சூப்பர் ஸ்டார் ரஜினி - முருகதாஸ் காம்போவில் உருவாகிவரும் `தர்பார்' திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் படுஜோராக நடந்துவருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதேபடத்தில் தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா சுப்பிரமணியமும் நடித்து உள்ளார். தனது போர்ஷனை முடித்து சென்னை திரும்பியுள்ள அவரிடம் படம் தொடர்பாகப் பேசினோம்.

``ஏற்கெனவே இதுக்கு முன்னாடி ரஜினி சாரின் இரண்டு மூன்று படங்களில் நான் மேக்கப் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்திருக்கிறேன். ஆனா படத்துல நடிக்க முடியல. ஆனாலும் தொடர்ந்து அவர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன். அந்த சமயம்தான் சர்கார் படத்திலும் சான்ஸ் கேட்டு முருகதாஸ் சாரை பார்த்தேன்.
`ஏற்கெனவே நீங்க தர்மதுரை படத்தில் நல்ல கேரக்டர் பண்ணியிருக்கீங்க. இந்தப் படத்தில் சின்ன கேரக்டர்தான் இருக்கு. நல்ல கேரக்டர் வரும்போது நானே சொல்கிறேன்' என அப்போதே முருகதாஸ் சார் சொல்லியிருந்தார். இதனால முருகதாஸின் உதவியாளர்களிடம் தொடர்பில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கேட்டுட்டே இருப்பேன். தர்பார் படம் ஆரம்பிச்ச சமயம்தான் என் தம்பியின் கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிருந்தேன். ஊருல இறங்கி டீ குடிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் முருகதாஸ் அசிஸ்டென்ட் போன் பண்ணி ``தலைவர் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு, உங்ககிட்ட பேசச் சொல்லி முருகதாஸ் சார் சொன்னாருனு' சொன்னாங்க. முதல்ல அதை நான் நம்பல. உடனே முருகதாஸின் இன்னொரு உதவியாளர்கிட்ட உண்மையானு விசாரிச்சேன். அப்போதுதான் அது உண்மைன்னு தெரியவந்துச்சு. 12 வருஷம் கழிச்சு குடும்பத்தோடு மீண்டும் சேர்ந்தபிறகு நடக்கும் முதல் விசேஷம் என் தம்பி கல்யாணம். சொந்தக்காரங்கள பார்க்கலாம்னு ஆசை ஆசையா ஊருக்குப் போயிருந்தேன். இப்படிப்பட்ட நேரத்துல ரஜினி சார் படத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு. இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு பலனா இந்த வாய்ப்பு வந்திருக்கு. இதை வேண்டாம்னு சொல்ல யாருக்கு மனசு வரும். இந்த வாய்ப்பை விட வேண்டாம்னு குடும்பத்துல உள்ளவங்ககிட்ட சூழ்நிலையை எடுத்துச்சொல்லி மும்பைக்குப் போயிட்டேன். அங்கதான் அந்த ஆச்சர்யம் நடந்துச்சு.
ரஜினி சார அவ்வளவு பக்கத்துல பார்த்த அந்த தருணத்தை என்னால மறக்க முடியாது. ``உங்களை எங்கோ பார்த்திருக்கிறேன்னு'' எனக் கேள்வி கேட்டவரு, கொஞ்சநேரத்துல நான் தர்மதுரை படத்துல நடிச்சதையும், அவர் படத்துல மேக்கப் அசிஸ்டென்ட்டா இருந்ததையும் ஞாபகப்படுத்தி ``நல்லா பண்ணியிருக்கீங்க''னு சொல்லிப் பாராட்டினார். சகஜமாகப் பழகி என்னை நடிக்க வைத்தார். அவரோட பேச்சு, அந்த ஸ்டைல் சிரிப்புனு 12 நாள் அவர்கூட இருந்தது அத்தனையும் மகிழ்ச்சியான நேரம். 12 நாள் ரஜினி சார்கூட டிராவல் பண்ணிருக்கேன். இதை என்னைக்கும் மறக்கமாட்டேன். ரஜினி, இயக்குநர் முருகதாஸ்னு எல்லோரும் எனக்கு அவ்வளவு ஊக்கம் கொடுத்து பாத்துக்கிட்டாங்க.

செட்ல யாருமே என்னை ஒரு திருநங்கையா பார்க்கவே இல்ல. அவங்களோட ஒருத்தியாதான் நினைச்சாங்க. எல்லோரும் ஒருகுடும்பமா இருந்து என்னை நல்லா பாத்துக்கிட்டாங்க. எனக்குனு தனியா கேரவன் கொடுத்து மரியாதையா நடத்துனாங்க. இந்தப் படம் நிச்சயம் எனக்கு பெரிய திருப்புமுனையா இருக்கும்னு நம்புறேன்" எனப் பூரிப்புடன் பேசியவரிடம், படத்துல என்ன கேரக்டர்னு சொல்லுங்க என்றதும், ``அது சீக்ரெட். படம் வெளிவந்த பிறகு பாருங்க'' என்று சஸ்பென்ஸ் வைத்தார்.