
ரஜினி - நெல்சன் கூட்டணியில், அடுத்த படம் நடக்குமா நடக்காதா எனப் பலரும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். சசிகுமாருடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் பாலாஜி சக்திவேல், ‘அறம்’ கோபி நயினார் இயக்கும் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். குணச்சித்திரப் பாத்திரத்துக்கு பாலாஜி சக்திவேலின் நடிப்பு அட்டகாசமாகப் பொருந்துகிறதாம். அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளுக்கு மத்தியில், தன் மனதுக்குப் பிடித்த கதை ஒன்றை எழுதி, இயக்கவும் ரெடியாகிவருகிறார்!
இருபது வருடங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதியைக் கதையாகக் கேட்டு ஆடிப்போனாராம் த்ரிஷா. சில காலமாக நடிக்காமல் அமைதிகாத்த த்ரிஷா, கதையைச் சொன்ன அருண் வசீகரன் புதுமுக இயக்குநர் என்கிற நிலையிலும், உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மதுரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தினால், கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் ஆசைப்பட, அங்கேயே வருகிறேன் எனச் சொல்லிவிட்டாராம் த்ரிஷா. படத்தில் ஐந்து ஆக்ஷன் காட்சிகளாம்!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை முடித்திருக்கும் உதயநிதி, மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தை ரொம்பவே நம்புகிறார். “இந்தப் படத்துக்குப் பிறகு, ஐந்து வருடங்கள் கழித்துத்தான் அடுத்த படத்தில் நடிப்பேன். இடைப்பட்ட காலத்தில், அரசியல் பணிகளில் மட்டுமே தீவிரம் காட்டப்போகிறேன்” என நெருங்கிய நண்பர்களிடம் சொல்கிறாராம். அதனால், ‘மாமன்னன்’ படத்தின் தயாரிப்பு தொடங்கி, புரொமோஷன் வரை பெரிதாகச் செய்யத் திட்டமிட்டுவருகிறார்கள்!



எக்ஸ்க்ளூசிவ்: ரஜினி - நெல்சன் கூட்டணியில், அடுத்த படம் நடக்குமா நடக்காதா எனப் பலரும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன தெரியுமா... ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படத்துக்கு அவருக்கான சம்பளம் கடந்த வாரம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. நெல்சனின் சம்பளம் சுளையாக 30 கோடி. பேசிய சம்பளத்தில் நெல்சன் உறுதியாக நிற்க, சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டதாம். அதனால், ரஜினி - நெல்சன் கூட்டணி படம் பண்ணப்போவது உறுதி!
உஷ்..
‘பிடித்த கதையாக இருந்தால் நடிக்க 2 கோடிச் சம்பளம்’ என்கிறார் டெரர் கதைகளுக்குப் பெயர்போன இந்தி இயக்குநர். பிடிக்காத கதைகள் வரும் பட்சத்தில், பெரிய சம்பளம் கேட்டு, வேறுவிதமாக மறுப்பைக் காட்டுகிறாராம். சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து போன ஓர் இயக்குநர் மொக்கைக் கதையைச் சொல்ல, நான்கு விரல்களைக் காட்டித் திருப்பி அனுப்பினாராம்!