கவிஞர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத பரபரப்பான கம்யூட்டர் இளைஞனாக இருக்கிறார், மதன் கார்க்கி. சென்னை அடையாறில் பிரபல காபி ஷாப் ஒன்றில் சந்தித்தோம். ஒரே நேரத்தில் இரண்டு லேப்-டாப்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மதன் கார்க்கி திரைப்பட இளம் பாடலாசிரியர் மட்டுமல்ல... அண்ணா பல்கலையில் கணிப்பொறி இயல் துறை உதவிப் பேராசிரியரும்கூட. 23 படங்களில் 50 பாடல்களை எழுதியிருக்கும் இவரது முதல் பாடல், 'எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற, 'இரும்பிலே ஒரு இதயம்’. சமீபத்திய ஹிட், 'கோ’ படத்தில் இடம்பெற்ற, 'என்னமோ, ஏதோ...’.
அவருக்கு நாம் கொடுத்த சவால் இதுதான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''உங்கள் தந்தை வைரமுத்துவின் திரைப்படப் பாடல்களில் இருந்து டாப் டென் பாடல்களை மட்டும் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்...'' என்றதும், கொஞ்சமும் தயங்காமல் சம்மதித்தார். கொரியன் டீ அருந்திக் கொண்டே பேசினார் கார்க்கி...

''ஒரு பாட்டை முழுமையாக அனுபவிக்க அதன் வரிகள் மட்டுமே போதாது. ஏனென்றால், ஒரு கவிதைப் புத்தகமே அந்த சந்தோஷத்தைத் தந்துவிடும். ஒரு திரைப்பாடலின் முழுமை, இசை அந்த வரிகளை அழகாகச் சுமந்து போகும்போதும், பாடகர் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து பாடும்போதும், வரிகளை மனதில் தைக்கும் விதமாக ஒளிப்பதிவாளர் காட்சி அமைக்கும்போதும், அந்தக் காட்சியில் நடிப்பவர்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, பாடல் வரிகளுக்கேற்ப வாயசைத்து தங்களது நடிப்பை வெளிப்படுத்தும்போதும், இவை அனைத்தையும் தன் கற்பனைக்கு ஏற்றபடி இயக்குநர் இணைக்கும்போதும்... கவிஞர் எழுதும் வரிகள் முழுமை அடைகின்றன.

ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் எழுதியிருப்பதில் எனக்குப் பிடித்த நூறு என்று சொல்லியிருந்தால்கூட அந்த எண்ணிக்கை குறைவுதான். ஆனால், கொஞ்சமாவது நியாயமாக இருந்திருக்கும். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
1. 'மூங்கில் காடுகளே,
வண்டு முனகும் பாடல்களே’
'சாமுராய்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனுபவித்துப் பாடி இருப்பவர், ஹரிஹரன். விக்ரம் இயற்கையை அனுபவித்துப் பாடுகிற பாடல். இயற்கையைப் போற்றி, அனுபவித்து, ரசித்து என் தந்தை எத்தனையோ பாடல்கள் எழுதியிருக்கிறார். இருந்தாலும் இயற்கையிடம் இருந்து மனிதன் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதை விளக்குவதால் இந்தப் பாடல் கூடுதல் விசேஷமானது.
'வேரை அறுத்தாலும்,
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,.
அறுத்த நதியின் மேல் மரங்கள்,
ஆனந்தப் பூச்சொரியும்...’ என்று வரிகள் வரும்.
'தூரச் சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆகேனோ?’ என்ற வரிகளில் இருக்கும் இனிமையை ஹைலைட் பண்ணும் வகையில் ஹாரிஸ் ஜெயராஜ், தன் இசையைக் கொண்டு வருவார். இந்தப் படமும், இந்தப் பாடலும் பெரிய ஹிட்டாக, பாப்புலர் ஆகவில்லை என்றாலும், எனக்கு மிகவும் பிடித்தது இது.
