
நானும் உதய்கிட்ட `நிறைய படங்கள் வாங்கி வெளியிடுறீங்களே, நீங்க அரசியல்லயும் இருக்கிறதனால வெளியே தப்பா புரொஜக்ட் ஆகிடாதா?'ன்னு கேட்டேன்
`வணக்கம் சென்னை', `காளி' ஆகிய படங்களுக்குப் பிறகு, கிருத்திகா உதயநிதி `பேப்பர் ராக்கெட்' என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார். பயணத்தை மையமாக வைத்திருக்கும் இந்த சீரிஸ் ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. சினிமா, குடும்பம் எனப் பல விஷயங்களை நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

``வெப் சீரிஸ் பக்கம் போகலாம்னு எப்போ முடிவெடுத்தீங்க?’’
‘‘ ‘காளி' படத்திற்குப் பிறகு, இன்னொரு ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ஒரு ஓ.டி.டி தளத்திலிருந்து ‘வெப் சீரிஸுக்கான கதைகள் இருந்தா சொல்லுங்க'ன்னு கேட்டாங்க. என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. ஒரு கதை வெச்சிருந்தா அதை யார் கேட்டாலும் சொல்லிடுவேன். அந்தக் கதையை நாம சொல்லும்போது, எதிர்ல இருக்கிறவங்க ரியாக்ஷன் வெச்சே இது வொர்க் அவுட் ஆகுமா ஆகாதான்னு தெரிஞ்சுடும். அந்த மாதிரிதான், `பேப்பர் ராக்கெட்' கதையையும் சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சில காரணங்களால ஆரம்பமாக தாமதமாகிட்டே இருந்தது. அந்தச் சமயத்துல ஜீ5 டீம்ல இருந்து என்னை அணுகினாங்க. ஆனா, இவ்வளவு சீக்கிரமா எல்லா ப்ராசஸும் முடிஞ்சு, டேக் ஆஃப்பாகும்னு நினைக்கலை. இது ஒரு ட்ராவல் ஸ்கிரிப்ட். அதுல சின்ன மெசேஜும் சொல்லிருக்கேன்.


இறப்பைப் பத்தி ஒவ்வொருத்தருடைய பார்வையைத்தான் நான் இதில் காட்டியிருக்கேன். `Celebrating Death'... இறப்பைக் கொண்டாடணும். இந்த ஐடியாவுலதான் இந்த ஸ்கிரிப்ட்டே ஆரம்பமாச்சு. இறப்பை இழப்பு, டிப்ரஷன்னு ஒரு கண்ணோட்டத்துலதான் நாம பார்க்குறோம். நெருக்கமானவங்களையும் இழந்து, தங்களுடைய வாழ்க்கையையும் இழந்து நிப்பாங்க, பல பேர். அவங்களால அதிலிருந்து மீண்டு வெளியே வந்து, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. அதை கோவிட் டைம்ல நிறைய பார்த்திருப்போம், அனுபவித்திருப்போம். அப்படி இறப்பை ஒரு இழப்பா மட்டும் பார்த்து முடங்கிடக்கூடாது, வேறொரு கண்ணோட்டத்துல பார்க்கணும்னு ரொம்ப கேஷுவலா சொல்லிருக்கேன். நிச்சயமா இது ஃபீல் குட் அனுபவமா இருக்கும். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன், கருணாகரன், ரேணுகா மேம், மலையாள நடிகர் நிரமல் பழனின்னு ஆறு பேர் கதையில ட்ராவல் பண்ணுவாங்க. இவர்கள் தவிர, ஜி.எம்.குமார் சார், சின்னி ஜெய்ந்த் சார், பூர்ணிமா பாக்யராஜ் மேம்னு நிறைய பேர் இருக்காங்க.’’


``2013-ல ‘வணக்கம் சென்னை', 2018-ல ‘காளி' இப்போ ‘பேப்பர் ராக்கெட்.' இந்த இடைவெளி ஏன்?
‘‘ ‘வணக்கம் சென்னை' முடிச்சவு டனே நான் முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருந்தேன். ஆனா, சினிமாவுல எல்லாம் கூடி வர கொஞ்சம் நேரமாகும். சில நேரங்கள்ல நாம எதிர்பார்க்காத மாதிரி சீக்கிரமா நடக்கும். ஒரு ஸ்கிரிப்டை எழுதி, முழுமையா முடிச்சு அதை ஒரு தயாரிப்பாளர், ஹீரோன்னு சொல்லி எல்லாம் ஓகே ஆகுறது சாதாரண விஷயம் இல்லை. நான் உதயநிதி மனைவிங்கிறதனால எனக்குப் படங்கள் அமையலை; என்கிட்ட இருக்கிற கதைதான் அதைத் தீர்மானிக்கும்.’’
``உங்களுக்குத் தோணுற கதைகளை உங்க கணவர் உதயநிதிகிட்ட சொல்வீங்களா?’’
‘‘நிச்சயமா ஷேர் பண்ணுவேன். எப்படி எடுக்கப் போறேன், எந்த ஊருக்குப் போகப்போறேன்னு எல்லாமே அவர்கிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி அவர் கேட்கும் கதைகள் பத்தி நிறைய விஷயங்கள் என்கிட்ட சொல்வார். நானும் ‘இது வொர்க் அவுட்டாகும், ஆகாது’ன்னு சில இன்புட்ஸ் கொடுப்பேன். சில நேரங்கள்ல ‘தூக்கம் வருது. ஏதாவது கதை இருந்தா சொல்லு’ன்னு சொல்லி என்னை அவர் வெறுப்பேத்துறதும் நடக்கும்.’’


