
“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”
“இந்தப் பயணத்துல நிறைய மறக்க முடியாத நினைவுகள். ஆனா, அதைத் திரும்பிப் பார்த்து அசைபோடுற அளவுக்கு எனக்கு நேரமில்லை. எல்லாரும் சேர்ந்து உருவாக்கி வெச்சிருக்கிற இந்த பிராண்ட் பிம்பத்துக்கும் தனிப்பட்ட எனக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அது யார்யாரோ உருவாக்கி வெச்சது. அதையெல்லாம் சுமந்துட்டுத் திரியக்கூடாது; கடந்து போயிடணும். அதையே நினைச்சுட்டிருந்தா தேங்கி நின்னுடுவோம். அவ்வளவுதான்.”

`‘பல்வேறு மொழிகள், வெவ்வேறு வகை சினிமாக்கள், நிறைய மாணவர்கள்னு இந்திய சினிமாவை மாற்றியமைச்சதுல உங்களுக்கும் பெரிய பங்குண்டு. இந்தப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?” என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில்சொல்கிறார் பி.சி.ஸ்ரீராம். இவரும், ஒளியின் தன்மையை இவரிடம் கற்றவர்களும்தாம் இன்று இந்திய சினிமாவின் பிரதான ஒளி ஓவியர்கள். ஒரு மாலைப்பொழுதில் அவரோடு நடந்த உரையாடலிலிருந்து...

“ ‘பேரன்பு’ பார்த்துட்டு ஆடிப்போயிட்டேன். அவுட் ஸ்டாண்டிங் படம். ராம் படத்தை எங்கயோ கொண்டுபோயிட்டார். மம்மூட்டி பண்ணின அந்தக் கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலை. இதேபோல யாரு எதுன்னு சொல்லாம எல்லாத்தையும் சொன்ன ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’யில நம்மளை ஏற்றி இறக்கின லெனின் பாரதின்னு இவங்களை யெல்லாம் பார்க்கும்போதுதான் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும்னு எனக்கு ஆர்வம் வருது. இப்படி இப்ப வர்ற இயக்குநர்கள்கிட்ட நல்ல எனர்ஜி இருக்கு. பிரமாதமான கன்டென்ட்டோட வர்றாங்க. ஆனா, படத்தை வியாபாரம் பண்ணத்தான் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. மலையாளம், தெலுங்குல இந்தப் பிரச்னை இல்லை. சினிமாவையும் அரசியலையும் கலந்ததுதான் இங்க இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம்னு நினைக்கிறேன்.”

“உங்களோட அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ்?”
“வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு ஒரே சமயத்தில் மூன்று மொழிகள்ல எடுக்கப்பட்ட ‘ப்ரானா’ன்னு ஒரு படம். ஜனவரி 18-ம் தேதி ரிலீஸ் ஆகுது. அடுத்து இயக்குநர் விக்ரம் குமார் இயக்கும் நானி நடிக்கும் தெலுங்குப் படம். இதோட படப்பிடிப்பு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குது. அதைத்தொடர்ந்து பால்கி இயக்கும் இந்திப்படம், இவை தவிர இந்த வருட இறுதியில் ஒரு தமிழ்ப்படம்.”