2. 'பொன்மாலை பொழுது, இது ஒரு பொன் மாலை பொழுது...’
'நிழல்கள்’ படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய சூப்பர் ஹிட் பாடல். என் தந்தை திரைப்படத்துக்காக எழுதிய முதல் பாடல். இந்தப் பாடலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 'நிழல்கள்’ படத்துக்குப் பாடல் எழுத இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து தகவல் வந்ததும் என் தந்தை, இளையராஜாவை சந்திக்கிறார். அவர் கொடுத்த ட்யூனுக்கு ஏற்ப வரிகள் எழுதுகிறார். அப்போது என் தாயார் பொன்மணி வைரமுத்து, பிரசவத்துக்காக கோடம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 1980 மார்ச் 10, அன்று நான் பிறக்கிறேன், அன்றே இந்த பாடலும் பிறந்தது.
'உனக்கும், எனக்கும் ஒரே நாளில் டெலிவரி’ என்று என் தந்தை, என் தாயாரிடம் சொல்லியிருக்கிறார்.
'வானம் எனக்கு ஒரு போதி மரம்
நாளும் எனக்கு அது சேதி தரும்...
வான மகள் நாணுகிறாள்...
வேறு உடை பூணுகிறாள்’ போன்றவை மறக்க முடியாத வரிகள்.

3. 'பூங்காற்றிலே உன் வாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்...’
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'உயிரே’ படத்துக்காகப் பாடியவர் உன்னிமேனன். ரொம்பவும் ரொமான்டிக்கான பாடல். ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரியும் ஷாரூக்கான், தன் காதலி மனிஷா கொய்ராலாவை நினைத்துப் பாடுவார்.
'காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகிறதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா...?’ என்று வரிகள் வரும். 'தில்ஸே’ இந்திப் படத்தின் பாடலை மொழிபெயர்த்து எழுதப்பட்ட பாடல் இது. இந்தி ஒரிஜினலை விட, தமிழில் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்று இரு மொழியும் அறிந்த வல்லுநர்கள் பாராட்டினார்கள். காதல் சார்ந்த வலியை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும்... இசைக்கருவிகளும், மேலும் அழகாக்கிப் பதிவு செய்திருக்கும்.
4. 'நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்...’
படம்: நிலாவே வா, இசை: வித்யாசாகர், ஹீரோ: விஜய், பாடியவர்கள்: சித்ரா, ஹரிஹரன்.
''நீ மழை, நான் பூமி...
எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்ளுவேன்.
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்...'' என்று வரிகள் வரும்.
இரண்டுக்கும் உள்ள நெருக்கம், உறவு ரசிக்கும்படி இருக்கும். இந்தப் பாடலும் படமும் பெரிய அளவில் பாப்புலராகவில்லை என்றாலும் என்னைக் கவர்ந்தது இதுவும். ஆனால், இதே வகையில், என் தந்தை எழுதிய பல பாடல்கள் ஹிட்டானது.
'கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு’ - படம்: 'புதிய முகம்’,
'குளிச்சா குற்றாலம், கும்பிட்டா பரமசிவம்’ - படம்: 'டூயட்’
'சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை’ - படம்: 'ரோஜா’

5. 'பச்சைக் கிளிகள் தோளோடு...’
'இந்தியன்’ படத்துக்காகப் பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ். இசை: ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்: ஷங்கர்.
ஒரு குடும்பத்தில் பொங்கும் ஆனந்தம், மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் பாடல்.
'பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை.
.....
அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்...’
இரு வேடங்களில் கமல், சுகன்யா, கஸ்தூரி குடும்பமாக மகிழ்ந்து விளையாடும் காட்சி அற்புதமாக இருக்கும். இதில், 'உன் விழியால்... பிறர்க்கழுதால்... கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்...’ - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
'பாசம் மட்டும் போதும் கண்ணே...
