
பவன் கல்யாண் நடிக்கும் படத்தை, தெலுங்கில் இயக்கத் தொடங்கியிருக்கும் சமுத்திரக்கனிக்கு ஒரே பாராட்டு மழையாம்.
ஆர்யாவை வைத்து ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை இயக்கிவருகிறார் முத்தையா. எப்போதுமே ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்னரே அடுத்த படத்துக்கான கதையைச் சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிடுவது அவரின் வழக்கம். அந்த வகையில் ஆர்யாவிடமே அடுத்த கதையைச் சொல்லியிருக்கிறார் முத்தையா. ஆர்யா ‘பார்க்கலாம்’ எனச் சொல்லி போக்குக்காட்ட, தெலுங்குப் பக்கம் போய் நானிக்குக் கதை சொல்லத் தயாரானார். ஹைதராபாத்தில் ஒரு வாரம் தங்கியும் நானியிடமிருந்து அழைப்பு வராததால், விஷால், லாரன்ஸ் பக்கம் ஜாகையைத் திருப்பியிருக்கிறாராம் முத்தையா.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படம், வசூலில் பெரிய வெற்றிபெற்றதால், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை அழைத்துக் கதை கேட்டார் ரஜினி. தேசிங்கு பெரியசாமியைக் காக்க வைத்ததுபோல் சிபியையும் இழுத்தடித்த ரஜினி தரப்பு, ஒருகட்டத்தில் ‘கதை சரியில்லை’ எனக் கழற்றிவிட்டது. தேசிங்கு பெரியசாமி, சிம்புவை கமிட் பண்ணி கமல் தயாரிப்பில் களமிறங்க, அதைப்போலவே செம பதிலடி கொடுக்கத் திட்டமிடுகிறாராம் சிபி. டார்கெட் சிவகார்த்திகேயன்.
தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் 75-வது படத்தை சைலேஷ் கொலனு இயக்குகிறார். இதில் கெஸ்ட் ரோலில் நடிக்க நம்மூர் லட்சுமி ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். சம்பள விஷயத்தில் அம்மணி கறார் காட்ட, அவரைத் தவிர்த்துவிட்டு ஆண்ட்ரியாவை கமிட் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா எதிர்பார்த்ததை விட அதிக தொகை பேசி, லட்சுமி ராயின் வயிற்றெரிச்சலை எகிற வைத்திருக்கிறார்களாம்.
பவன் கல்யாண் நடிக்கும் படத்தை, தெலுங்கில் இயக்கத் தொடங்கியிருக்கும் சமுத்திரக்கனிக்கு ஒரே பாராட்டு மழையாம். காலை 7:30 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என சமுத்திரக்கனி காட்டும் வேகத்தை இதுவரை தெலுங்குத் திரையுலகம் பார்த்தது கிடையாதாம். பவன் கல்யாணுக்கு 45 நாள்கள் பேசப்பட்டிருந்த நிலையில், 30 நாள்கள் போதும் எனச் சொல்லிவிட்டாராம் சமுத்திரக்கனி. தமிழில் கவனம் பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் கனி.

உஷ்...
‘குஷியான’ இயக்குநரும், நடிகருமானவரைப் படம் இயக்கச் சொல்லிப் பலரும் வற்புறுத்துகிறார்களாம். மெர்சலான நடிகரும் இந்தப் பட்டியலில் அடக்கம். ஆனாலும், ‘இனி நடிப்பு மட்டுமே’ என்பதில் உறுதியாக இருக்கிறாராம் குஷியார். நினைத்துப் பார்க்க முடியாத பெரிய தொகையைப் பேசியும் ஆள் அசைந்து கொடுக்கவில்லையாம்!