- ‘தேசியவிருது’ பெற்ற மகிழ்ச்சி, இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி பேச்சில் தெரிகிறது. அவர் இயக்கிய `பாரம்’ சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசியவிருதினை வென்றுள்ளது.

“உங்களைப் பற்றி?”
“புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல எடிட்டிங் படிச்சேன். 1987-லிலிருந்து மும்பையில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். ‘ஓம் தர்-பி-தார்’, ‘பெர்ஸி’, ‘பாம்பே பாய்ஸ்’, ‘போபால் எக்ஸ்பிரஸ்’ என ஆவணப்படங்கள், டிவி சீரியல்களுக்கு எடிட்டிங் நான்தான். விளம்பரத்துறையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். வெவ்வேறு ஜானர்களில் 20-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியிருக்கேன். 2007-ல்தான் சினிமாவுக்கான கதையை எழுதித் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன். 2009-ல் நான் எழுதி, இயக்கிய ‘கங்கோபாய்’ படம் ஆம்ஸ்டர்டாம் மற்றும் லொக்கார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வானது. 2013-ல் இந்தி, மராத்தியில் படம் ரிலீஸானது. அதுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குப் படத்தை அனுப்பினோம். இப்போ, நான் இயக்கிய ‘பாரம்’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு.”

“ ‘பாரம்’ படம் என்ன களம்?”
“இது என்னுடைய இரண்டாவது படம். இந்தியன் பனோரமாவில் உலக அளவில் திரையிடப்பட்டது. 2018-ல் ‘ICFT-UNESCO Gandhi Medal’ங்கிற விருதுக்கு இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படம், இப்போ தேசிய விருது வாங்கியிருக்கு. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம் இது. சில காரணங்களால பெற்றோர்களை அவங்க பிள்ளைங்களே ‘கருணைக்கொலை’ங்கிற பெயர்ல கொடூரக் கொலை பண்றாங்க. அதைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்கோம். 2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை. வருடத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இப்படி சாகுறாங்க. இது உலகெங்கும் வெவ்வேறு இடங்கள்ல வேற வேற பெயர்ல நடக்குது.”
“நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி?”
“இயக்கம், எடிட்டிங், தயாரிப்பு எல்லாத்தையும் நானே பார்த்துக்கிட்டேன். அர்த்ரா ஸ்வரூப் இந்தப் படத்தை இணைந்து தயாரிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு ஆவணப்பட இயக்குநர். ஜெய்ந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ராகவ் மிர்தத் வசனம் எழுதியிருக்கார். ராகவ்வும் நானும் இதுவரை நேர்ல சந்திச்சதே இல்லை. வாட்ஸப்லதான் வேலை பார்த்தோம். சுகுமார் சண்முகம் லீடு ரோல்ல நடிச்சிருக்கார். ராஜு, ஜெயலக்ஷ்மி, ஸ்டெல்லா கோபி முக்கிய கேரக்டர்ல வருவாங்க.”

“ஏற்கெனவே நீங்க ஒரு தேசியவிருது வாங்கியிருக் கிறதா கேள்விப்பட்டோமே?”
“ஆமா. ‘The Eye of the Fish - The Kalaris of Kerala’ என்ற என் ஆவணப்படத்துக்காக 2004-ல் எனக்கு தேசியவிருது கிடைச்சது. ‘பாரம்’ படத்துக்காகக் கிடைச்சிருக்கிறது என்னுடைய இரண்டாவது விருது.”

“சுயாதீனத் திரைப்படங்களை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க, சினிமாத் துறை எப்படிப் பார்க்குது?”
“சுயாதீனத் திரைப்படங்கள் புதிய பாதைகளை உருவாக்கிப் பயணிக்க வழி செய்யும். இப்போது நாம் பார்க்கும் சினிமாவில் பேசும் விஷயத்தையும், அத்தகைய சினிமாவை நாம் கையாளும் விதத்தையும் சுயாதீனத் திரைப்படங்கள் மாற்றும். இந்தத் திரைப்படங்கள் நடிகர்களின் ‘ஸ்டார் வேல்யூ’வைப் பார்க்காமல், திறமையானவர் களுக்கு வாய்ப்பையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் கொடுக்கும். இன்றைய சினிமா ரசிகர்கள் நல்ல கதைகளுக்கு ஏங்குகிறார்கள். அதனால்தான் சுயாதீனத் திரைப்படங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சுயாதீனத் திரைப்படங்கள் அவசியம் தேவை. அதை கமர்ஷியலாகவும் சாத்தியப்படுத்தலாம்!”
“தேசியவிருது 2018 அறிவிப்பில் பல நல்ல தமிழ்த் திரைப்படங்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை என எழுந்திருக்கும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீங்க?”
“மக்கள் ‘பாரம்’ படத்தைப் பார்த்தால், நல்ல படத்திற்குத்தான் விருது கிடைத்திருக்கிறது என்பதை உணர்வார்கள்.”