“ ‘ப்ரானா’ படம் எப்படி இருக்கும்?”
“இயக்குநர் வி.கே.பிரகாஷுடன் இதற்கு முன் எனக்கு பெரிய பழக்கம் இல்லை. அவரும் இதில் நடிக்கும் நித்யாமேனனும் பேசறப்ப என் பெயர் அடிபட்டிருக்கு. பிறகு பிரகாஷ் என்னை நேர்ல சந்திச்சு ப்ரானா படத்தின் ஐடியாஸ் சொன்னார். ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே நடிக்கும் படம்ங்கிற அந்த ஐடியா எனக்குப் பிடிச்சிருந்தது. மோகன்லால்-ராதிகா நடிச்ச ‘கூடும் தேனீ’க்குப்பிறகு நான் பண்ற மலையாளப் படம் இது. ஒரே சமயத்தில் மூணு மொழிகள்ல 37 நாள்ல ஒரே ஷெட்யூல்ல எடுத்து முடிச்சோம்.”
“‘ப்ரானா’ எதைப்பற்றிப் பேசுற படம்?”
“இயக்குநர் பிரகாஷ் ‘ப்ரானா’ பட ஒன்லைனைச் சொன்னதுமே எனக்கு கௌரி லங்கேஷ்தான் நினைவுக்கு வந்தாங்க. ஆனா, அவங்களுக்கும் இந்தக் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஓர் இந்திய ஆங்கில எழுத்தாளர். சகிப்புத்தன்மை குறைவான இந்தியச் சூழல்ல புத்தகத்தை எதிர்க்கிறது, மிரட்டுறதுன்னு அவங்க எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்புது. அந்தச் சமயத்துல, வெகுநாளா பூட்டிக்கிடக்கும் வீடு பற்றின ஒரு விளம்பரத்தை அவங்க பார்க்குறாங்க. எழுத்து, எதிர்ப்புன்னு போகுற வாழ்க்கையிலிருந்து கொஞ்சநாள் விலகித் தனித்திருப்போம்னு அந்த வீட்டுக்குக் குடிபோறாங்க. அந்த வீட்ல அமானுஷ்யமா சில விஷயங்கள் நடக்குது. ஆரம்பத்தில் அதை நம்பாத அந்த எழுத்தாளர், பிறகு, ‘இந்த வீட்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்ப்போமே’ன்னு நினைச்சு அந்த வீடு முழுக்க கேமராக்களை செட் பண்ணி வைக்கிறாங்க. அந்தக் கேமராக் காட்சிகளின் வழியே அந்த வீட்ல நடந்த, நடக்கும் விஷயம் என்னன்னு சொல்றதுதான் ‘ப்ரானா’ படத்தின் கதை.”

“கதை திரும்பத் திரும்ப அந்த ஒரே ஒரு கதாபாத்திரத்தையே சுற்றி வரும்போது ரசிகர்களுக்கு போரடிக்காதா?”
“இரண்டு நாளுக்குப்பிறகு ஒரே ஆளை ஷூட் பண்றது கஷ்டமா இருக்குமோன்னு எனக்கும் தோணுச்சு. ஆனால், கதையின் தன்மை புரிஞ்சதனால அதன் ஓட்டத்தோடயே டிராவல் ஆயிட்டேன். அது எனக்கு வேறமாதிரியான அனுபவமா இருந்தது. இதில் அந்த எழுத்தாளரா நித்யா மேனன் நடிச்சிருக்காங்க. அவங்க மிகச்சிறந்த நடிகை. அவங்க இல்லைனா வி.கே.பி இந்தப் படத்தையே எடுத்திருக்கமாட்டாரோனுதான் நினைக்கிறேன். படம் பண்ணினதுக்குப் பிறகு நித்யாவைத் தவிர வேறு யாரையும் அந்தக் கேரக்டருக்கு நினைச்சுப்பார்க்க முடியலை. படத்தில் சில இடங்களில் யாரோ சிலர் நித்யாவுடன் போனில்பேசுவது போல வாய்ஸ் ஓவர் வரும். அந்த வாய்ஸ் ஓவருக்கு மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் நானி, கன்னடத்தில் சந்தீப் மூவரும் பேசியிருக்காங்க. இது ஒரு மணிநேரம் 37 நிமிஷம் ஓடக்கூடிய படம். இதில் ரசூல் பூக்குட்டியின் லைவ் சரவுண்ட் சிங்க் சவுண்ட் புது முயற்சி. ரொம்பவே திருப்தியா வந்திருக்கிற படம்.”

