இன்றையக் காலத்தில் சினிமா திரை, நாம் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனம் மற்றும் வீட்டின் தனித் திரையரங்குகள் வரை வந்துவிட்டது. இருப்பினும், பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்துக் காட்சித் தரும் திரையரங்கத் திரையில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. இதில் ஐமேக்ஸ், 3டி, டால்பி சினிமாஸ் என்று பல தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்டத்தை இன்னும் பெரிதாக்க 101.6 அடி அகலம், 64 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய சினிமா திரையை வடிவமைத்துள்ளது ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்க நிறுவனமான பிரசாத் மல்டிபிளக்ஸ் தியேட்டர். இது இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கனடாவைச் சேர்ந்த 'StrongMDI' என்ற நிறுவனம் 3டி தொழில்நுட்பத்துடன் பிரசாத் மல்டிபிளக்ஸ்கென பிரத்யேகமாக இந்தத் திரையை வடிவைத்துள்ளது. மேலும், இதில் 'Dolby CP950' சவுண்ட் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்ட புரொஜெக்ஷன் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல ஆடியோ தயாரிப்பு நிறுவனமான 'QSC' நிறுவனம் ஸ்பீக்கர் மற்றும் சவுண்ட் இன்ஜினீயரிங் பணிகளைச் செய்துள்ளது. இந்தத் திரையரங்கம் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் படங்களைத் திரையிடயுள்ளது. டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ள 'Avatar: The Way of Water' திரைப்படம் இதன் முதல் திரையிடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் இந்த பிரமாண்டத் திரையில் திரைப்படங்களைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.