
சினிமா
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார், அபிஷேக் பச்சன். சென்னை எஃப்.சி அணியின் துணை உரிமையாளராகவும், ப்ரோ கபடி லீக் ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். ஃபுட் பால் சீசனுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.
“உங்களுக்கு இங்கே நிறைய ரசிகர்கள் இருக்காங்க. நேரடித் தமிழ்ப் படத்துல உங்களை நாங்கள் பார்க்க வாய்ப்பிருக்கா?”

“வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். என்னைவிட ஐஸ்வர்யாதான் தமிழ் ரசிகர்களோடு கனெக்டடா இருப்பாங்க. நாங்க நண்பர்களா இருந்த காலத்துல இருந்தே தமிழ் சினிமா பற்றி என்கிட்ட அதிகம் பேசுவாங்க. அவங்களுக்குத் தமிழ்நாட்டுல ரசிகர்கள் அதிகம். சென்னைக்கு வந்தா ஊர் சுத்திப் பார்க்கணும்னு விருப்பப்படுவாங்க. ஆனா, நான்தான் அவங்களை எங்கேயுமே கூட்டிட்டுப் போகமாட்டேன். ‘குரு’ படத்தோட ஷூட்டிங் மதுரைல நடந்தப்போ, மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் கட்டாயம் போகணும்னு அடம்பிடிச்சாங்க. இதுவரை தமிழ்நாட்டுல நாங்க சுத்திப் பார்த்த இடம்னா, அது மீனாட்சி அம்மன் கோயில் மட்டும்தான்.”
“அப்பா அமிதாப் பச்சனின் பயோபிக் எடுத்தா, அதுல உங்களைத் தவிர வேற யார் ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும்னு நினைக்குறீங்க?”
“சத்தியமா வேற யாரையும் அந்தப் படத்துல நடிக்க விடமாட்டேன். அப்பா கதாபாத்திரத்துல நடிக்க அவரை மாதிரி சாயல்ல ஹீரோ வேணும். அவரோட பையனான நான்தான், அதுக்கு நல்ல சாய்ஸ்.”
“மகள் ஆராதனாவை சினிமாவில் நடிக்க அனுமதிப்பீங்களா?”

“அது அவளுடைய விருப்பம். அவளுக்கு என்ன ஆகணும்னு விருப்பமோ, அதுக்கு நானும் ஐஸ்வர்யாவும் துணை நிற்போம். அவளோட அம்மா, அப்பா, தாத்தா எல்லோரும் சினிமாவுல எப்படிப்பட்ட பர்சனாலிட்டினு இப்போ அவளுக்குத் தெரியாது. சின்னக் குழந்தைங்க அவ... நல்லா டான்ஸ் ஆடுவாள், அவ்ளோதான்.”
“கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்கிறீங்க. அதைப்பற்றி..?”
“ஆமா, ‘ராவண்’ படத்துக்குப் பிறகு ‘குலாப் ஜாமுன்’ படத்துல சேர்ந்து நடிக்கிறோம். இது ரொமான்டிக் காமெடி மூவி. அறிமுக இயக்குநர் சர்வேஷ் மீவாரா இயக்குறார். ‘மன்மர்ஸியான்’ படத்துல என் கதாபாத்திரத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துச்சு. அந்த மாதிரி இந்தப் படமும் வெற்றியடையணும்னு விரும்புறேன்.”

“ஸ்போர்ட்ஸ்ல உங்களுக்கு ஆர்வம் எப்படி... குறிப்பா, சென்னை அணியின் துணை உரிமையாளரா இருக்கிறதுக்கான காரணம் என்ன?”
“சின்ன வயசுல இருந்தே எனக்கு ஃபிட்னெஸ்ல ஆர்வம் அதிகம். ஸ்கூல் படிக்கும்போது அதிகாலையிலேயே அப்பா என்னை எழுப்பிவிட்டு ரன்னிங் போகச் சொல்வார். கால்பந்து ரொம்பப் பிடிக்கும். அதுல, சென்னை டீம்தான் கெத்து. ரொம்ப ஸ்ட்ராங்கான டீம். அவங்களை நம்பிக் களமிறக்கலாம்னுதான் இந்த டீமை செலக்ட் பண்ணுனேன். சீக்கிரமே உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.”
சுஜிதா சென்