
“காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி ஒரு பாத்திரத்தைப் பண்ணிடணும் சார்…” என்கிறார் அகத்தியன்!
விஜய்யின் ‘பீஸ்ட்’, கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிற அளவுக்குப் படத்தின் ரிசல்ட் அமையாவிட்டாலும், இயக்குநர் நெல்சன்மீது விஜய்க்கு எவ்வித வருத்தமும் இல்லையாம். காரணம் நெல்சன், விஜய்க்காக முதலில் சொன்ன கதை வேறாம். ‘பீஸ்ட்’ கதைக்களத்தைச் சொல்லி, ‘இதை மையமாக வைத்துக் கதை பண்ணுங்க…’ எனச் சொன்னதே விஜய்தானாம். அதனால், “படத்தின் எதிர்மறை விமர்சனங்களைப் பற்றி வருத்தப்பட வேண்டாம்” எனச் சொல்லி நெல்சனை வீட்டுக்கே அழைத்துப் பேசினாராம் விஜய். இதனால், நெகடிவ் விமர்சனங்களைக் கடந்து, ரஜினி படத்துக்கான கதை விவாதத்தில் உற்சாகமாக இறங்கிவிட்டார் நெல்சன்!
‘டாணாக்காரன்’ படத்தில், போலீஸ் பயிற்சி சித்ரவதைகள் தாங்காமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் பாத்திரத்தில் நடித்து, கவனம் பெற்றிருக்கிறார் நடிகர் அகத்தியன். ‘ராட்சஷி’, ‘வலிமை’ படங்களில் நல்ல பாத்திரங்களில் நடித்த அகத்தியனுக்கு ‘டாணாக்காரன்’ வெற்றிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. “காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி ஒரு பாத்திரத்தைப் பண்ணிடணும் சார்…” என்கிறார் அகத்தியன்!



சுட்டெரிக்கும் வெயிலில் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் அஜித். ஹைதராபாத்தில் மூன்று மாதங்களாகப் போடப்பட்டிருந்த பேங்க் செட்டுக்குள்தான் முக்கால்வாசி ஷூட்டிங் பிளான் பண்ணப்பட்டிருக்கிறதாம். அதனால், பேங்க்கின் பல அறைகளில் ஏ.சி வசதி செய்துகொடுத்து அஜித்தை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்களாம். தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்கிற திட்டத்தோடு மொத்த படக்குழுவும் பரபரப்பாக இயங்கிவருகிறது!
கார்த்தி நடிப்பில் ‘விருமன்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கும் இயக்குநர் முத்தையா, அடுத்து கமலுக்காகத் தீவிர கதை விவாதத்தில் இருக்கிறார். இதற்கிடையில் சொந்தப்படத் தயாரிப்பிலும் இறங்குகிறார். தன் அக்காள் மகன் கார்த்தியை இயக்குநராகக் களமிறக்கும் முத்தையா, தெலுங்கில் ஹிட்டடித்த படம் ஒன்றின் கதை உரிமையை வாங்கி அப்படியே தமிழில் இயக்கச் சொல்லியிருக்கிறாராம். கதாநாயகனாக விக்ரம் பிரபுவை ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். அடுத்தடுத்து சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் முத்தையா!
உஷ்...
சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும், படப்பிடிப்புக்கான தேதியை ஒதுக்குவதில் அநியாயக் குளறுபடி செய்கிறாராம் பிரகாஷ நடிகர். “சம்பள விஷயத்தில்கூட படத்துக்குத் தக்கபடி குறைத்துக்கொள்ளும் நடிகர், ஷூட்டிங் குளறுபடிகளுக்கு மட்டும் முடிவுகட்டினால் கொண்டாடப்படும் நாயகனாக இருப்பார்” எனக் கும்பிடுகிறது கோடம்பாக்கம். #ஏன் செல்லம்?