
சமந்தாவின் உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், வெளிநாடு போய் முழுவதுமாக குணமாகிவர நினைக்கிறாராம் அவர்.
அட்லி - பிரியா தம்பதியின் வளைகாப்பு விழாவுக்குப் போன விஜய், அடுத்த படத்துக்கான வாய்ப்பையே பரிசாக வழங்கியிருக்கிறாராம். விஜய்க்குப் பலரும் தூண்டில் போட்டிருந்த நிலையில், அட்லி எப்படி வென்றார் என்பதுதான் செம ட்விஸ்ட். ‘விஜய் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து 200 கோடி சம்பளம்... என்ன சொல்கிறீர்கள்?’ என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் டீல் பேசினாராம் அட்லி. உள்ளுக்குள் திகைத்துப்போனாலும், ‘விஜய்யை வளைத்தால் போதும்’ என ஓகே சொல்லிவிட்டதாம் சன் பிக்சர்ஸ். 200 கோடியில் தனக்கான சம்பளத்தை விஜய்யிடமிருந்து வாங்கிக்கொள்வாராம் அட்லி. ‘நீங்க எவ்வளவு கொடுத்தாலும் ஓகேண்ணே…’ என அட்லி பேசிய டீல் விஜய்க்கும் பிடித்துப்போக, அடுத்த படத்துக்கான வாய்ப்பை அப்படியே தூக்கிக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் ஆர்ட் டைரக்ஷனில் அசத்தியிருக்கிறார்களாம். கதைக்களம் சென்னை என்பதால், அண்ணாசாலையைப் போன்ற ஒரு ஏரியாவை செட் போட்டு ‘காந்திசாலை’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம். இதற்கான பட்ஜெட் மட்டும் 10 கோடியாம். காந்திசாலையும், அதில் ‘ஹெரிடேஜ் பேங்க்’ செட் ஒன்றும் போட்டு அச்சு அசல் சென்னையைக் கண்முன்னால் நிறுத்தியிருக்கிறாராம் கலை இயக்குநர் மிலன். டீடெய்லிங் தொடங்கி கலர்ஸ் வரையிலான பல விஷயங்களில் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்களாம். ‘சென்னையில் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை’ என்பதால்தான், இவ்வளவு செலவாம்.

இசையமைப்பாளர் இமான் அதிரடியாக ஆடிப்பாடிய ‘கிட்டக்க வாடி’ பாடல் வைரல் ஹிட்டாகியிருக்கிறது. இவ்வளவு பெரிய வரவேற்பை அவரே எதிர்பார்க்கவில்லையாம். கோடிக்கணக்கான பார்வைகளில் குளிர்ந்துபோன இமான், தொடர்ந்து இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்கிற திட்டத்தில் இல்லையாம். ‘சும்மா ஒரு ஜாலிக்குப் பண்ணினேன்… அவ்வளவுதான்’ என்கிறாராம் நண்பர்களிடத்தில். ஒருசில படங்களின் தோல்வியைவைத்து, ‘இதோடு இமான் அவ்வளவுதான்’ என எகத்தாளம் செய்தவர்களுக்கு, அவர் கொடுத்திருக்கும் அட்டகாச பதிலடி இது என்கிறார்கள் இமான் ரசிகர்கள்.

சமந்தாவின் உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், வெளிநாடு போய் முழுவதுமாக குணமாகிவர நினைக்கிறாராம் அவர். விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ‘குஷி’ படத்தில் மட்டும் சில காட்சிகள் பேலன்ஸ் இருக்கும் நிலையில், ஒரு வார கால்ஷீட் ஒதுக்கி அதை முடித்துக் கொடுத்துவிட நினைக்கிறார் சமந்தா. புதிதாக கமிட்டான ஐந்து படங்களைத் தள்ளிவைக்கச் சொல்லிவிட்டாராம். அவசரம் எனில் வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக்கொடுப்பதாகவும், வேறு ஹீரோயின்களை ஃபிக்ஸ் பண்ணிக்கொள்ளும்படியும் சொல்கிறாராம் சமந்தா. விஜய்யின் மேனேஜரான ஜெகதீஸ்தான் சமந்தாவுக்கும் பணியாற்றுகிறார். ஒரு படத்துக்குச் சம்பளமாக ஐந்து கோடி வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், சமந்தாவுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லிச் சொல்லி வருந்துகிறார் ஜெகதீஸ்!