`அலைகள் ஓய்வதில்லை' படத்துக்காக தான் மெட்டமைத்த 'புத்தம்புதுக் காலை' பாடலை இளையராஜாவே மீண்டும் 'மேகா' படத்துக்காக ரீமிக்ஸ் செய்தபோது அந்தப் பாடலில் கிறங்கியவர்கள் ஒரு புறமிருக்க, அதில் தோன்றிய சிருஷ்டி டாங்கேவின் கன்னக் குழிகளில் சிக்கியவர்களும் ஏராளம். கன்னக் குழிகள், குழந்தை சிரிப்பு, காதல், சோகம், கோபம் எல்லாவற்றையும் எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள் என சிருஷ்டி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார். ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது.

இப்போது மீண்டும் 'ராஜாவுக்குச் செக்', 'கட்டில்' எனத் தன் இரண்டாம் இன்னிங்ஸுக்குத் தயாராகிவிட்டார் சிருஷ்டி. அவரைச் சந்தித்தேன்.
நீங்க அறிமுகமான சமயத்துல உங்களுக்கு இருந்த வரவேற்பு அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்ச மாதிரி இருக்கே?
நான் எந்தப் படத்துல நடிச்சாலும் என்னோட நூறு சதவிகித நடிப்பைக் கொடுத்திடுவேன். ஆனா, ஏனோ பெருசா படங்கள் வொர்க் அவுட் ஆகல. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். இருந்தாலும் அடுத்தடுத்து படங்கள் பண்ணிக்கிட்டேதான் இருக்கேன். அதுவும் இல்லாம இடையில மூணு வருஷம் பிரேக்ல இருந்தேன். அதனால மக்கள் என் முகத்தையும் மறந்துட்டாங்க. இனி வரப்போற படங்கள் என்னோட நடிப்புக்கான படங்களாத்தான் இருக்கும். அதுல எந்த சந்தேகமும் இல்ல.

'மேகா' படத்துல உங்களோட ரோல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். அதுக்குப் பிறகு நீங்க ஏன் அப்படி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கல?
நானும் அப்படி ஒரு கதாபாத்திரத்துக்குத்தான் காத்துட்டு இருக்கேன். ஆனா கிடைக்கலையே. வர எல்லா கேரக்டர்களுமே அந்த திருப்தியைத் தர அளவுக்கு இல்லையே.
சில படங்கள் வேண்டாம்னு தவிர்த்திருக்கீங்களா?
நான் அப்படி வர வாய்ப்பை தவிர்க்கிற ஆள் இல்ல. நான் ஒரு ஆப்பர்சூனிடிஸ்ட். இதுவரை வந்த எல்லா வாய்ப்புகளிலுமே என்னால என்ன பண்ணமுடியுமோ, அதைப் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குப் படங்கள்தான் சரியா அமையல.

நீங்க நடிச்ச ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துட்ட, ஏன் நடிச்சோம்னு வருத்தப்பட்டிருக்கீங்களா?
அது நிறையவே இருக்கு. சில படங்களையும், அதுல என்னோட கேரக்டரைப் பற்றியும் சொல்லும்போது கேக்க நல்லா இருக்கும். ஆனா படம் முடிஞ்சு வெளியாகும்போது அவங்க சொன்னதும் நாம பார்க்குறதும் வேறவேறயா இருக்கும். அதுவே ஒரு பெரிய ஏமாற்றமா இருக்கும். அதனாலேயே நான் நடிச்ச நிறைய படங்கள்ல என் பெயர் வெளிய தெரியாம போய்டுச்சு. எந்தப் படம்னு பெயர் சொல்ல விரும்பல. ஆனா நிறைய இருக்கு.
சரியா வரலைனு நினைச்சு நல்லா வந்த கதாபாத்திரங்கள் இருக்கா?
'தர்மதுரை'ல வந்த என்னோட கேரக்டர் அப்படித்தான். படம் நடிக்கும்போது என் மேல எனக்கு நம்பிக்கையே இல்லை. சீனுராமசாமி சார், விஜய் சேதுபதி எல்லாரும் நல்லா இருக்குணுதான் சொன்னாங்க. ஆனாலும் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. படம் ரிலீசுக்குப் பிறகு என்னோட கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

