
விகடன் TV
“எல்லாத் துறைகளிலும் ஆண், பெண் இருவருமே சமமாப் பார்க்கப்படணும். டி.வி-யில் நமக்குப் பிடிச்ச நடிகரையோ, ஆங்கரையோ கைதட்டி ரசிக்கிற மக்கள், அவங்களோட வீட்டில் இருந்து ஒருத்தர் அந்த டி.வி-யில் முகம் காட்டத் தயாராகிறாங்கன்னு தெரிஞ்சா முதலில் அவங்களோட ஆசையை வரவேற்று, வழியனுப்பணும். யாரோ ஒருவர்னா ரசிக்கிற நாம, அதுவே நம் வீட்டிலிருந்து ஒருவர்னா ஏன் தயங்குறோம்?” என்கிறார், வி.ஜே சந்தியா. பட்டிமன்றப் பேச்சாளராகப் பல மேடைகளில் தன் பேச்சுத்திறமையால் ஆடியன்ஸை ஈர்த்தவர், பின் ‘காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்தார். ஆதித்யா தொலைக்காட்சியில் ‘காலேஜ் டாட் காம்' போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


“சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கத்தில் கலசபாக்கம்னு ஒரு கிராமம். பெரிய அளவில் பஸ் வசதிகூட இல்லாத ஊர். அங்கே பெண்கள் படிக்கப் போகிறதுங்கிறதே பெரிய விஷயம். என் அப்பா ஃபாரஸ்ட் ஆபீஸர். அம்மா படிக்காத மேதை. அம்மா ஸ்கூலுக்கே போகலைன்னாலும் என்னைப் படிக்க வைக்க நினைச்சாங்க. அவங்க விரும்பினபடியே பிஜி முடிச்சேன். எனக்கு வக்கீல் ஆகணும்னு ஆசை. படிக்கிறதுக்காக சென்னைக்கு வர்றதுக்கே வீட்ல ரொம்பப் போராட வேண்டியிருந்தது. சின்ன வயசில இருந்தே ஊர் விழாக்களில் பட்டிமன்றம் பேசுவேன். அதுதவிர, ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து பேச்சுப் போட்டியிலும் கலந்துப்பேன். ‘அரட்டை அரங்கம்', ‘மக்கள் அரங்கம்' போன்ற நிகழ்ச்சிகளில் பல முறை பட்டிமன்றப் பேச்சாளரா பங்கேற்றிருக்கிறேன். அதுதான் என் ஒட்டுமொத்தப் பயணத்துக்குமான ஆரம்பப்புள்ளி.
மதுரை முத்து நடுவராக இருந்த பல பட்டிமன்றங்களில் பங்கேற்றிருக்கிறேன். அவர் மூலமா சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைச்சது. முதலில் அவர் கூப்பிட்டப்போ, ‘எனக்கு காமெடியெல்லாம் வராது சார். சீரியஸான பேச்சு மட்டும்தான் என்கிட்ட எதிர்பார்க்கலாம்’னு சொன்னேன். அவர், ‘அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா உன்னால் முடியும்’னு என்னைப் பண்ண வெச்சார். அந்த நிகழ்ச்சி என் தலையெழுத்தை முற்றிலும் மாற்றிடுச்சு. அந்த நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துட்டு காவேரி மேடம் என்னை ஆதித்யா டி.வி-யில் தொகுப்பாளரா நியமிக்கச் சொல்லிட்டாங்க. அப்படித்தான் ஆதித்யா டி.வி-யில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது.



ஆதவன் அண்ணன்தான் ஆங்கரிங்னா என்னன்னு கற்றுக்கொடுத்தார். ஆங்கரிங் பண்ணும்போது பட்டிமன்றத்தில் பேசுற மாதிரி சத்தமா பேசுவேன். அதைப் பார்த்துட்டு காலர்ஸ் பலரும் ‘சவுண்ட் சந்தியா'ன்னு கூப்டுவாங்க. ஆதித்யாவில் ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும்போதே வக்கீலுக்கும் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். ஒருகட்டத்தில் ரெண்டையும் பேலன்ஸ் பண்ண முடியலை. மீடியாவில் ஆர்வம் அதிகமா இருந்ததனால அதைத் தேர்ந்தெடுத்துட்டேன். ஆனாலும், இப்பவும் சில கேஸ் நடத்திட்டுதான் இருக்கேன்.’’



``சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது..?’’
“என்னோட தாத்தா ஊரில் கூத்து கட்டுவாரு. திரெளபதி கதாபாத்திரத்தில் எங்க ஊரிலேயே என் தாத்தா மட்டும்தான் நடிப்பாரு. அவர்கிட்ட இருந்தே நடிப்புத்துறைமீது பற்று வந்துச்சுன்னு சொல்லலாம். ‘கலக்கப்போவது யாரு’ ஜெயச்சந்திரன் அண்ணா ‘கேள்'னு ஒரு தியேட்டர் குரூப் வச்சிருக்காங்க. அவர்தான் நடிப்புன்னா என்னன்னு சொல்லிக்கொடுத்தார். அவர்கூட சேர்ந்து இப்போவரைக்கும் பல நாடகங்கள் நடிச்சிட்டிருக்கேன். சீரியல் வாய்ப்பு கிடைச்சப்போ அந்த நடிப்பு அனுபவம் என்னை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகுதுன்னு சந்தோஷமா இருந்துச்சு. சன் டி.வி-யில் ‘கண்மணி' சீரியலில் நடிச்சேன். பிறகு, விஜய் டி.வி-யில் ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்', ‘காற்றின் மொழி' தொடரைத் தொடர்ந்து இப்போ ‘நம்ம வீட்டு பொண்ணு' சீரியலில் நடிக்கிறேன். அந்த சீரியலின் இயக்குநர் பிரவீன் சாருக்கும், இயக்குநர் குணசேகர் சாருக்கும் ரொம்பவே நன்றி சொல்லணும். ஏன்னா, நடிப்பு தொடர்பான பல நுணுக்கங்களை எனக்குச் சொல்லிக்கொடுத்திட்டிருக்காங்க.”