
பரபரப்புக்காக எதையாவது பரப்பாதீங்க. படத்தில் ஒரே ஒரு சூர்யாதான்
* ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தயாரித்தபோதே தனக்கும் கதை ரெடி செய்யச் சொல்லி பாண்டிராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம் சூர்யா. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் சூர்யாவை அணுக, அவர் பாண்டிராஜ் பெயரை டிக் செய்ய, அட்டகாச காம்பினேஷனில் ‘சூர்யா 40’ படம் தொடங்கியது.
* சூர்யா கேட்டது பக்கா கிராமத்துக் கதை. பாண்டிராஜ் கொடுத்தது கிராமமும் சிட்டியும் சேர்ந்த மிரட்டல் கதை. முழுக்க முழுக்க வில்லேஜ் என்கிற பாதையிலிருந்து இந்தப் படத்தில் விலகியிருக்கிறார் பாண்டிராஜ்.

* பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளுக்குப் பழிவாங்கும்விதமான கதை என ஆரம்பத்தில் பேச்சு அடிபட்டது. ஆனால், ‘பொள்ளாச்சி சம்பவத்துக்கும் இந்தக் கதைக்கும் துளியும் தொடர்பு இல்லை’ என்கிறார்கள் யூனிட்டில். அதேநேரம், பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்குப் படம் `பொளேர்’ அடி கொடுக்கும் என்பதையும் மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.
* ஒளிப்பதிவுக்கு முதலில் வேல்ராஜைத்தான் பேசினார்கள். ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்துக்கும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய கமிட்டாகியிருப்பதால், திடீரென ரத்னவேலுவைக் கொண்டுவந்தார்கள். பாண்டிராஜ் - ரத்னவேலு கூட்டணி ஸ்பாட்டில் பட்டையைக் கிளப்புகிறதாம்.

* ‘டாக்டர்’ படம் ரிலீஸாவதற்கு முன்னரே தன்னுடைய ‘டான்’ படத்துக்கும் பிரியங்கா மோகனையே ஜோடியாக அறிவித்தார் சிவகார்த்திகேயன். இதுவே இண்டஸ்ட்ரியில் பெரிய பரபரப்பானது. இதற்கிடையில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனை சன் பிக்சர்ஸ் ஃபிக்ஸ் பண்ண, ‘கொடுத்துவெச்ச குமரி’ எனக் கொண்டாடுகிறது கோடம்பாக்கம். படத்தில் பிரியங்காவுக்கு சிட்டி கேர்ள் பாத்திரமாம்!
* படத்தில் சூர்யாவுக்கு டபுள் ரோல் எனச் செய்தி பரவ, அவசரகதியில் அதை மறுத்திருக்கிறார் பாண்டிராஜ். “பரபரப்புக்காக எதையாவது பரப்பாதீங்க. படத்தில் ஒரே ஒரு சூர்யாதான்” என விளக்கம் கொடுத்தார். தங்கைக்காகப் போராடும் அண்ணன், காதலிக்காக உருகும் காதலன் என நடிப்புதான் இருவிதமாம்; பாத்திரம் ஒன்றுதானாம்!

வேட்டி, சட்டையில் சூர்யா வாளுடன் செல்வதுபோல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக, ‘இந்த மாதிரி மாஸைத்தான் எதிர்பார்த்தோம்’ என பாண்டிராஜை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். ‘ஆக்ஷன் களத்திலும் அசத்துகிற ஆள்தான் பாண்டிராஜ்’ என்பதை நிச்சயம் இந்தப் படம் நிரூபிக்கும் என்கிறார்கள்.
* கடவுள் பெயர் ஒன்றைத்தான் படத்தின் டைட்டிலாக முடிவு செய்து வைத்திருந்தாராம் பாண்டிராஜ். சமீபத்தில் வெளியான ஒரு வெற்றிப் படத்தில் வில்லன் பாத்திரத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டு பெரிதாக ரீச்சானதால், அதே தலைப்பைவைக்க படக்குழு தயங்குகிறது. இதற்கிடையில் கடவுள் பெயர்கொண்ட அந்தத் தலைப்பை தாடிக்கார இயக்குநர் ஒருவர் பதிவு செய்து வைத்திருக்கிறாராம். ஆனாலும் அதே தலைப்புதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பாண்டிராஜ்.

* திருமணமாகி வெளியூர் போன பெண்களைச் சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டாடுவதுபோல் படத்துக்காக ஒரு திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். இதைப் பார்த்த சூர்யா, ’அருமையான சம்பிரதாயமா இருக்கே...’ என வியந்து பாராட்டியிருக்கிறார். பட ரிலீஸுக்குப் பிறகு இந்தச் சம்பிரதாயம் தமிழகம் முழுக்கப் பரவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.