
சினிமா... சீரியல்... சயின்டிஸ்ட்!
‘வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் ‘தடம்’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார் வித்யா பிரதீப். இதற்கு முன் ‘சைவம்’, ‘பசங்க 2’, ‘களறி’ , மாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‘தடம்’ படமே வித்யாவுக்கு அழுத்தமான தடம் பதிக்க உதவியிருக்கிறது. வித்யா, ‘நாயகி’ நெடுந்தொடரின் நாயகியும்கூட.
``போலீஸ் கேரக்டரில் இதுவரை பலரும் நடித்திருக்கிறார்கள். நாம் அதில் என்ன வித்தியாசம் காட்டுவது என்ற பயம் இருந்தது. இயக்குநர் மகிழ் திருமேனி என்னை அந்தக் கேரக்டருக்குத் தேர்வு செய்வதாகச் சொல்லி, பெண்களுக்கான ‘கேர்ளி’ விஷயங்களை வெளியே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். அவர் கொடுத்த தைரியம், எனக்குள் இருந்த பயத்தைப் போக்கியது.”
‘’சினிமாவில் நடித்துக்கொண்டே சீரியலிலும் கவனம் செலுத்துகிறீர்களே... எப்படி?”
‘’சீரியல் ஷூட்டிங், மாதத்தில் பத்து, பதினைந்து நாள்கள் இருக்கும். மற்ற நாள்களில் சினிமாவில் நடிக்கலாம் என்பதுதான் என் விருப்பம். சீரியல், சினிமா ஷூட்டிங் இல்லாத நாள்களிலும் வேலைக்குப் போகிறேன்.”
‘’என்ன வேலை?’’
“நான் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் ஜூனியர் சயின்டிஸ்ட். என் ஆய்வுகள் எல்லாம் கண்கள் பற்றியது. ஓக்குலர் கன்ஸ்ட்ரிக்டிவ் டிஸ்ஸாடர் (Ocular Constrictive Disorder) பிரச்னை உள்ளவர்கள் பற்றிய அனலைசேஷன் பற்றிப் படித்திருக்கிறேன். என்னுடைய ஸ்பெஷலை சேஷன், ஸ்டெம்செல் பயாலஜி (Stem Cell Biology). இது பார்ட் ஆப் பயோ டெக்னாலஜி (Part of Biotechnology Stem Cells). என் ஆய்வை முடிக்க இன்னும் ஒரு மாத காலம் தேவையாக இருக்கிறது. அதற்குள் விளம்பரம், படங்கள், சீரியல் என ஓடிக்கொண்டே இருக்கிறேன்.’’

“இவ்வளவு வேலைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?”
“டைம் மேனேஜ்மென்ட் கடைப்பிடித்தால், எல்லாமே சாத்தியம்தான். கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த நேரத்தை, தூங்கவும், ஜாலியாக ஊர் சுற்றவும், ஷாப்பிங் செல்லவும் பயன்படுத்துகிறோம். அப்படிச் செய்யாமல், இருக்கும் வேலைகளை முடித்தால், அடுத்தடுத்த நாள்களுக்கான வேலைகளை சிரமம் இல்லாமல் முடிக்கலாம். பல விஷயங்களைச் சாதிக்க இது எளிய வழி.”
“ ‘நாயகி’ தொடர் அனுபவம் எப்படி இருக்கு?”
“சீரியலைப் பார்த்துப் பலரும் பாராட்டு கிறார்கள். ‘ஆனந்திமா... கஷ்டமா இருக்கு. எப்படி இவ்வளவு கஷ்டத்தைத் தாங்குறீங்களோ, பெரிய வீட்டுப் பெண் வேலைக்காரியா இருக்கீங்களே’ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டுப் பேசுறாங்க. அந்த ஆனந்தி கேரக்டர் இப்போது எனக்குள்ளும் ஊறிப்போயிடுச்சு. ஆனந்தியைப் பொறுத்தவரை, கேரிங், லவ்விங்கான பெண். அவளை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது.
இதுவரை காட்டப்பட்டிருப்பது, ஒரு வேலைக்காரிப் பெண்ணாக! இனிமேல்தான் நிறைய விஷயங்கள் காட்டப்பட இருக்கிறது. இயக்குநர் குமரன் சார் அதையெல்லாம் சொல்லும்போது ஆச்சர்யமாக இருந்தது. அந்த ஆச்சர்யம், தொடரைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கும் இருக்கும்!
விகடன் டெலிவிஸ்டாஸ், சன் டி.வி, இயக்குநர் குமரன் சார் - இந்தக் காம்போதான் ‘நாயகி’யின் வெற்றிக்குக் காரணம். குமரன் சாரைப் பொறுத்த வரை, ரியலிஸ்ட்டிக்காக இருக்கவேண்டுமென்று மெனக்கெடுவார். தொடரைப் பார்க்கிறவர் களுக்கு, பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்கள் போல இருக்கவேண்டுமென்று நினைப்பார். அதனால், அதற்கான ஸ்பேஸை எனக்குக் கொடுத்திடுவார். அதனாலோ என்னவோ, நான் என்ஜாய் பண்ணி நடிப்பேன்.”
‘’கல்யாணம்?’’
‘’கமிட் ஆகிட்டேன். ஆனால், யார் அவர் என இப்போதைக்குச் சொல்லமாட்டேன். நான் 100% ரொமான்ட்டிக்கான ஆள். என் சுதந்திரத்தை மதிக்கும் காதலர் அவர்.”
- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: க.பாலாஜி