக்குடும்பம்!
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் காவல்துறையினர் புகுந்து மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மத்திய மனித வளத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ள ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம், அனுமதியின்றி காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஏற்படுத்திய தாக்குதலில் 2.66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது. இதில் உடைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் மதிப்பு 4.75 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது. வேலியே...