
உண்மையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுகள் விஜய்சேதுபதி.
இறப்பு என்பதே துயரம்தான். இறுதிச்சடங்கு செய்யக்கூட இறந்தவரின் சடலம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவது எவ்வளவு பெரிய துயரம் என்பதை அழுத்தமாகவும் நீளமாகவும் சொல்கிறது க/பெ.ரணசிங்கம்.
வளர்ச்சி அரசியலின் பேரால் உறிஞ்சப்படும் தண்ணீருக்காக உரிமை தாகத்துடன் போராடும் போராளி ரணசிங்கம், குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். திடீரென ஒருநாள் கலவரத்தில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட, தன் கணவரின் சடலத்தைப் பெற துருப்பிடித்த அரசு இயந்திரங்களுடன் ‘ம/பெ.அரியாநாச்சி’ நடத்தும் போராட்டம்தான் கதை.
வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களின் குடும்பம் அனுபவிக்கும் துயரங்களை ராமநாதபுரத்து வெயில் வாசனையுடனும் அரசியல் அடர்த்தியுடனும் முதல் படத்தில் பதிவுசெய்திருக்கும் இயக்குநர் பெ.விருமாண்டிக்கு வாழ்த்துகள்.
உண்மையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுகள் விஜய்சேதுபதி. தனக்கேயுரிய நக்கல், மக்கள் பிரச்னைகளில் அக்கறை ஆகியவற்றை நன்றாகப் பிரதிபலித்திருக்கிறார். ஆனால், ‘நாயகன்’ வி.சே என்பதால், நீளநீளமான ப்ளாஷ்பேக் காட்சிகள்!

அரியநாச்சியாக ஐஷ்வர்யா ராஜேஷ். விஜய்சேதுபதியைக் கலாய்த்துக் காதலிக்கும் இடத்தில் கலகலப்பான அரியநாச்சியாகவும், நீதி கேட்டுப் போராடும் காட்சிகளில் கதையின் கனம் தாங்கும் அரியநாச்சியாகவும் பரிமாணங்கள் காட்டி அசத்துகிறார். வி.சேயின் தங்கையாக கவனிக்க வைக்கிறார் பவானிஸ்ரீ. கலெக்டராக ரங்கராஜ் பாண்டே சரிப்பொருத்தம். ‘என் பவருக்கு இவ்ளோதாங்க முடியும்’ என, கையாலாகாத தனத்தை அவர் பதிவு செய்வது அதிகாரப் படிநிலைகளின் தோலுரிப்பு. காட்சிகளுக்கு உயிரோட்டம் சேர்க்கிறது ஜிப்ரானின் இசை. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுர கிராமத்தைக் கண்முன்னே நிறுத்துகிறது.
என்னதான் 144 தடை என்றாலும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு பத்திரிகை அடிக்காமலா இருப்பார்கள், குறைந்தபட்சம் கல்யாணத்தில் ஒரு புகைப்படம்கூட எடுக்கமாட்டார்களா என்ற கேள்வி முக்கியமான லாஜிக் பிழை. ஆதாரம் இல்லாத போராட்டம், அரசு எந்திரத்துக்கு முன்னான கேள்விகளில் உறுத்தலைக்கூட்டுகிறது. அரியநாச்சியின் போராட்டங்களில் தொடக்கத்தில் எதார்த்தம் இருந்தாலும் பிரதமர், மத்திய அமைச்சர் என்று போகப்போக செயற்கைத்தனம் வந்துவிடுகிறது.

சில குறைகள் இருந்தாலும் இதுவரை தமிழ் சினிமா பேசாத கதைக்களத்தைத் துணிச்சலுடன் பேசியதற்காக ‘க/பெ ரணசிங்க’த்துடன் கைகுலுக்கலாம்!