
சக்கை போடு போட்ட ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில், எடிட்டர் ரூபன் வெட்டி வீசிய முக்கால் மணி நேரக் காட்சிகளை ‘புஷ்பா-2’-வில் பக்காவாகச் சேர்த்துவிட்டார்களாம்.
சக்கை போடு போட்ட ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில், எடிட்டர் ரூபன் வெட்டி வீசிய முக்கால் மணி நேரக் காட்சிகளை ‘புஷ்பா-2’-வில் பக்காவாகச் சேர்த்துவிட்டார்களாம். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நிகராக, பகத் பாசில் காட்சிகளுக்கு இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பாங்காக்கில் மீதக் காட்சிகளை ஷூட் பண்ணிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, படத்தின் பிசினஸைப் பெரிய அளவில் பேசி முடித்துவிட்டார்களாம்.

‘அயலான்’ படத்தில் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் இயக்குநர் ரவிக்குமார், அடுத்த கதையை ரெடி செய்து கார்த்தி, விஜய் சேதுபதி இருவரிடமும் சொல்லியிருக்கிறார். விஜய் சேதுபதி `நோ’ சொல்லிவிட, கார்த்தி கதை குறித்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காக்கிறாராம். அதனால், விஷ்ணு விஷாலை வைத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம் ரவிக்குமார். ‘இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தேதி இல்லை’ என விஷ்ணு விஷாலிடமிருந்து பதில் வந்ததாம். சில வருடங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் அணுகியபோது பிடிகொடுக்காமல் நழுவினாராம் ரவிக்குமார். அதற்கான பதிலடியாம் இது.

நானியுடன் ‘தசரா’, உதயநிதியுடன் ‘மாமன்னன்’, பெயரிடப்படாத மூன்று படங்கள் என கீர்த்தி சுரேஷ் இப்போதும் பிஸி பேபிதான். சமீபத்தில் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் மும்பையில் நடத்திய பார்ட்டியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், வெப் சீரீஸிலும் வேகம் காட்டத் தயாராகிவிட்டாராம். ‘இரண்டு படங்களுக்கான சம்பளம்’ என அம்மணி போட்ட கண்டிஷனுக்கும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாம். கதை வேட்டை தொடங்கியிருக்கிறது.
‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார் சூர்யா. அதற்காகவே மாடு ஒன்றை வாங்கி வளர்த்து முறையான பயிற்சிகளையும் மேற்கொண்டார். சூர்யா அளவுக்கு வெற்றிமாறன் வேகம் காட்டவில்லையாம். இதனால், சுதா கொங்கரா இயக்கும் படத்தை அடுத்ததாகத் தொடங்கப்போகிறாராம் சூர்யா. ‘வாடிவாசல்’ தயாரிப்பாளரான கலைப்புலி தாணுதான் இதில் படாதபாடு படுகிறாராம்.
உஷ்...
மனம் கவர்ந்தவர்களுக்கு, தங்கநகை பரிசளித்துப் பரவசப்படுத்துவதில் பொல்லாத நடிகரை அடித்துக்கொள்ள முடியாதாம். இதற்காகவே சென்னையிலுள்ள ஒரு நகைக்கடையுடன் டீல் பேசி வைத்திருக்கிறாராம் அவர். போன் பண்ணிய சில நிமிடங்களில், விதவிதமான டிசைன்களில் நகைகளைக் கொண்டுவந்து அவர்கள் காட்ட, சொக்கிப்போகிறார்களாம் பொல்லாத நடிகரின் மனம் கவர்ந்தவர்கள்!