
“திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக வெயிட்டிங்...” - சவால்விடும் சண்டக்கோழி விஷால்
“ ‘சண்டக்கோழி-2’ என் 25வது படம். இதுக்கிடையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்னு ஏகப்பட்ட வேலைகள். ‘நின்னு நிதானமா ஏதாவது ஒரு வேலையை நல்லவிதமா பார்க்கலாமே’னு சிலர் சொல்றாங்க. அப்படி வழக்கமான நபரா இருந்துட்டுப்போகலாம்தான். ‘நான் ஏன் தேர்தல்ல நிக்கிறேன் என்பதைவிட, எனக்கு ஏன் இந்தத் தேர்தல் காய்ச்சல் தொத்துச்சு’னுதான் பார்ப்பேன். நம்மை நோக்கித் தானா ஒரு விஷயம் வரும்போது இறங்கிப்பார்த்துடலாம்னு தான் நினைப்பேன். அப்படி, இப்ப திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருது, பார்ப்போம்...” கோவளம் கடற்கரை, நள்ளிரவு நேரம். ‘அயோக்யா’ பட சண்டைக்காட்சி படப்பிடிப்பு. முகத்தில் ரத்தம் வழிய சண்டையிட்டபடியிருந்த விஷாலை ஷாட் பிரேக்கில் சந்தித்தேன்.

“உங்களுக்கும் லிங்குசாமிக்கும் ‘சண்டக்கோழி’க்குப் பிறகு கருத்துவேறுபாடு இருந்ததா கேள்விப்பட்டிருக்கோம். அப்படியிருக்கையில் ‘சண்டக்கோழி-2’ எந்தப் புள்ளியில் தொடங்குச்சு?”
“நெருங்கிய நண்பர்களுக்கு மத்தியில் ஒரு பிரிவு வந்தா, அதன் தாக்கம் ரொம்ப வலுவா இருக்கும். அந்தமாதிரியெல்லாம் இனி நடக்கவே கூடாதுனு கடவுளை வேண்டிக்கிறேன். சமயங்களில் ஒரே ஃப்ளைட்ல மூணு சீட் தள்ளிதான் உட்கார்ந்திருப்போம். ஆனா ஒருத்தருக்கொருத்தர் முகம் கொடுத்துக்கூடப் பேசமாட்டோம். ‘நண்பன், என் சினிமாப் பாதையை வடிவமைச்சவன், ஆனாலும் பேசுறதில்லை, என்னடா வாழ்க்கை’னு நினைச்சுப்பேன். அந்தப் பரஸ்பர நினைப்புதான் எங்களை மறுபடியும் 14 வருஷம் கழிச்சு ஒரே புள்ளியில கொண்டுவந்து நிறுத்துச்சு. இப்போ இரண்டு பேரோட நிறைகுறைகளையும் நல்லா புரிஞ்சுகிட்டு இருக்கோம். இனி எங்களுக்குள் பிரிவு வராது!”
“ஒரு வெற்றிப் படத்துக்கு அடுத்த பார்ட் பண்ணும்போது அதற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ‘சண்டக்கோழி-2’ல் அப்படி என்னென்ன சவால்கள் இருந்தன?”

“முதல்பாகத்தில் நடித்த அத்தைகள்ல ஒருத்தர் அமெரிக்காவுல செட்டிலாகிட்டாங்க. அத்தை பொண்ணுங்கள்ல இரண்டுபேர் நடிக்கிறதையே நிறுத்திட்டாங்க. மீரா ஜாஸ்மினும் இப்ப நடிக்கிறதில்லை. ஆனா, எல்லாச் சவால்களையும் தாண்டி லிங்கு கேரியர்ல சிறந்த திரைக்கதைனா அது இந்தப் படம்தான். முதல் நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு, ‘டேய், 14 வருஷத்துக்கு முன்ன நீ எப்படி இருந்தியோ இன்னைக்கும் அப்படியே தான்டா இருக்க. கேரக்டரா வித்தியாசமே தெரியலை’ன்னார். நான்மட்டுமில்ல, ராஜ்கிரண் சார், பெரியவர் மு.ராமசாமி அய்யா உட்பட எல்லாருமே அப்படியேதான் இருக்காங்க. கீர்த்தி சுரேஷும் வரலட்சுமியும் சண்டக்கோழி ஸ்கூல்ல புது வரவுகள்.”
“முதல் பாகத்துக்கு மீரா ஜாஸ்மின் மிகப்பெரிய பலம். இப்ப அதே கேரக்டர்ல கீர்த்தி சுரேஷ். எப்படி நடிச்சிருக்காங்க?”
“கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி கேரக்டர்கள் நிச்சயம் ரிப்பீட் ஆடியன்ஸைத் தியேட்டருக்குக் கொண்டுவந்து சேர்க்கும். சின்னச் சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால கீர்த்தி கலக்கிட்டாங்க. லிங்குக்குள்ள ஆக்ரோஷமான ஓர் ஆணும் இருக்கான், செம சேட்டையான ஒரு பெண்ணும் இருக்காள்னு நினைக்கிறேன். அவர் எப்படி நடிச்சுக் காட்டினாரோ கீர்த்தி அப்படியே நகலெடுத்தமாதிரி பண்ணியிருக்காங்க.”

