இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் இப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தில் பாடல்கள் ஸ்பாடிஃபை ( Spotify) செயலியில் ஆல்பமாக சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. அதன் ப்ரோமோவுக்காக கமல்ஹாசனைப் புகைப்படம் எடுத்த அனுபவம் பகிர்கிறார் புகைப்படக் கலைஞர் ஃபகத்.

“எனக்குச் சொந்த ஊர் வேலூர். ஐடி-ல வேலைக்கு சேர்ந்த 2007-ல் இருந்து சென்னைதான். சினிமா மேல இருந்த ஈடுபாடு காரணமா, ஐடி துறைல இருந்து வெளியேறிட்டேன். அதற்கான தொடக்கமா புகைப்படக் கலையைத் தேர்ந்தெடுத்து அதுசார்ந்து இயங்க ஆரம்பிச்சேன். நானும் என்னோட தோழி சிவஞானவதியும் சேர்ந்து திருமணங்கள், பொது நிகழ்வுகள்னு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சோம். தொடர்ந்து சினிமா சார்ந்த முயற்சிகளும் பண்ணிட்டு இருந்தப்போதான், ‘அதே கண்கள்’ படத்துல இயக்குநர் ரோஹின் வெங்கடேசனுக்கு அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன்,” என்று தன் பின்னணி குறித்துப் பேசுகிறார் ஃபகத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“இளையராஜா ஸ்பாடிஃபை ஆல்பம் ராஜா ரூல்ஸ்-க்கான ப்ரோமோவின் இயக்குநர் ஸ்ருதி நந்தகோபாலுடன் எனக்கு நீண்ட நாள் அறிமுகம் உண்டு. சில நாட்களுக்கு முன்ன அவங்க என்னைத் தொடர்புகொண்டு, ‘ஸ்பாடிஃபை ஆல்பத்துக்குப் புகைப்படம் எடுக்கணும், விருப்பமா’ன்னு கேட்டாங்க. மேற்கொண்டு எந்தத் தகவலும் அவங்க சொல்லல, நானும் கேட்டுக்கல. மறுநாள் அவங்கள செட்ல சந்திச்சேன். ராஜா ரூல்ஸ்-ஐப் போலவே Behind the scenes காட்சிகளைப் படமெடுக்கத் தான் நான் வந்திருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நான் யாரை, எப்படிப் படமெடுக்கப் போறேன்ங்கிறத விளக்க ஸ்ருதியின் உதவியாளர் ஒருவர் எனக்குச் சொல்வதற்காக வந்தார். யாரைப் படமெடுக்கப் போறேன்னு நான் கேட்டதும், மெல்லியப் புன்னகையோட ‘ஆண்டவர்’ன்னு அவர் சொன்னார். எனக்கு பயங்கர ஷாக். Behind the scenes- ங்கிற திரைக்குப் பின்னால் எடுக்குற மாதிரி இல்லாம, புகைப்படத்துக்காக நேரடியா கமல் சாரை இயக்கணும்ங்கிற பதட்டத்துக்கு ஆளாகிட்டேன்,” என்று அதே பதட்டத்துடன் சிரிக்கிறார் ஃபகத்.

“கமல் சார் வந்ததும் செட்டோட தன்மையே மொத்தமா மாறிடுச்சு. கமல் சார் பேட்டிக்குத் தயாராகத் தொடங்க, நானும் Behind the scenes படங்கள் எடுத்தேன். பேட்டி தொடங்கிருச்சு, ஆனா அது முடிஞ்சதும் நான் படமெடுக்கப் போறேங்கிறத மறந்துட்டு கமல் சார் பேசுறதையே கேட்டுட்டு இருந்தேன். பேட்டி முடிஞ்சதும் எனக்கான நேரம் வழங்கப்பட்டது. ‘தேவர் மகன்’ படத்துல ரேவதி மேம் சொல்ற மாதிரி வெறும் காத்து மட்டும்தான் வந்துச்சு. கமல் சார் என்னைப் பார்த்து, ‘நானே போஸ் கொடுக்கிறேன், நீங்க எடுங்க’ன்னு தன்னைத் தானே இயக்கிக் கொண்டார். வீட்டுக்கு வந்து படங்களைக் கணினியில் பார்த்தப்போ ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் மாறியிருந்த அவரோட ரியாக்ஷன்கள் பார்த்து பிரமிச்சுப் போய்ட்டேன். அந்த நிமிடங்களை இப்போ நினைச்சாலும் சிலிர்க்கிறது,” பிரமிப்பு விலகாமல் பேசுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“கமல் சாரைப் படமெடுக்கப் போறேன்ங்கிறது எனக்கே அங்கப் போனப் பிறகுதான் தெரியும் என்பதால் யாரிடமும் நான் சொல்லல. படங்கள் வந்ததும் என் அம்மாவுக்கு அனுப்பினேன், அவங்க ‘நீதான் எடுத்தியா... நீதான் எடுத்தியா’னு நம்பமுடியாம கேட்டுட்டே இருக்காங்க.

ஊர்ல நண்பர்கள் எல்லாம் ‘விக்ரம்’ ரிலீஸ் அன்னிக்கு பேனர் வைக்கிறோம்னு சொல்லிப் பாராட்டுறாங்க... சந்தோஷமா இருக்கு!” நிறைவாகப் புன்னகைக்கிறார் ஃபகத்.