காசு, பணம் என்னத்துக்கு?’ - வீட்டில் மழைத் தண்ணீரில் பேப்பர் கப்பல் விட்டுக் கொண்டிருப்பார் கஸ்தூரி. பேப்பர் ஆகிவிடும், உடனே தன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுப்பார். அதைக் கப்பலாக்கும் கஸ்தூரிக்கு மகிழ்ச்சி. இதைவிடச் சிறப்பாக இந்த வரிகளைப் படமாக்கியிருக்க முடியாது. ஷங்கர் படங்களிலேயே, பாடலைப் படமாக்கும் காட்சிகளில் எனக்கு ரொம்பவும் பிடித்த, மிகச் சிறந்த 'விஷ§வல்’ இதுதான் என்பது, என்னுடைய தீர்மானமான கருத்து.
6. 'வா, வா என் தேவதையே...’
படம்: 'அபியும் நானும்’, இசை: வித்யாசாகர், இயக்கம்: ராதா மோகன், பாடியவர்: மதுபாலகிருஷ்ணன்.
தந்தை - மகள் உறவு பற்றிய அருமையான பாட்டு. எனக்கு அக்கா, தங்கை கிடையாது. எனவே, இந்தப் பாடலை என் தந்தை கற்பனையிலேயே ஒரு அனுபவத்தைக் கொண்டு வந்து எழுதியிருக்கிறார்.
'என் பிள்ளை எட்டு
வைத்த நடைபோல
இந்த இலக்கணக்
கவிதையும் நடந்ததில்லை...
....
பெண் பிள்ளை
தனி அறை புகுந்ததிலே,
ஒரு பிரிவுக்கு
ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்’ - இந்த வரிகள் அற்புதமானவை.
ஒரு பெண் வளர்கிறாள். தனி அறை வேண்டும் என்றால், அவள் விரைவில் திருமணம் ஆகி, வேறு வீட்டுக்குச் செல்லப் போகிறாள்.
அந்தப் பிரிவுக்கு ஒத்திகை என்பதாக எழுதப்பட்ட வரிகளை எப்போது கேட்டாலும், எனக்கு மெய்சிலிர்க்கும். இந்தப் பாடலில் வரிகளும், இசையும் அழகாக பேலன்ஸ் ஆகியிருப்பது எனக்குப் பிடிக்கும்.
வித்யாசாகர் - என் தந்தை கூட்டணியில் நிறையப் பாடல்கள் ஹிட்.
7. 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து...’
படம்: 'பொற்காலம்’, இசை: தேவா, பாடியவர்: கிருஷ்ணராஜ், இயக்கம்: சேரன்.
தான் மணக்க விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு குயவன் கனவு காண்கிறான்.
'மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு
அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு தேனூரு’ என்று ஒவ்வொரு மண் எடுக்கவும் ஒரு லாஜிக் சொல்லியிருப்பார். படமும், இந்தப் பாட்டும் சூப்பர் ஹிட்.
8. 'பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா...’
படம்: 'முதல் மரியாதை’, இசை: இளையராஜா, இயக்கம்: பாரதிராஜா, பாடியவர்: மலேசியா வாசுதேவன்.
என் தந்தைக்கு முதல் முறையாக தேசிய விருது பெற்றுக் கொடுத்த பாடல். சோகமாக சிவாஜி வயலில் உட்கார்ந்து பாடுவார். எளிய வார்த்தைகளால் உருவான பாடல்.
'தாலாட்ட... மடியில் வைச்சுப் பாராட்ட,
எனக்கு ஒரு தாய் மடி கிடைக்குமா...
.....
