
தங்களின் செல்ல நாய்க்குட்டியான ‘ஹஷ்’ஷின் முதல் பிறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடி யுள்ளனர் நாகசைதன்யா - சமந்தா தம்பதியினர். இதற்கு முன் இவர்கள் வளர்த்த ‘புகாபூ’ என்ற நாய்க்குட்டி, பார்வோ வைரஸால் இறந்துவிட்டது. அதனால் மிகவும் வருத்தமடைந்த சமந்தா, தான் அதை சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனக் கதறி அழுதிருக்கிறார். ‘இனி நாய்க்குட்டியே வளர்க்க வேண்டாம்’ என்றிருந்த சமந்தாவுக்கு, கணவர் நாகசைதன்யா பரிசாகக் கொடுத்ததுதான் இந்த ஹஷ். கால்நடை மருத்துவர்கள், நண்பர்கள் எனப் பலரின் ஆலோசனைகளைக் கேட்டு ஹஷ்ஷைப் பார்த்துப் பார்த்து கவனித்துவருகிறாராம் சமந்தா.
டோலிவுட்டில் ஹிட்டான ‘நின்னுக்கோரி’ படத்தை தமிழில் ரீமேக் செய்துவருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். அதர்வா, அனுபமா பரமேஷ்வரன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் முடித்திருக்கும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டுக்குப் பறக்க இருக்கிறது. இதற்கிடையில், சந்தானத்தை வைத்து கிராமத்துப் படம் ஒன்றையும் இயக்கி முடித்துவிட்டார் ஆர்.கண்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படம், ‘ஃபைசல் இப்ராஹிம் ரயீஸ்’ (எஃப்.ஐ.ஆர்). இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களில் ரைஸா மற்றும் ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர். தீவிரவாதத்தை மையமாகக்கொண்டு த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விஷ்ணு மற்றும் மஞ்சிமா இருவருமே எலும்பு அறுவைசிகிச்சைக்குப் பிறகு நடிக்கும் படம் இது.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம்வரும் நயன்தாரா, நடிகை ஆவதற்கு முன்பு கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது அவர் டி.வி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

‘குருப்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான ஜாய் மேத்யூவின் இயக்கத்தில் உருவாகும் பொலிடிக்கல் த்ரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஜாய் மேத்யூ இதற்குமுன் மம்மூட்டியை வைத்து ‘அங்கிள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ம்யூட்
தன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையாததால் வருத்தத்தில் இருக்கும் வெளிச்ச நடிகர், பிளாக்பஸ்டர் வெற்றிக்காகக் காத்திருக்கிறார். அதனால், தேனி இயக்குநர், அசுர இயக்குநர், ஸ்டைலிஷ் இயக்குநர், விறுவிறு இயக்குநர் என முன்னணி இயக்குநர்களின் கதையில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் சயின்ஸ் ஃபிக்ஷன் இயக்குநரிடமும் ஒரு கதை கேட்டுள்ளாராம். இவர்களில் யாருடைய கதையில் முதலில் நடித்தால் சரியாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் வெளிச்ச நடிகர்.
சிறிய படங்கள் எடுத்து அதிக லாபம் பெற்றுவரும் தயாரிப்பாளர் ஒருவரின் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளன. இந்த நிலையில், உச்ச நடிகரின் படத்தையும் விரைவிலேயே தயாரிக்க இருக்கிறாராம். அதை ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்குவதாகக் கூறப்படுகிறது. இவரின் அடுத்தடுத்த படங்களால் மற்ற தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.