சினிமா
Published:Updated:

“இசையும் பயணமும் இழைந்தோடும் கதை!”

வாழ் படக்காட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ் படக்காட்சி

2010லேயே சிவாண்ணாவுக்கு இந்தக் கதை தெரியும். இதுக்காக நாங்க ப்ரீ புரொடக்‌ஷன் வரைக்குமே ஒர்க் பண்ணிட்டிருக்கற விஷயமும் தெரியும்.

தமிழ் சினிமாக் கானகத்தில் காட்டாறாய்க் கொண்டாடித் தீர்த்த படம், ‘அருவி.’ அதன் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த பாய்ச்சல் ‘வாழ்.’ படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்பது இன்னும் ஸ்பெஷல். அருணிடம் பேசினேன்.
 “இசையும் பயணமும் இழைந்தோடும் கதை!”

`` ‘அருவி’க்குப் பின் நான்கு வருட இடைவெளி ஏன்?’’

‘‘சூழல் அப்படி ஆகிடுச்சு. ‘வாழ்’ போன வருஷம் பிப்ரவரியிலேயே ரிலீஸ் ஆகியிருக்கணும். கொரோனாவால தாமதமாகிடுச்சு. ‘அருவி’க்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும், இந்தக் கதையைத்தான் மொதல்ல பண்ண நினைச்சோம். 2010-லேயே இதை எழுதிட்டேன். நான், கேமராமேன் ஷெல்லி, எடிட்டர் ரேமண்ட்னு எங்க குழுவிலுள்ள அத்தனை பேருமே இந்தக் கதையைச் செதுக்கிட்டே இருந்தோம். எங்க முதல் படமா ‘வாழ்’ தான் வந்திருக்க வேண்டியது. ஆனா, ‘அருவி’ எங்க குழுவோட முதல் படமாகிடுச்சு. அதோட வெற்றி வெறும் பாராட்டாக மட்டும் குவியல. எங்க பொறுப்புணர்வை அதிகரிக்க வைக்கும் எச்சரிக்கையாகவும் இருந்துச்சு. ரஜினி சார், மணி சார்னு அத்தனை பேருமே பாராட்டினாங்க. தங்களோட குழந்தைக்கு ‘அருவி’ன்னு பெயர் வைக்க நிறைய பெண்கள் விரும்பினது நெகிழ்வா இருக்கு.

‘வாழ்’ ஒரு விஷுவல் ட்ரீட்டா இருக்கும். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளான்னு பல இடங்கள்ல தேடித்தேடி 200 லொகேஷன்களுக்கு மேல சுத்திட்டு, 171 லொகேஷன்கள்ல படமாக்கினோம். வெளிநாடுகள்ல தெற்காசிய பசிபிக் தீவுகள்லேயும் கொஞ்சம் ஷூட் செய்திருக்கோம்.’’

 “இசையும் பயணமும் இழைந்தோடும் கதை!”

``இதுவும் சமூக அரசியல் பேசும் படமா?’’

‘‘இல்லைங்க. இசையும் பயணமும் இழைந்தோடும் கதை இது. என் நண்பர் ஒருவர் சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றார். அவர் கேரக்டரை மனசுல வெச்சுதான் கதை உருவாச்சு. ‘அருவி’யில் இருந்த ஒரு சீரியஸ் மூடு இதுல இருக்காது. ஒரு மகிழ்வான ஃபேமிலி எண்டர்டெயினரா இது இருக்கும். ‘அருவி’யில் நடிச்ச பிரதீப்பைத் தவிர மத்த எல்லாருமே இதில் புதுமுகங்கள்தான். ‘அருவி’ ஒளிப்பதிவாளர் ஷெல்லியும், எடிட்டர் ரேமண்ட்டும் இதிலும் இருக்காங்க. ஒரே ஒரு ஃபைட்டை திலீப் சுப்பராயன் மாஸ்டர் செய்திருக்கார். பிரதீப்குமார் இசையமைச்சிருக்கார். இது பயணம் தொடர்பான கதைங்கிறதால, இசைக்கு முக்கியப் பங்கு இருக்கு. இசையமைச்சிருக்கும் பிரதீப் என் நண்பர்ங்கிறதால ஸ்கிரிப்ட் எழுதும் போதே, இசை மூலமா இந்தக் கதையைக் கடத்தணும்னு விரும்பினோம். பாடல் கம்போஸிங்கையும், பின்னணி இசையையும் முடிச்ச பிறகே ஷூட் கிளம்பினோம். ஒரு பாடலை தேவா சார் பாடியிருக்கார்.’’

அருண்பிரபு புருஷோத்தமன்
அருண்பிரபு புருஷோத்தமன்

``என்ன சொல்றார் உங்க தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்?’’

‘‘2010லேயே சிவாண்ணாவுக்கு இந்தக் கதை தெரியும். இதுக்காக நாங்க ப்ரீ புரொடக்‌ஷன் வரைக்குமே ஒர்க் பண்ணிட்டிருக்கற விஷயமும் தெரியும். ஆனா, இந்தப் படம் நடக்காம ‘அருவி’ பண்ண வேண்டியதாகிடுச்சு. இதற்கிடையே எங்காவது சிவாண்ணாவைச் சந்திக்கும் போதெல்லாம், ‘என்னப்பா, ‘வாழ்’ எப்போ பண்ணப்போறீங்க?’ன்னு அக்கறையா விசாரிப்பார். ‘அருவி’ முடிச்சதுக்குப் பிறகு, ‘நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியே எடுங்க’ன்னு சொல்லி, தயாரிப்பாளரா அவரும் கலையரசண்ணாவும் முழுச் சுதந்திரம் கொடுத்தாங்க. சினிமாவோட சின்னச் சின்ன நுணுக்கங்களையும் ஆடியன்ஸ் பல்ஸையும் சிவாண்ணா நல்லா புரிஞ்சுவெச்சிருக்கார். புதுமுகங்கள் நடிக்கிற படத்தை 171 லொகேஷன்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம்னா, அவராலதான் சாத்தியமாச்சு.’’