“ஹீரோயினா நடிச்சிட்டிருக்கிற வரலட்சுமியை வில்லியாக்கிட்டீங்க. எப்படிச் சம்மதிச்சாங்க?”
“வரு கேரக்டர், ரொம்பவே சர்ப்ரைஸானது. படம் பார்த்துட்டு வெளியில வந்ததும் முதல்ல வருவைத்தான் பாராட்டுவாங்க. ‘இந்தப் படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கு. நான் பண்ணணும்னு டைரக்டர் சொல்றார் பண்ணவா’னு வரு கேட்டாங்க. ‘ஹீரோயினா ஆடிப்பாடி வாங்குற பேரைவிட, இந்தமாதிரி கதாபாத்திரம் பண்ணும்போது அது நீண்டநாள் பேசப்படும். நிச்சயம் பண்ணு’ன்னு சொன்னேன். நகரத்துல பிறந்து வளர்ந்த பெண்ணை ஒரே நாள்ல உல்டாவா மதுரைப் பொண்ணா நடிக்கச் சொன்னோம். நல்லா பண்ணிட்டாங்க; முதல் பாகத்தில் இருந்த லால் சார்க்கு சமமான கேரக்டர். ‘சண்டக்கோழி 2’ல் லால் சார் இருக்காரா இல்லையா என்பது சஸ்பென்ஸ்.”
“ ‘சண்டக்கோழி’க்குப் பிறகு?”
“இதோ பண்ணிட்டிருக்கேனே... ‘அயோக்யா.’ முருகதாஸ் சாரின் இணை இயக்குநர் மோகன் இயக்கறார். அடுத்து சுந்தர்.சி சாருடன் ஒரு படம், அதற்கடுத்து ஆனந்த்னு ஒரு புதுமுக இயக்குநரிடம் கதைகேட்டு ஓகே பண்ணியிருக்கேன்.அதுமட்டுமில்லை, சன் டிவியில, ‘நாம் ஒருவர்’னு ஒரு நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ணப்போறேன். செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை என்னை சன் டி.வி-யில் பார்க்கலாம்.”

“ரசிகர் மன்றத்தை “மக்கள் நல இயக்கம்’னு மாற்றியிருக்கீங்க. இது அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?”
“நிச்சயமா என் மக்கள் நல இயக்கத்தைக் கட்சியா மாத்துவேன். அரசியல்வாதிகள் அவங்க வேலையை சரியா செஞ்சாங்கன்னா, என்னைமாதிரி நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர்றாங்க? பவர்ல இருந்தாதான் சரியா பண்ணமுடியும்னா அரசியலுக்கு வர்றது தவறே இல்லை.”

“ஆர்.கே.நகர் மாதிரி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்ல நாமினேஷன் ஃபைல் பண்ணுவீங்களா?”
“திருப்பரங்குன்றத்துல இவங்க இடைத்தேர்தல் அறிவிப்பாங்களா மாட்டாங்களா என்பதே தெரியலை. இன்னும் உள்ளாட்சித் தேர்தலையே இவங்க நடத்தலையே. இடைத்தேர்தல் அறிவிச்சபிறகு பார்க்கலாம்.”
“இன்றைய அரசியல்வாதிகள் என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க?”
“அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டியதில்லை, வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்தாலே போதும். ஆனால் ‘500 கோடி பறிமுதல், கோடிக்கணக்கில் ஊழல்’னு வர்ற செய்தியெல்லாம் அதிர்ச்சியா இருக்கு. ‘பொறுத்தது போதும்’ என்பதுதான் இன்றைய காலகட்டம். நியூஸ் பேப்பரில் சந்தோஷமான செய்தியை முதல்பக்கத்துல பார்த்து வெகுநாளாச்சு. அதை எப்ப சந்தோஷமா சிரிச்ச முகத்தோட படிக்கிறோமோ, ‘என் சமூகம் நல்லா இருக்கு’னு அன்றைக்குத்தான் சொல்லுவேன்.

“அரசியல்ல உங்களோட பிளான் என்ன?”
“ஷூட்டிங், வீடுனு போயிட்டிருந்தா எல்லாமே நல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கும். வெளியில போய் மக்களிடம் பேசும்போதுதான் இவ்வளவு பிரச்னைகள் இருக்கான்னு தெரியவருது. எட்டு வழிச்சாலைனு சொல்றாங்க. ஆனா ஏன் அந்தப்பகுதி மக்களின் கருத்தைக் கேட்கலை? காசுக்காக அரசியல் பண்ணாம, மக்கள் நலனை மனசுல வெச்சுப் பண்ணும்போதுதான் அது உண்மையான அரசியலா இருக்கும். அதைநோக்கித்தான் என் பயணம் இருக்கும்.”
ம.கா.செந்தில்குமார்