``இன்பநிதி, தன்மயா ரெண்டு பேருக்கும் ஒரு அம்மாவா கிருத்திகா எப்படி?’’
‘‘இப்போதான் தமிழ்ப் படங்கள் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கார் இன்பன். அவருடைய ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து தியேட்டருக்குப் போய் காலையில நாலு மணி ஷோவெல்லாம் பார்க்கிறார். +2 முடிச்சிட்டார். அடுத்து காலேஜ் போறதுக்கு தயாராகிட்டு இருக்கார். திடீர்னு ஒரு நாள் ‘நானும் ஆக்டராகவா?'ன்னு கேட்டார். ‘சும்மா ஆக்டராக முடியாது. அதுக்கு நிறைய ஹோம் வொர்க் பண்ணணும். நீ முதல்ல படிச்சு முடி'ன்னு சொன்னோம். ஃபுட்பால் விளையாட்டுல ஆர்வம் ரொம்ப அதிகம். இப்போ கிளப் டீம்ல விளையாடிட்டு இருக்கார். தன்மயா ஆறாவது படிக்கி றாங்க. சில நேரங்கள்லதான் ஸ்ட்ரிக்டான அம்மா. மத்த நேரங்கள்ல ஃப்ரெண்ட்தான்.’’
``உதயநிதி - அன்பில் மகேஷ் சேர்ந்திருக்கும் பல போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவுல வைரலாகுது. அவங்களுடைய நட்பு பத்தி?’’
‘‘உதய்யும் மகேஷும் சின்ன வயசில இருந்தே ஃப்ரெண்ட்ஸ். எனக்கும் மகேஷை 17 வயசுல இருந்தே தெரியும். நானும் உதய்யும் லவ் பண்ணிட்டிருந்த சமயத்துல, எங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்திடுச்சுனா, மகேஷ்தான் சமாதானப்படுத்த வருவார். நாங்க மூணு பேரும் நல்ல நண்பர்களாதான் வளர்ந்தோம். அப்போ அவங்க இருந்ததுக்கும் இப்போ இருக்கிறதுக்கும் நம்பவே முடியலை. மகேஷ் இப்போ அமைச்சரா, உதய் எம்.எல்.ஏவான்னு இருக்கும். அவங்க ரெண்டு பேரும் சீரியஸா இருந்து நான் பார்த்ததே இல்லை. செம ஜாலியா இருப்பாங்க. ஆனா, இப்போ லைஃப்ல ரொம்ப சீரியஸாகிட்டாங்க. கொடுத்த வேலையை சூப்பரா செய்றாங்கன்னு நினைக்கிறேன்.’’


``நீங்க வொர்க் பண்ணணும்னு நினைக்கிற ஹீரோயின்கள்?’’
``த்ரிஷா, நயன்தாரா, நஸ்ரியா இவங்கக்கூட வொர்க் பண்ணணும். அதுல அவங்களுடைய கதாபாத்திரங்களை ரொம்ப பவர்ஃபுல்லா காட்டணும்.’’
``இப்போ எந்தப் பெரிய படம் வந்தாலும் அதை ரெட் ஜெயின்ட் மூவிஸ்தான் வெளியிடுறாங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க?’’
``நானும் உதய்கிட்ட `நிறைய படங்கள் வாங்கி வெளியிடுறீங்களே, நீங்க அரசியல்லயும் இருக்கிறதனால வெளியே தப்பா புரொஜக்ட் ஆகிடாதா?'ன்னு கேட்டேன். `நாங்க யாரையும் அணுகிக் கேட்கலை. அவங்கதான் நம்மை அணுகி வெளியிடச் சொல்லிக் கேட்குறாங்க. காரணம், நாங்க ரொம்ப நியாயமா பிஸினஸ் பண்றது அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. அப்படிதான் ரெட் ஜெயின்ட்கிட்ட வர்றாங்களே தவிர, நாங்க யாரையும் கேட்டோ மிரட்டியோ படங்கள் வாங்கிறதில்லை'ன்னு சொன்னார். நியாயமா இருந்தது. ஆனா, வெளியில இருந்து பார்க்கும்போது அரசியல், நடிப்பு, விநியோகம்னு எல்லாத்துலயும் இருக்கிறதனால நிறைய விமர்சனம் வரும். அதைத் தவிர்க்க முடியாதுதான். நாம நேர்மையா இருக்கணும். அது நம்மளைச் சார்ந்தவங்களுக்குத் தெரிஞ்சாப் போதும். நம்ம மேல வரக்கூடிய தேவையில்லாத விமர்சனத்துக்காக நம்ம பிசினஸ், வாழுற வாழ்க்கையை மாத்த ஆரம்பிச்சா எல்லாத்தையும் மாத்திக்கிட்டுதான் இருக்கணும்.’’
``விக்ரமை வெச்சு ஒரு படம் பண்ண ஆசைன்னு பல இடங்கள்ல சொல்லியிருக்கீங்க. அதை எப்போ எதிர்பார்க்கலாம்?’’
“இப்பவும் அதேதான் சொல்றேன். விக்ரம் சாருக்குப் படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஒருநாள் அது நடக்கும்னு நம்புறேன்”
அழகாய்ப் புன்னகைக்கிறார் கிருத்திகா.