பழங்குடிகளுக்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனம் செய்யும் ஒரு குற்றம், இன்னொரு கொள்ளைக் குற்றம் எனக் குற்றச்செயல்களின் நகரமே ‘வெல்வெட் நகரம்.’
கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் நடிகை கஸ்தூரி கொலை செய்யப்பட, சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் ஃபைலைக் கைப்பற்றப் போராடுகிறார் பத்திரிகையாளர் வரலெட்சுமி. இதற்கிடையில் ஒரு கொள்ளைக்கும் பல், வரலெட்சுமி தங்கியிருக்கும் தோழியின் வீட்டுக்குள் நுழைய, இரண்டு குற்றங்களுக்கும் இடையிலான புள்ளி என்ன என்பதுதான் கதை.
பழங்குடி மக்கள் பிரச்னை, கார்ப்பரேட் நிறுவனம், ரகசிய ஃபைல் என சோஷியல் த்ரில்லராகத் தொடங்கும் படம், திருட்டு, கொலை என திசைதிரும்பும் த்ரில்லராக மாறுகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்க்கத் தவறியதில் படம் தடுமாறுகிறது. கூடவே, லாஜிக் ஓட்டைகளும்!

கார்ப்பரேட் நிறுவனம், பழங்குடி மக்களின் பிரச்னைகள் எல்லாம் வெறும் வசனங்களில் இருக்கின்றனவே தவிர, மருந்துக்கும் அதுகுறித்த காட்சிகள் இல்லை. அதேபோல், முதற்பாதி முழுக்கவே ‘என்னதான் நடக்குது’ எனக் குழப்பி நம்மை டயர்டாக்கும் திரைக்கதையும் இரண்டாம் பாதியின் பாதிக்கு மேல்தான் வேகமெடுக்கிறது. வெவ்வேறு சம்பவங்கள், அது அத்தனையும் ஒரு புள்ளியில் இணைந்து, முடிவை நோக்கிப் பயணிக்கும் திரைக்கதைதான். ஆனால், ஒவ்வொரு சம்பவமும், அவை இணையும் இடங்களும் ஆழமாக எழுதப்படவில்லை. இதுவே படத்தின் போதாமைக்கான பெருங்காரணம். தலைப்புக்கான காரணமும் கடைசிவரை புரியவில்லை.
வரலெட்சுமிதான் படத்தின் நாயகி என்றில்லாமல், அவரையும் ஒரு குணச்சித்திர பாத்திரம் போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஆனாலும், கிடைத்த இடங்களில் நிறைவாகவே நடித்திருக்கிறார். அவரின் தோழியாக வரும் மாளவிகா சுந்தரும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ரமேஷ் திலக்கின் நடிப்பிலும் அவ்வளவு முதிர்ச்சி. அர்ஜை, பிரகாஷ் ராகவன், கண்ணன் பொன்னையா என எல்லா நடிகர்களுமே இயல்பான நடிப்பைக் கொடுத்திருப்பது படத்தின் பெரும் பலம். திருட்டுக் கும்பலிடம் மாட்டியவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கின்றன.

பகத்குமாரின் ஒளிப்பதிவு சில இடங்களில் `அட’ சொல்லவைக்கிறது. படத்தின் ஓரளவு பரபரப்புக்கு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு முக்கியமான காரணம். சரண் ராகவனின் பின்னணி இசை தேவையான இடங்களில் கிலி கிளப்புகிறது. அச்சுவின் இசையில் டைட்டில் பாடல் அருமை. இரண்டாம் பாதியில் நடக்கும் நீண்ட சண்டைக்காட்சிகள்தான் இந்த வெல்வெட் நகரத்தைத் தாங்கி நிற்கின்றன. அவற்றை வடிவமைத்த ‘துப்பறிவாளன்’ தினேஷுக்கு டபுள் பாராட்டுகள்!
எழுத்தில் அழுத்தம் இல்லாமல்போனதால், வரைபடத்தில் இடம் கிடைக்காமல் நிற்கிறது இந்த `வெல்வெட் நகரம்!’