
மிஸ்டர் மியாவ்
சமுத்திரகனியின் ‘அப்பா’ படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. இதில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் வரலட்சுமி. இப்போது, திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார். அதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆணாதிக்கத்தனம்’ என்று எழுதி உள்ளார் வரு. படத் தயாரிப்புத் தரப்புடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்தான் காரணமாம்.

தனது தயாரிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வசூலைத் தராததால், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறார் பிரபுதேவா. அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் தற்போது நடிக்கும் படம், ‘யங் மங் சங்’. கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. நாயகி லட்சுமி மேனனுக்குத் தந்தையாக சித்ரா லட்சுமணன் நடிக்கிறார். இவர், ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவுக்குத் தந்தையாக நடித்தவர். இப்போது, பிரபுதேவாவுக்கு மாமனாராக நடிக்கிறார்... அடடே!

விஜய் நடிக்கும் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார் என்ற செய்தியை, பதறிப்போய் மறுத்துள்ளது லைகா நிறுவனம். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்த நிலையில், சிம்பு இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக வம்பு செய்தது யார் என மண்டைக் குழம்பிப் போயுள்ளது படக்குழு.

படத்தை நச்சென இயக்குவதும், விளம்பரப்படுத்துவதும் முக்கியம். இந்த இரண்டு வேலைகளிலும் ‘பாகுபலி 2’ குழுவினர் தீவிரம் காட்டுகிறார்கள். இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ஹைதராபாத்தில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோன்ற நிகழ்ச்சி, விரைவில் சென்னையிலும் நடக்கவுள்ளதாம்.

கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் இடைவிடாது சிக்குவதால், அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் அவருடைய பெற்றோர். சென்னையின் பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரின் மகளைப் பேசி முடித்துள்ளார்கள். பெற்றோர்கள் முடிவுசெய்த திருமணம்தான் என்றாலும், அந்தப் பெண்ணை அனிருத்துக்கு முன்பே தெரியுமாம். அனிருத் ரசிகையாம்.
சின்ன பட்ஜெட்டில் பெரிய ஹிட் அடித்த தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கும் கெளதம் மேனன், தயாரிப்புப் பணியை மட்டும் மேற்கொள்கிறார். இவரின் இணை இயக்குநர் செந்தில் வீராசாமி இந்தப் படத்தை இயக்கப் போகிறார். விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிக்கவுள்ளனர். படத்துக்கு ‘பெண் ஒன்று கண்டேன்’ என்ற டைட்டில் முடிவாகியிருக்கிறது.
மியாவ் பதில்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் யாருக்கு யார் ஆதரவு?
ஏப்ரல் 2-ம் தேதி நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான்கு அணிகள் களத்தில் உள்ளன. மற்ற எல்லா அணிகளும், விஷால் அணிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. விஷாலை, தி.மு.க தரப்பிலிருந்து உதயநிதி ஆதரிக்கிறார். இதனால், ஆளும்கட்சியின் ஆதரவை விஷாலின் எதிரணியினர் நாடினர். ஆனால், கமல்ஹாசனின் ட்வீட் விமர்சனங்களால் அதிர்ந்துபோயுள்ள ஆளும் தரப்பு, ‘யாருக்கும் ஆதரவு இல்லை’ என்று கூறிவிட்டது. ‘நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றதும், சங்கக் கட்டடத்தை விரைவில் கட்டிமுடிப்பேன் என்று சொன்ன விஷால், இன்று வரையில் சங்கக் கட்டடத்துக்கான வேலைகளைத் தொடங்கவில்லை. அதற்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு வந்துவிட்டார்’ என்று எதிரணியினர் சூட்டைக் கிளப்பி வருகிறார்கள்.