இப்போ சேரன்கூட 'ராஜாவுக்கு செக்'. உங்க முதல் தமிழ்ப் படம் 'யுத்தம் செய்'. திரும்ப இத்தன வருஷம் கழிச்சு சேரன் படத்துல நடிக்கிறீங்க... எப்படி இருக்கு?
இத்தனை வருஷம் ஆனாலும் நான் பார்க்க அப்படியேதான் இருக்கேன்னு சேரன் சார் சொன்னார். 'யுத்தம் செய்' ஷூட்டிங் சமயத்துல நான் ரொம்ப சின்னப் பொண்ணு. அப்போ துறுதுறுன்னுதான் இருப்பேன். 'ராஜாவுக்கு செக்' சமயத்துல என்னோட சீன் ஷூட்டிங் தனியாத்தான் நடந்தது. அப்போ சேரன் சார் செட்ல இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் ஒரு விசிட்டுக்கு வந்தார். அப்போதான் இதைச் சொன்னார். அதே துறுதுறுப்போட வாயாடியா கதை பேசிக்கிட்டு இருந்தேன். அந்தப் படம் வெளிய வந்தா என்னோட முழு பொட்டன்ஷியலும் வெளியே தெரியும்.
அடுத்ததா `கட்டில்'. இது என்ன மாதிரியான படம்?
பேரை வெச்சு எதுவும் முடிவு பண்ணிடாதீங்க. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத் திரைப்படம். ஒரு குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனாலத்தான் இந்தப் பேர். குடும்பத்துல இருக்குற உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப்போராட்டங்கள்தான் இந்தப் படம். எமோஷனல் டிராமா. உலக சினிமா மாதிரி முயற்சி பண்றோம். நிறைய விருது விழாக்களுக்கு அனுப்புற ஐடியாவோடதான் இந்தப் படம் உருவாகுது. படத்துல நான் ஹவுஸ் வைஃப். பத்து வருஷத்துல முதல் முறையா இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறேன்.
Also Read
இப்போ நிறைய ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வருது. ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷான்னு முன்னணி நடிகைகள் எல்லாரும் லீட் ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களே?
அவங்க எல்லோரையும் நான் ரோல் மாடலாத்தான பார்க்குறேன். அவங்க இந்த மாதிரி நடிக்கத் தொடங்கினதுதான் என்ன மாதிரி புது நடிகைகளுக்கு ஒரு பெரிய நம்பிக்கையே. அவங்க நடிக்கிற படங்கள் வெற்றி பெற்றாத்தான் எங்களுக்கான வழியும் இன்னும் பெருசாகும். எனக்கும் அப்படி ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் நடிக்கணும்னு ஆசை இருக்கு.

ஒரு நடிகைக்கு இங்க வாய்ப்பு கிடைக்கிறதுல நிறைய சிக்கல் இருக்கும். அதுவும் இல்லாம இந்த வாரம் #MeToo இயக்கம் தொடங்கி ஒரு வருஷம் ஆகிருக்கு. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குறதுல என்ன மாதிரியெல்லாம் சிக்கல் இருந்திருக்கு
நிறைய பிரச்னைகளைச் சந்திச்சிருக்கேன். எல்லோரும் சந்திக்கிற பிரச்னைதான் இது. முதல்ல இதைப் பத்தி பேசத் தொடங்கினதே எங்களுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கு. எனக்குப் பிரச்னை வந்த எல்லா சமயத்துலயுமே நான் அதை வலுவா எதிர்த்திருக்கேன். என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்க முயற்சி பண்றாங்கன்னு தெரிஞ்சாலே எதிர்ப்பைக் காட்டிடுவேன். என்கிட்ட பயப்படுவாங்க. ஆனா, பெண்கள்கிட்ட இன்னும் நிறைய விழிப்புணர்வு வரணும்.