
“வாரிசு படத்தின் பெரிய வெற்றியே எங்களை மீண்டும் இணையவைக்கும்” என பதிலடி கொடுக்கிறாராம் ராஷ்மிகா.
தமிழ் சினிமா உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது ‘லவ் டுடே’ படம். தமிழ்நாடு தியேட்டரிக்கல் ஷேர் மட்டும் 30 கோடியை நெருங்கும் நிலையில், பெரிய ஹீரோக்கள் பலரும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.ஆனால், பிரதீப்பின் டார்கெட்டோ விஜய். ஏற்கெனவே அவருக்குக் கதை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கும் பிரதீப், அவரை இயக்க இன்னும் ஒன்றரை வருடம் ஆகும். இந்த இடைவெளியில் பிரதீப் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க நினைக்கிறார் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ். முன்னணி இயக்குநர்கள் நால்வரின் பெயரை `டிக்’ செய்து கொடுத்திருக்கும் பிரதீப், தனக்கான சம்பளமாக ஐந்து விரல்களைக் காட்டுகிறாராம்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘வினோதய சித்தம்’ படம் தமிழில் நல்ல கவனம் பெற்ற நிலையில், அதைத் தெலுங்கில் இயக்கத் திட்டமிட்டார்கள். திரு விக்ரம் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்த பாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா செய்த பாத்திரத்தில் மோகன் லாலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். மிகப்பெரிய அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கூட்டணி, ஏனோ பூஜையோடு அமைதியாகிவிட்டது. அரசியல் விஷயங்களில் தீவிரமாகிவிட்ட பவன் கல்யாணை அணுகவே முடியவில்லையாம். ஆபீஸ் போட்ட இத்தனை நாள்களில் முடிந்திருக்கவேண்டிய படம், இன்னமும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. ‘கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என பவன் கல்யாண் சொன்ன வார்த்தைகள்தான் சமுத்திரக்கனிக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

‘கடைசி விவசாயி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையிலும், இயக்குநர் மணிகண்டனுக்குப் பொருளாதாரரீதியான பல சிரமங்களை அந்தப் படம் கொடுத்தது என்பதே உண்மை. இந்த நிலையில், எவரும் எதிர்பாராத திருப்பமாக பக்கா கமர்ஷியல் கதை ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார் மணிகண்டன். மம்முட்டி, விஜய் சேதுபதி இருவரின் நடிப்பில் மதுரையைக் கதைக் களமாகக்கொண்ட தாதாயிசக் கதை. அறிவிப்புகள் ஏதுமின்றி, சைலன்ட்டாகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள். மணிகண்டன் சொன்ன பட்ஜெட்டை அள்ளிக்கொடுத்து படத்தை வளைத்துப்போட்டிருக்கிறது ஹாட் ஸ்டார் நிறுவனம்!

‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, அடுத்த படத்திலும் அவரோடு இணைய ஆசைப்படுகிறாராம். ‘இது ரொம்பவே ஓவர்’ எனப் பலரும் சொல்ல, “வாரிசு படத்தின் பெரிய வெற்றியே எங்களை மீண்டும் இணையவைக்கும்” என பதிலடி கொடுக்கிறாராம் ராஷ்மிகா. ஷூட்டிங், டப்பிங் எனப் படப் பணிகள் முடிந்தும் விஜய்யுடன் போன் கான்டாக்டில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடனும் தொடர்ந்து பேசிவருகிறாராம். அம்மணி ஆசை பலித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
உஷ்...
ஸ்டைலிஷான இயக்குநரை வைத்துப் படம் தயாரிக்கப் பலரும் தயங்குகிறார்கள். காரணம், அவரை வைத்துப் படம் தயாரித்த முன்னணி நிறுவனத்தினர், அவர் இழுத்துவிடும் செலவுகள் குறித்து பிரஸ்மீட் வைக்காத குறையாகப் பரப்பிவருகிறார்களாம். இயக்குநர் ஏதாவது ஓர் அலுவலகத்தில் அடியெடுத்து வைத்தால் ‘எச்சரிக்கை’ என அலர்ட் மெசேஜ் அனுப்புகிறார்களாம்!