முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும், திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் `ஆன்டிலியா' பங்களாவில், ஜனவரி 19 வியாழக்கிழமை மாலை நடந்தது. தலைமுறை தலைமுறையாக குஜராத்திய இந்து குடும்பங்களில் பின்பற்றப்படும் `கோல் தானா' மற்றும் `சுனாரி விதி' போன்ற மரபுகளின் படி நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது.
கோல் தானா என்பதற்கு வெல்லம் மற்றும் கொத்தமல்லி விதைகள் என்று பொருள். திருமணத்திற்கு முன்பு நடைபெறும் இந்த நிகழ்வில், மணமகன் வீட்டார் தரப்பில் இருந்து வெல்லம் கொத்தமல்லி போன்றவை வழங்கப்படும். மணமகள் வீட்டார் நிகழ்வு நடக்கும் இடத்திற்குப் பரிசுப் பொருட்கள் இனிப்புடன் செல்ல, மணமகனின் வீட்டார் அவர்களை வரவேற்பர். இரு குடும்பங்களும் ஒன்றாகச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து, பரிசுகளைப் பரிமாறிக்கொள்வர். பின்னர் தம்பதியினர் மோதிரங்களை மாற்றிக் கொண்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள்.
அதேபோல ஆனந்த் அம்பானியின் தங்கை இஷா அம்பானி சில குடும்ப நபர்களை அழைத்துக் கொண்டு, விரன் மெர்ச்சண்ட்டின் வீட்டிற்குச் சென்று ராதிகாவையும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வருந்தார். திருமண ஜோடிகள் முதலில் கிருஷ்ணரை வணங்கிவிட்டு, பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர். விநாயகர் பூஜைக்கு பின், திருமண அழைப்பிதழ் வாசிக்கப்பட்டது.

அதன் பின் பாரம்பர்ய முறைப்படி இரு குடும்பத்தாரும் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர். வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அம்பானி குடும்ப உறுப்பினர்களின் நடன நிகழ்ச்சி நீதா அம்பானியின் தலைமையில் நடைபெற்றது.
கோலாகலமாக முகேஷ் அம்பானி மகனின் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவேறியது..