
காரைக்குடியில் நடக்கிற மாதிரியான கதைக்களம். அதனால, சென்னையிலேயே பிரமாண்டமா காரைக்குடி வீடு செட் பண்ணியிருக்காங்க.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘எங்க வீட்டு மீனாட்சி’ தொடர் நாயகி ஷ்ரித்தா சிவதாஸை எங்கோ பார்த்திருக்கிறோமே எனத் தேடினால், சந்தானத்துடன் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது தெரிந்தது.
‘‘நான் கேரளா. காலேஜ் படிக்கும்போது மலையாள சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு சினிமா வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து பல படங்களில் நடிச்சிட்டிருந்தேன். அடுத்து, தமிழில் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. திடீர்னு ஒருநாள் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியலுக்காகக் கேட்டாங்க. இப்ப சின்னத்திரை, வெள்ளித்திரை என்கிற பேதமெல்லாம் இல்லைங்க. நாமளே பெரிய படங்களை ஓ.டி.டி-யில் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். நல்ல புராஜெக்ட், நல்ல டீம்... ஏன் வேண்டாம்னு சொல்லணும்னு சம்மதிச்சேன்.

காரைக்குடியில் நடக்கிற மாதிரியான கதைக்களம். அதனால, சென்னையிலேயே பிரமாண்டமா காரைக்குடி வீடு செட் பண்ணியிருக்காங்க. ஒரு பெரிய புராஜெக்ட்டில் நானும் நடிக்கிறேன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. வழக்கமான சீரியலைவிட இந்த சீரியல் வித்தியாசமா இருக்குங்கிறதை சீரியல் பார்க்கிறவங்க நிச்சயமா சொல்லுவாங்க.
சீரியல் பார்த்துட்டு ஆடியன்ஸ் பலரும் சோஷியல் மீடியாவில் எனக்கு மெசேஜ் பண்றாங்க. எல்லாரும் ‘மீனாட்சி’ன்னு கேரக்டர் பெயர் சொல்லிக் கூப்பிடுறாங்க. படத்தில் நடிக்கும்போது இந்த அளவிற்கு நேரடியா ஆடியன்ஸ்கூட கனெக்ட் ஆக முடிஞ்சுதான்னு தெரியலை. சீரியல் மூலமா நேரடியா அவங்க வீட்டுக்கே போய்டுறதனால பலரும் அவங்க வீட்டுப் பொண்ணா நினைக்கிறாங்க’’ என்றவரிடம், மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டேன்.

‘‘எனக்கு உயரத்தில் நிற்கணும்னா ரொம்பவே பயம். ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் மாடியிலிருந்து குதிக்கிற மாதிரி ஒரு சீன் எடுத்தாங்க. ‘டூப்பெல்லாம் வேண்டாம்... நீங்களே பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவு உயரத்தில் நின்னு அந்த சீனில் நடிச்சதை வாழ்க்கை முழுக்க மறக்கவே மாட்டேன். இப்போ அந்த மொமன்ட்டை நினைச்சாகூட மனசுல பயம் கலந்த பதற்றம் ஏற்படுது” என்று கைகளை உதறுகிறார் ஷ்ரித்தா.