பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இன்றி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் படம் உருவாக்கப்பட்டது. கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மெழிகளிலும் பரவலாக கவனம் பெற்றது படம். இதையடுத்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. படம் ஏப்ரல் 14 வெளியாகும் என முன்பே அறிவிப்பு வந்தது. சமீபத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமும் ஏப்ரல்-13 -ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதையொட்டி பீஸ்ட் படத்துக்கும் கேஜிஎஃப்-2 படத்துக்கும் இடையேதான் போட்டி என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இன்று கேஜிஎஃப்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவினை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது பேசிய கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷிடம் ஏப்ரல் 13-ம் தேதி விஜயின் பீஸ்ட் படம் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பியபோது, "எப்போதும் இரண்டு படங்கள் வெளியாகும்போது கே ஜி எஃப் Vs பீஸ்ட் என்று சொல்லாதீர்கள் கே ஜி எஃப் மற்றும் பீஸ்ட் என்று சொல்லுங்கள். ஏனென்றால் இது தேர்தல் கிடையாது தேர்தலில்தான், ஒரு ஓட்டு போட முடியும். ஒருவர் வென்றால் மற்றொருவர் தோற்கவேண்டும். இது சினிமா. விஜய் ஒரு பெரிய நடிகர். எனவே நானும் பீஸ்ட் படத்தைப் பார்ப்பேன். என்படத்தையும் பார்ப்போம். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" எனக் கூறியிருக்கிறார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
