கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் புதிய படமான 'டிக்கிலோனா'வில் முதல் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கவிருக்கிறார், சந்தானம். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், 'பலூன்' பட இயக்குநர் சினீஷின் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை தற்போது அறிவித்துள்ளது, படக்குழு.
'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியில் இடம்பிடித்ததிலிருந்து ஹர்பஜனின் ட்வீட் அனைத்தும் தமிழில் வரத் தொடங்கின. இவரின் ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். அவருக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவை ட்விட்டரில் வெளிப்படுத்தி வந்த ஹர்பஜன் சிங், தற்போது கோலிவிட்டிலும் தடம் பதிக்கவிருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்தவுடன், ``என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ், சந்தானம் உள்ளிட்ட 'டிக்கிலோனா' படக்குழுவிற்கு நன்றி. தலைவர், தல, தளபதி ஆகியோரை உருவாக்கிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே! உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்" என்று ட்வீட் செய்துள்ளார். 2020 ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் கிராமத்து படத்தில் சந்தானத்திற்கு இரண்டு ஹீரோயின்களாம். ஒருவர், 'ஏ1' படத்தில் இவருடன் நடித்த தாரா அலீஸா பெர்ரி. மற்றொருவர் 2017ல் மிஸ் கார்நாடகா பட்டம் வென்ற ஸ்வாதி. இவருக்கு இதுதான் அறிமுகப்படம்.
இதன் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடித்து படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தவிர, 'ஓடி ஓடி உழைக்கணும்', 'சர்வர் சுந்தரம்', 'டகால்டி', உள்ளிட்ட படங்கள் இவரது கைவசம் உள்ளன.