“லைவ் சரவுண்ட் சிங்க் சவுண்டுல என்ன ஸ்பெஷல்?”
``பல இந்திப் படங்கள்ல லைவ் சவுண்டுதான் பண்றாங்க. இங்க கமல் சார், மணிரத்னம்லாம் தங்களோட பல படங்களுக்கு லைவ் சவுண்ட் பண்ணினாங்க. ஆனா, தமிழ் தெரியாத வேறொருத்தரை டப்பிங்குக்காக நம்பி இருக்கிற ஹீரோயின் பலர் இருக்கிறதால தமிழ்ல லைவ் சவுண்ட் குறைவு. ஆனால், இதில் அந்த லைவ் சவுண்டுடன் அந்தச் சூழலில் கேட்கும் ஒலியும் சேர்ந்து பதிவாகும். அதுதான் லைவ் சரவுண்ட் சிங்க் சவுண்ட். இது நாமளும் அந்தச் சூழலில் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். அடர்ந்த காட்டுக்குள் தனியாக இருக்கும் வீடுங்கிற இந்தக் களத்தை நெருக்கமா உணரவைக்க இந்த சவுண்ட் பெரிய பலம்.”
“மிஷ்கினுடன் ‘சைக்கோ’ படத்தில் வேலை செய்ற அனுபவம் எப்படி இருக்கு?
“மிஷ்கின் என் நண்பர். எப்போதும் சினிமா சினிமானு இருக்குற ஆள். ‘சைக்கோ’வில் கொஞ்சம்தான் ஷூட் பண்ணியிருக்கோம். எடுத்ததுவரை எனக்கு ரொம்பத் திருப்தியான படம். அந்தப் பயணத்தைப் பற்றிப் பேச இன்னும் கொஞ்சம் நாள்கள் போகணும்.”
“அரசியல் பத்திப் பேசுவோம்... `இனி சினிமாக்காரர்கள் 100 வருஷம் அரசியலுக்கு வரக்கூடாது’ன்னு சொல்லியிருந்தீங்களே...”

``அரசியலுக்கு வர்றதுக்கு எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. யார் வேணும்னாலும் வரலாம். ஆனா சி.எம். ஆகுறதுக்கான தகுதியே சினிமாவில் ஹீரோவா இருக்கணும்ங்கிறமாதிரி ஆக்கிட்டாங்க. அந்த சினிமா மாயை இப்ப இங்க தகர்ந்திடுச்சு. சினிமாவை சினிமாவாதான் பார்க்கிறாங்க. தான் ரசிக்கிற ஒரு நடிகர், சினிமாவில் இருக்கிறதாலதான் கொண்டாடறாங்க. ஆனா தமிழ்நாடு அளவுக்கு வேற எந்த மாநிலத்துலயும் சினிமாவும் அரசியலும் ஒண்ணா இல்லை. இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது என்பது என் கருத்து.”

“இன்றைய சூழல்ல மக்கள் எதுலயுமே பிடிப்பு இல்லாம இருக்காங்களோன்னு தோணுது. பத்தோட பதினொண்ணா எல்லாத்தையும் கடந்து போயிடுறாங்களே...”
``இது இந்தியாவுல மட்டுமல்ல, உலகம் முழுக்க நடக்குது. ஃபேஸ்புக் உபயத்தால் தகவல்கள்சூழ் உலகத்துல இருக்கோம். எக்கச்சக்க தகவல்கள். இதனால எல்லாருக்கும் தனிப்பட்ட வகையில் ஆகப்பெரிய சுதந்திரம் கிடைச்சிட்டதா நினைக்கிறாங்க. ஃபேஸ்புக் பக்கத்துல தன் கருத்தைப் பதியுறாங்க. முன்னெல்லாம் பார்க்க, படிக்க, தேட இவ்வளவு விஷயங்கள் கிடையாது. பத்து விஷயங்கள் நடக்க வேண்டிய இடத்தில் பத்தாயிரம் விஷயங்கள் நடக்குது. இன்பர்மேஷன் அதிகமாக அதிகமாக அதைவிட அதிகமா டெலிட் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கோம். ஞாபகத்தில் வெச்சிக்கிறமாதிரி வாழ்க்கையில அவ்வளவு இல்லையோன்னு நினைக்கிறேன்.
மொதல்லல்லாம் படிச்ச புத்தகம், பார்த்த படம்னு நம் பேச்சு வெகுநாளைக்கு அதைச்சுற்றியே இருக்கும். ஆனா இப்ப, படிச்சு, பார்த்ததை மனசுக்குக் கொண்டுபோறதுக்குள்ள வேறொரு வைரல் செய்தி வந்துடுது. இது தடுக்க முடியாதது. இப்ப தவறான மனிதர்கள்கிட்ட அதிகாரம் இருக்கிறதால இந்திய அரசியலும் சரியில்லை. அதனால பிடிப்பு இல்லாத மாதிரி தெரியுது. இது ஒரு டிரான்சிஷன் பீரியட். ஆனா, சூழல் ஆரோக்கியமாக மாறுகிற நாள் வெகுதொலைவில் இல்லை.”
ம.கா.செந்தில்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்