
கிராமத்துப் பொங்கல் அனுபவங்கள் பகிரும் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
சூரியனுக்கு நன்றி சொல்வது, விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்வது, ஜல்லிக்கட்டு, உறவுகளைக் காண்பது என கிராமங் களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை ஜீவன் நிறைந்தது. பாடகர்கள் செந்தில் கணேஷ், ‘சாமீ’ பாடல் புகழ் ராஜலட்சுமி தம்பதி யிடம் அவர்களுடைய பொங்கல் பண்டிகை அனுபவங்களைக் கேட்டோம்.
‘`புதுக்கோட்டை மாவட் டம், கரம்பக்குடி தாலுகாவுல இருக்கிற களபம்தான் எங்க ஊர். காட்டு வேலை, தோட்டத்து வேலைன்னு எந்நேரமும் பிஸியா இருக் கிற அம்மா, கூடை நிறைய களிமண் எடுத்துட்டு வந்தாங்கன்னா, பொங்கல் வரப்போகுதுன்னு அர்த்தம். நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ, எங்க வீடு அங்கங்கே சுண்ணாம்பு, மண்ணெல் லாம் உதிர்ந்துபோய் கிடக்கும்.
அம்மா, பொங்கலுக்கு முன்னாடி களிமண்ணைக் குழைச்சு சுவரு முழுக்கத் தீட்டு வாங்க. சேதமான திண்ணையை மொத்தமா உடைச்சு எடுத்துட்டு களிமண்ணுலேயே புதுசா திண்ணை கட்டி, ஓரங்கள்ல காவி அடிச்சு, வாசல்ல புது அடுப்பு கட்டுனாங்கன்னா வீட்டுக்கு புது களை வந்துடும்.

போகி அன்னிக்கு மொத்த வீட்டையும் சுத்தம் பண்றது அப்பாவோட வேலை. வீட்ல இருக்கிற புகைப்படங்களையெல்லாம் சாம்பல் தூவிக் கழுவி வைக்க வேண்டியது சின்னப் பசங்க வேலை.
அடுத்த நாள் வருசப்பொங்கல். காலையில குளிச்சு புதுசு கட்டிக்கிட்டதும், எங்க அப்பாயி கிட்ட விபூதி வெச்சுப்போம். அப்புறம் அத்தை, மாமாகிட்ட ஆசீர்வாதம் வாங்குவோம். அப்புறம் ஊர்ல இருக்கிற எல்லோரும், குடும்பம் குடும்பமா கிளம்பி ஊர் பிள்ளையார் கோயிலுக்குப் போய் வெண் பொங்கல் வைப்போம். மறுநாள் மாட்டுப் பொங்கலன் னிக்குத்தான் சர்க்கரைப் பொங்கல் வைப்பாங்க. வெளியூர்ல செட்டிலானவங்களும் மாட்டுப் பொங்கலன்னிக்குத்தான் ஊருக்கு வருவாங்க. மதியத்துக்கு மேல ஊரு களைகட்ட ஆரம்பிக்கும். புது அடுப்பு வாங்க முடிஞ்சவங்க அதுல பொங்கல் வைப்பாங்க. முடியாதவங்க, மண்ணைத்தோண்டி அடுப்பு வெட்டி பொங்கல் வைப்போம்.
இது ஒருபக்கம் நடந்துக்கிட்டிருக்கையில் இன்னொரு பக்கம் ஆண்களும் பெண்களும் தனித்தனியா கும்மிகொட்டிப் பாடுவாங்க. எல்லார் வீட்டு பொங்கல் பானையில இருந்தும் ஒரு கரண்டி பொங்கல் எடுத்து சாமிக்குப் படைச்ச பிறகு, மாடுகளுக்கும் படைப்போம். அதுக்குப் பிறகு விபூதி கொடுக்கிற ஊர் மரியாதை நடக்கும். அதை முறைப்பொண்ணுங்க மேல தூவி விளையாடுவாங்க. அன்னிக்கு ராத்திரி எங்க ஊர்லயோ, பக்கத்து ஊர்லயோ கரகாட்டம், ஒயிலாட்டாம்னு ஏதாவது நடக்கும். விடிய விடிய அதைப் பார்த்துட்டு அங்கேயே தூங்கிடுவோம். எங்கப்பாதான் தூக்கிட்டு வந்து வீட்ல படுக்க வைப்பாரு. அதுக்கும் அடுத்த நாளு மஞ்சு விரட்டு நடக்கும். இதோட எங்க ஊர்ப்பொங்கல் கொண்டாட் டம் முடிஞ்சிடும்’’ என்ற செந்தில் கணேஷைத் தொடர்ந்தார் ராஜலட்சுமி.

``நான் திண்டுக்கல்ல டவுன்ல பிறந்து வளர்ந்தவ. கல்யாணத்துக்குப் பிறகுதான் கிராமத்துப் பொங்கல் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது. கிராமத்துப் பொங்கல்னாலே பொங்கச் சீரு ரொம்ப ஃபேமஸ். வாக்கப் பட்டப் பொண்ணுங்க வீட்ல இருந்து பொங் கலுக்கு மூணு நாள் முன்னாடி, கரும்புக்கட்டு, பச்சரிசி, வெல்லம், பொங்கல் வைக்க புதுப்பானை, தேங்காய், வாழைப்பழம்னு பண்டிகை கொண்டாடறதுக்கான அத்தனை பொருள்களையும் வெச்சுக் கொடுப்பாங்க.
குடும்பம் குடும்பமா ஒண்ணா சேர்ந்து பொங்கல் கொண்டாடறதைப் பார்க்கிற சந்தோஷம் கிடைக்கணும்னா கிராமங் களுக்குத்தாங்க போகணும்’’ என்கிறார் மகிழ்ச்சியாக.