என்ன சொல்லுவேன், என் உள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கலை’
இளையராஜா - வைரமுத்து இருவரும் இணைந்து பணி புரிந்தது, ஐந்தே ஆண்டுகள்தான். 1980-ம் ஆண்டு 'நிழல்கள்’ தொடங்கி 1985-ல் வெளியான 'புன்னகை மன்னன்’ படத்தோடு அவர்கள் உறவில் இடைவெளி விழுந்தது. ஐந்து வருடங்களிலே இருவரும் சேர்ந்து, எவ்வளவோ மேஜிக் பண்ணியிருக்கிறார்கள்.
'அந்தி மழை பொழிகிறது’ - 'ராஜபார்வை’
'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ - 'புன்னகை மன்னன்’
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ - 'அலைகள் ஓய்வதில்லை’
இவர்கள் இருவரும் இன்னும் நிறையப் படங்கள் பண்ணியிருக்கணும் என்று ஒரு ரசிகனாக நான் நிறையவே ஏங்கியிருக்கிறேன்.
9. 'காற்றின் மொழி ஒலியா, இசையா...’
படம்: 'மொழி’, இயக்கம்: ராதா மோகன் இசை - வித்யாசாகர் பாடியது சுஜாதா.
'இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவை இல்லை’ - இந்தப் படத்தின் மையக் கருத்தாகவே இந்தப் பாட்டு அமைந்திருக்கும். ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பிரமாதம். அவர் நடித்த படங்களிலேயே, 'மொழி’தான் பெஸ்ட் என்று நான் நினைக்கிறேன்.
இந்தப் பாடல், மற்றும் படம் முழுவதும் ஜோதிகாவின் எக்ஸ்பிரஷன்கள் ரொம்பப் பிடிக்கும். பாடல் வரிகளுக்கு கூடுதல் மகத்துவம் சேர்த்த இயக்குநர் ராதா மோகன் ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான களத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வகைப் படங்கள்தான் செய்பவர் என்று முத்திரை குத்தப்படாமல் இருக்கிறார்.

10. 'மின்னலே நீ வந்தது ஏனடி...’
படம்: 'மே மாதம்’, இசை: ஏ.ஆர்.ரஹ்மான், பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
காதல் சோகப் பாட்டு, உவமைகள் ரொம்ப அழகாக இருக்கும்.
'பால் மழைக்கு
காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்கு
காத்திருக்கும் சாமியில்லையா?
வார்த்தை வர
காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால்
காலம் இன்னும் நீளுமில்லையா?’
சோகத்தைப் பற்றி எழுதும்போது, உவமைகளைத் தள்ளி வைத்து உணர்ச்சிகளை மட்டும் முன்னிலைப்படுத்தினால், மனதில் ஆழமாகப் பதியும் என்பது என் கருத்தாக இருந்தது. இந்தப் பாட்டை விதி விலக்காகப் பார்க்கிறேன். இந்தப் பாட்டு பெரிய ஹிட். பத்து பாடல்களைச் சொல்லி விட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடியவில்லை, பட்டியலை நீட்டித் தரக்கூடாதா என்ற ஏக்கம்தான் வருகிறது. அதனால் என் மனதில் தோன்றும் இன்னும் 10 பாடல்களை படபடவெனப் பட்டியல் போட்டு விடுகிறேன், குறித்துக் கொள்ளுங்கள்.
* இளைய நிலா பொழிகிறதே - 'பயணங்கள் முடிவதில்லை’
* பாடறியேன், படிப்பறியேன் - 'சிந்து பைரவி’
* தெய்வம் தந்த பூவே - 'கன்னத்தில் முத்தமிட்டால்’
* ஒருவன் ஒருவன் முதலாளி - 'முத்து’
* போறாளே பொன்னுத்தாயி - 'கருத்தம்மா’
* என்ன சொல்லப் போகிறாய் - 'கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’
* சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் - 'அமர்க்களம்’
* டேக் இட் ஈஸி ஊர்வசி - 'காதலன்’
* காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை - 'எந்திரன்’
* கள்ளிக் காட்டில் பிறந்த தாயே - 'தென்மேற்குப் பருவக் காற்று’