
மன்றங்கள் மூலமாக உதவிசெய்யும் நடிகர்களுக்கு மத்தியில், மன்றத்தினருக்கே உதவிசெய்து அசத்தியிருக்கிறார் சூர்யா.

சமூக வலைதளங்கள் மூலமாக, உதவிக்கு அல்லாடும் ஆட்கள் குறித்த விவரங்களைத் தன் கவனத்துக்குக் கொண்டுவரத் தனிக்குழுவையே வைத்திருக்கிறார் நடிகர் உதயநிதி. அமைச்சர்கள், அதிகாரிகள் மூலமாகக் குக்கிராமங்கள் வரை நீளுகிற இந்த உதவிகளுக்குப் பின்னணியில், உதயநிதியின் செயல்பாடு இருப்பது பலருக்கும் தெரியாதாம். ‘பெயர் தேவையில்லை… நலம் பெற்றால் போதும்’ எனக் கறாராகச் சொல்லியிருக்கிறாராம் உதயநிதி. #மனிதன்

மன்றங்கள் மூலமாக உதவிசெய்யும் நடிகர்களுக்கு மத்தியில், மன்றத்தினருக்கே உதவிசெய்து அசத்தியிருக்கிறார் சூர்யா. கொரோனா நெருக்கடியில் அவதிப்படும் ரசிகர்களை, மன்றத் தலைவர் பரமு மூலமாக லிஸ்ட் எடுக்கச் சொல்லி, 250 பேரின் வங்கிக் கணக்கில் தலா 5,000 ரூபாய் செலுத்தி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூர்யா. கடந்த கொரோனா நேரத்திலும் ரசிகர்களுக்கு சைலன்ட்டாக இது போன்ற உதவியை சூர்யா செய்திருக்கிறார். ஆனால், இந்தமுறை அவர் ரகசியம் காக்கச் சொல்லியும், நன்றி சொல்லும் வகையில் உதவியை அம்பலப்படுத்திவிட்டார்கள் ரசிகர்கள். #காப்பான்

கடந்த வருட கொரோனா நெருக்கடியில், விளைந்த வாழையை விற்க முடியாமல் போராடிய மதுரை விவசாயி கோபால கிருஷ்ணனின் மொத்த விளைச்சலுக்கும் பணம் கொடுத்து உதவினார் நடிகர் சசிகுமார். இந்தமுறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலருக்குச் சத்தமின்றி உதவிவருகிறார். விவசாயத்தில் ஈடுபாடுள்ள உதவி இயக்குநர்கள் மூலமாக, சிரமப்படும் ஆட்களைத் தேர்வுசெய்து தன்னால் முடிந்த பண உதவியை வழங்கிவருகிறார். #கொடிவீரன்

கொரோனா நெருக்கடியில் போராடும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவியைச் செய்துகொடுக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. பெட் தொடங்கி தடுப்பூசி வரை தன்னால் முடிந்த உதவிகளைப் பலரிடமும் பேசிப் போராடிப் பெற்றுக்கொடுக்கிறார். உதவி இயக்குநர்கள் தொடங்கி கிராமத்தினர் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலனைச் சிகிச்சையின்போதே தைரியமாகப் போய்ப் பார்த்த லிங்குசாமிக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாழ்த்து குவிகிறது. #அஞ்சான்

கொரோனா நெருக்கடி நேரத்தில் கைகொடுக்க, ஆக்சிஜன் வங்கியை உருவாக்கினார் சிரஞ்சீவி. அடுத்தபடியாக கொரோனா பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றை அவசரமாக உருவாக்கி, தெலுங்குப் பட உலகிலுள்ள 24 சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரமாக்கியிருக்கிறார். கூட்டமாகக் கூடி அதன் மூலமாகவும் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காக, வாரத்தின் ஏழு நாள்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார் சிரஞ்சீவி. #அன்னைய்யா
உஷ்
சமீபத்தில் கொரோனாவால் இறந்தார் மூன்றெழுத்து தயாரிப்பாளர் ஒருவர். அரசியலும் சினிமாவுமாக இருக்கும் இரு பெயர் தயாரிப்பாளர், ஒரு கோடிக்கும் மேலான தொகையை இறந்தவருக்குக் கொடுக்க வேண்டுமாம். ஆனால், இந்த நிமிடம் வரை ‘ஆம்’, ‘இல்லை’ என இறந்தவரின் குடும்பத்தாரிடம் அவர் எதுவும் சொல்லாமல் அமைதிகாக்கிறாராம். #நியாயமா?